Wednesday, November 2, 2011

இரட்சகரின் மாற்றிவிடும் தொடுதல் - பாகம் - 1

இயேசு மனதுருகி, கையை நீட்டி, அவனதை; தொட்டு: எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார். இப்படி அவர் சொன்னவுடனே, குஷ்டரோகம் அவனை விட்டு நீங்கிற்று, அவன் சுத்தமானான். - (மாற்கு 1:41-41).

இயேசுகிறிஸ்து செய்த அதிசயமான அற்புதங்களில் குஷ்டரோகியை சொஸ்தமாக்கியது ஒன்றாகும். நாம் சொல்லும்போது இயேசுகிறிஸ்து குஷ்டரோகியை சுத்தமாக்கினார் என்று வெகு எளிதாக சொல்லி விடுகிறோம், பாடி விடுகிறோம். ஆனால் குஷ்டரோகம் என்ற வியாதியை குறித்து நம்மில் அநேகர் அதிகமாக அறிந்ததில்லை. என்னுடைய சிறுவயதில் எங்கள் வீட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்களில் நாங்கள் மாத்திரமே கிறிஸ்தவர்கள். எங்கள் வீட்டுக்கு குஷ்டரோகம் பிடித்து, சுகமான ஒரு சகோதரன் வருவார். அவருடைய வீட்டிலேயே அவரை உள்ளே சேர்த்து கொள்ள மாட்டார்கள். எங்கள் தெருவில் ஒருவரும் அவரை வீட்டிற்கு அழைக்க மாட்டார்கள், சேர்த்து கொள்ள மாட்டார்கள். ஆனால் அவர் எங்கள் வீட்டிற்கு வருவார். நாங்கள் குடிக்கும் டம்ளரிலே காப்பி குடிப்பார். நாங்கள் கிறிஸ்தவர்களாக இருப்பதால் இது எனக்கு கிடைத்த பாக்கியம் என்று அவர் கூறுவார். மிகவும் தனிமைப்படுத்தப்பட்டவராக அவர் வாழ்ந்தார். இந்நாட்களிலும் அந்த நோய் அத்தனை பயங்கரமானது, வேதனைக்குரியது.
.
வேதத்தில் நாம் இரண்டு இடங்களில் குஷ்டரோகிகள் சுகமானதை குறித்து வாசிக்கிறோம். முதலாவது மாற்கு 1:40-45 வரை காணப்படுகிற குஷ்டரோகியும், பின்னர் லூக்கா 17:12-19 வரையுள்ள வசனங்களில் பத்து குஷ்டரோகிகள் சுகமானதை குறித்தும் வாசிக்கிறோம். இந்த குஷ்டரோகி சுகமானதை குறித்து வாசிக்கும்போது, கிறிஸ்துவின் அன்பும், அவருடைய மனதுருக்கமும், அவருடைய தொடுதலினால் உண்டாகும் மாற்றத்தையும் காண்கிறோம்.
.
குஷ்டரோகம் என்பது வேதாகம காலங்களில் சுகமாக்க முடியாத ஒரு வியாதியாகும். அதுவும் மறற்வர்களை மிகவும் தொற்றி கொள்ளக்கூடிய வியாதியாகும். இந்நாட்களில் அதற்கு மருந்து கண்டுபிடித்ததால் அதை சரிசெய்ய முடியும். வேதாகம காலங்களில் தொழுநோயை போல மோசமான வியாதி வேறு எதுவும் இருந்ததில்லை. அது முழு சரீரத்தையும் ஆட்கொண்டு, மனிதனை செயலிழக்க செய்யும் ஒரு வியாதியாகும். இந்த நோய் உண்டானால் பெரிய பெரிய சீழ் நிறைந்த கொப்புளங்கள் உண்டாகி முகம் விகாரமாக மாறி, ஒரு சிங்கத்தை போல தோற்றமளிக்கும். இந்த வியாதி ஒன்பது வருடங்கள் ஒரு மனிதனை சீரழித்து கடைசியில் அவன் உயிரையே குடித்து விடும். அவனது புண்ணிலிருந்து வரும் சீழ் கட்டப்படாமல், அது சரியாக பராமரிக்கப்படாததால், அதனுள் கிருமிகள் ஏற்பட்டு, அதனால், அவன் உயிரே எடுத்து விடும்.
.
வேதாகம காலங்களில் ஒரு முறை ஒரு மனிதனுக்கு தொழு நோய் இருக்கிறதென்று கண்டுபிடிக்கப்பட்டால் அவன் அந்த கிராமத்திலிருந்தே அப்படிப்பட்டவர்களுக்கென்று குறிக்கப்பட்ட இடத்திற்கு சென்று விட வேண்டும். தன்னுடைய உறவினர், மனைவி, பிள்ளைகள் யாரையும் அவன் தொட முடியாது. வெகு தூரத்தில் இருந்து தான் பார்க்க முடியும். ஒரு சுத்தமான மனிதனுக்கும் அவனுக்கும் இடையில் குறைந்தது 50 அடியாவது தூரம் இருக்க வேண்டும். அவன் பேசும்போது ஒரு துணியை அவன் வாயில் வைத்தவனாக பேச வேண்டும். யாராவது அருகில் வரும்போது தீட்டு, தீட்டு என்று சத்தமிட வேண்டும். அவனது துணியை கிழித்து கொள்ள வேண்டும். அதன் மூலம் மற்றவர்கள் அவன் தொழு நோயாளி என்று அறிந்து கொள்வார்கள். இந்த நோய் அவனது நரம்பு மண்டலத்தை தொடுவதால், அவனுக்கு எந்த உணர்ச்சியும் தெரியாது. சூடாக தொட்டாலோ, நெருப்பை தொட்டாலோ அவனுக்கு உணர்ச்சி இல்லாததால் அவனுக்கு காயம் உண்டான பின்னாலேதான் அவனுக்கு தெரியும் நெருப்பை தொட்டிருக்கிறோம் என்று.
.
இப்படிப்பட்ட தொழுநோய் பிடித்த மனிதன் இயேசுவை நோக்கி வருகிறான். இயேசுவை சுற்றி எப்பொழுதும் கூட்டம் இருந்து கொண்டுதான் இருந்தாலும், அவன் தைரியமாக கர்த்தரை நோக்கி முன்னேறுகிறான். தான் சுத்தமாக வேண்டும் என்பதே அவனுடைய ஒரே நோக்கமாக இருந்தது. கர்த்தரால் மாத்திரமே சுத்தமாக்க முடியும் என்ற அசைக்க முடியாத விசுவாசமும் அவனுக்கு இருந்தது. நினைத்து பாருங்கள், அப்படிப்பட்ட வியாதியுடைய ஒருவன் கூட்டத்தில் நுழைந்து தீட்டு தீட்டு என்று கத்தி கொண்டு வரும்போது, அச்சத்தில் மக்கள் அலறி அடித்து விலகியிருப்பார்கள். எங்களுக்கு அந்த நோய் வந்து விட போகிறது என்று பயந்து ஓடியிருப்பார்கள். அந்த தொழுநோயாளி நினைத்திருப்பான், எனக்கு ஒன்று சுகம் வேண்டும், அல்லது இந்த மக்களே என்னை கல் எறிந்து கொன்று போடட்டும் என்று!
.
ஆகவே அதை குறித்தெல்லாம் கவலைப்படாமல், அந்த மனிதன் கிறிஸ்துவின் முன்னால் வந்து முழங்காற்படியிட்டு, உமக்குச் சித்தமானால் என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும் என்று வேண்டிக்கொண்டான். பாருங்கள், அவனுக்கு தெரியும் கர்த்தரால் அவனை சுத்தமாக்க முடியும் என்று, ஆனால் அவருக்கு சித்தமுண்டா என்பதே அவனுடைய கேள்வியாயிருந்தது. இயேசு மனதுருகி, கையை நீட்டி, அவனைத் தொட்டு: எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார். குஷ்டரோகியை தொடுவது சட்டப்படி தவறு என்றாலும், இயேசு அவனை தொட்டார். அந்த கூட்டம் எல்லாம் பயந்து அவன் நம்மை தொட்டு விடப்போகிறான் என்று ஓடும்போது, மேசியாவாகிய இயேசு அவனை தொட்டார். அவரை எந்த நோயும் தொட முடியாது, அவருக்குள்ளிருந்த பரிசுத்தம், சுத்தம் அவனது நோயை குணமாக்கியது. அல்லேலூயா! (இந்த கட்டுரை நாளையும் தொடரும்)
.
செங்கடல் அவர் சொல்ல இரண்டாய் நின்றது
பெருங்கோட்டை ஒன்று தரை மட்டமானது
அவர் சொல்ல குருடரின் கண் திறந்தது
அவர் தொட குஷ்டரோகி சொஸ்தமாயினான்
..
ஜீவிக்கிறார் இயேசு ஜீவிக்கிறார்
என் உள்ளத்தில் அவர் ஜீவிக்கிறார்
துன்பத்தில் என்தன் துணை அவரே
என்னுள்ளத்தில் அவர் ஜீவிக்கிறார்

0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment