Tuesday, January 31, 2012

ஜெயங் கொடுக்கும் தேவன்


நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம். - (1 கொரிந்தியர் 15:57)

ஒரு விவசாயியும் அவருடைய நண்பரும் காட்டில் வாத்துக்களை பிடிப்பதற்காக சென்றுக் கொண்டிருந்தனர், அவர்கள் தங்கள் பேச்சைகடவுளைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது விவசாயியின் நண்பர், ‘நீர் எப்போதும் உமக்கும் சத்துருவுக்கும் இடையே நடக்கும்போராட்டத்தைப் பற்றிக் கூறுகிறீரே, நான் ஒரு கிறிஸ்தவன் கூட இல்லை. ஆனால் எனக்கு அந்த மாதிரி போராட்டங்கள் எதுவுமே இல்லையே’ என்றுக் கூறினார். 

அதற்கு அந்த விவசாயி சொனனார், ‘நாம் இப்போது வேட்டையாடப் போகிறோம், அதில் இரண்டு வாத்துக்கள் அடிபட்டு ஒன்று இறந்துப் போகிறது, மற்றது தப்பி ஓடப் பார்க்கிறது, இதில் எதை நீர் பின்தொடருவீர்’ என்றுக் கேட்டார். அதற்கு நண்பர், ‘தப்பியோடப் பார்ப்பதைத்தான், ஏனென்றால், இறந்துக் கிடப்பதை நாம் எப்போது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாமே!’ என்றுக் கூறினார். அப்போது விவசாயி, ‘சாத்தானுக்கு தெரியும், நீர் இறந்துப் போன வாத்து என்று’ என்றுக் கூறினார்.
.
கர்த்தருடைய வழிகளில் நடக்கிறவர்களை குறிவைத்து, சாத்தான் எப்போதும் தாக்குதல்களை அனுப்பிக் கொண்டே இருப்பான். ஏனென்றால் நாம் கர்த்தருக்கு என்று எதையும் செய்ய துணிந்தவர்கள் என்றும், இவர்களை விட்டு வைத்தால் உலகத்தையே கலக்கிவிட்டு வந்துவிடுவார்கள் என்றும் அவனுக்குத் தெரியும், அந்த பயத்தினால், அவன் நம்மோடு போராடிக் கொண்டே இருப்பான்.

.
ஆனால் அவன் என்றும் தோற்றுப் போனவன். அவன் ஒரு நாளும் நம்மை

ஜெயங் கொள்வதில்லை. நாம் போராடி அவனை மேற்க் கொள்வோம். ஏனென்றால் ஜெயக்கிறிஸ்து நம் பக்கம் இருக்கிறார்.
.
நான் கர்த்தரை விசுவாசித்து, அவருடைய வழிகளில் நடக்கிறேன். ஆனால் எனக்கு எத்தனை சோதனைகள், எத்தனை பாடுகள்’ என்றுச் சொல்லுகிறீர்களா? யோபு தன் காலத்தில் வாழ்நதவர்களிலே தேவனே மெச்சிக் கொள்ளும் அளவு நீதிமானாய் வாழ்ந்தான். அவனையும் சாத்தான் விட்டு வைக்கவில்லை. அவனுக்குரிய எல்லாவற்றையும் தேனுடைய அனுமதியோடே பறித்துக் கொண்டான். ஆனால், கடைசி வெற்றி யாருக்கு? நிச்சயமாக யோபுவிற்குத்தான். கர்த்தர் யோபின் முன்னிலைமையைப் பார்க்கிலும் அவன் பின்னிலைமையை ஆசீர்வதித்தார்; பதினாலாயிரம் ஆடுகளும், ஆறாயிரம் ஒட்டகங்களும், ஆயிரம் ஏர்களும், ஆயிரம் கழுதைகளும் அவனுக்கு உண்டாயின. ஏழு குமாரரும், மூன்று குமாரத்திகளும் அவனுக்குப் பிறந்தார்கள். - (யோபு 42:12,13).ஆகவே சோர்ந்துப் போகாதீர்கள்! வெற்றி நமக்குத்தான்! நீங்கள் இழந்துப் போன எல்லாவற்றையும் திரும்பப் பெற்றுக் கொள்வீர்கள், ஆமென்! தேவன் நம்பட்சத்தில் இருக்கும்போது நமக்கு விரோதமாயிருப்பவன் யார்? – (ரோமர் 8:31)
.
ஆனால் நம்முடைய போராட்டம், நாம் காண்கிற மனிதர்களோடு அல்ல, வசனம் சொல்கிறது, ‘ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு’ - (எபேசியர் 6:12). நாம் காண்கிற மக்கள் அல்ல நம் எதிரிகள். அவர்களுக்கு பின்னாக இருந்து கிரியை செய்கிற பிசாசின் தந்திரங்களே நமக்கு எதிரிகள். நாம் சாதாரண மனிதர்களோடே சண்டையிட்டு, வழக்காடி எந்தப் பிரயோஜனமுமில்லை. ஆனால் அவர்கள் நமக்கு எதிராக வரும் போது, அவர்களுக்கு பின்னாக கிரியை செய்கிற அந்தகார சக்திகளை இயேசுவின் நாமத்தில் நாம் கடிந்துக் கொள்ள வேண்டும். ஆனால் அவர்களுக்கு முன்பாக அல்ல, மனதில் கடிந்துக் கொள்ள வேண்டும். நம் ஜெபங்களில் கடிந்துக் கொண்டு ஜெபிக்க வேண்டும். இயேசுவின் நாமத்தில் உள்ள வல்லமையால் அவைகள் தோற்கடிக்கப்பட்டு; பறந்தோடிக் போகும். எந்த பெரிய போராட்டம் என்றாலும் இறுதி வெற்றி நமக்கே! ஐயோ இப்படி ஆகிவிட்டதே என்று சோர்ந்துப போகாதிருங்கள்! இயேசுவின் நாமம் என்கிற பெரிய ஆயுதம் நம் கைகளில் உண்டு. அதற்கு மேலாக எந்த அதிகாரமும் இல்லை எந்த வல்லமையும் இல்லவே இல்லை. ஆமென் அல்லேலூயா!
.
அந்தகார வல்லமைகளை
தேவ பெலத்தால் முறியடிப்பேன்
இயேசுவின் நாமம் எந்தன் பாதுகாப்பு
பயமில்லை வெற்றி எனக்கே
என்றும் பயமில்லை வெற்றி எனக்கே

Thursday, January 26, 2012

கழுகுகின் கூடு

கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள். - (ஏசாயா 40:31).
.
கழுகு கூடு கட்டுவதை பார்த்திருக்கிறீர்களா? அதை நாம் பார்த்திருக்க நியாயமில்லை. அது கட்டும் முறை மிகவும் அருமையானது.

.
தாய் கழுகு தன் கூட்டைக் கட்ட ஆரம்பிக்கும்போது, நாம் நினைத்திராதபடி, முட்களையும், சிறுசிறு கற்களையும், கிளைகளையும் கொண்டு வந்து, கட்ட ஆரம்பிக்கும். அதைக் கட்டி முடித்தப்பின், அதன் மேல், மெதுவான மிருதுவான பஞ்சு, மெலிதான இறகுகள், தான் சாப்பிட்ட மிருகத்தின் தோல் இவற்றைக் கொண்டு அதன் மேல் பரப்பி, தன் முட்டைகளை சுகமாக இருக்கும்படி, அவற்றை ஒழுங்குப்படுத்தும். பின் முட்டையிட்டு, அதை அடைக்காத்து, அது குஞ்சுகளாக வந்து, அவற்றிற்கு இரையைக் கொண்டு வந்து ஊட்டி, அவற்றை வளர்க்கும். அவை வளர்ந்து, பறக்கும் நிலையை அடைந்தவுடன், தாய்க் கழுகு தன் கூட்டை கலைக்க ஆரம்பிக்கும். குஞ்சுகள் சொகுசாக இருந்த பஞ்சு மற்றும், மெலிதான இறகுகள் எல்லாவற்றையும் எடுத்துப் போட்டு விட்டு, முட்களையும், சிறுசிறு கூர்மையான கற்களையும் வெளியே வைத்துவிடும். அந்த மெத்தைப் போன்றவை போனவுடன், குஞ்சுகளுக்கு, கூடு குத்துகிற இடமாக, அவை தங்கியிருக்க முடியாத இடமாக மாறிப் போகும். அப்போது அவை தாமாக அந்தக் கூட்டைவிட்டு பறக்க ஆரம்பித்து, தன் இரையைத் தேட ஆரம்பிக்கும். பின், அவை தங்களுக்கென்று குடும்பத்தையும், வீட்டையும் கட்ட ஆரம்பிக்கும்.
.
நம்மில் கூட சிலர், அந்த கழுகின் குஞ்சுகளைப் போல தங்களுக்கு கிடைத்த கூட்டில் சுகமாய் இருக்கவே விரும்புகின்றனர். எழுந்து பறக்கக் கற்றுக்கொள்வோம் என்ற எண்ணம் சற்றும் இல்லாதவர்களாக, பெற்றோரின் நிழலில், மற்றவர்களின் உதவியில் வாழவே விரும்புகிறார்கள்.
.
கர்த்தர் அந்த சுகங்களை எடுத்துவிட்டு நம்மை பறக்க ஆயத்தப்படுத்தினால் அவரை குற்றம் சொல்லாதிருங்கள். நாம் பறந்து நம் காலில் நிற்பதையே கர்த்தர் விரும்புகிறார், நாம் நம்மால் இயன்ற அளவு எவ்வளவு தூரம் பறந்து செல்ல முடியுமோ அவ்வளவு தூரம் பற்ந்துச் செல்வதையே விரும்புகிறார். இன்னும் சொல்லப் போனால், நாம் நம்முடைய பிரச்சனைகள், பாடுகள், போராட்டங்கள் எல்லாவற்றையும் விட்டு உயரத்தில் தேவனோடு, உறவாடி, நம்மால் இயன்ற அளவு, அவருக்குள் வளருவதையே கர்த்தர் விரும்புகிறார்.
.
கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்து போகார்கள். - (ஏசாயா 40:31) என்று வசனம் சொல்கிறது. ஆகையால், எந்த உலக காரியங்களானாலும், நம்மை அவரிடமிருந்து, பிரிக்காதபடி, அவருக்கு காத்திருந்து, புதுப் பெலனை அடைந்து, உயரே எழும்பி, அவருக்காக வாழ்வதையே கர்த்தர் விரும்புகிறார். அவருக்கு காத்திருக்கிறவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துப் போகார்கள். அவர்களுக்கு எந்த கஷ்டம் வந்தாலும் அதினிமித்தம் அவர்கள் சோர்ந்துப் போகாதபடி தங்களைக் கர்த்தருக்குள் காத்துக் கொள்வார்கள். தேவன் அவர்களை பெலப்படுத்துவார். கழுகிற்கு வயதாகி தன் பெலனை எல்லாம் இழந்துப் போகும்போது, ஒரு கன்மலையின்மேல் போய் அமர்ந்து, தன் இறகுகள் எல்லாம் விழுந்து, புதிதான இறகுகள் முளைக்கும் வரை காத்திருக்குமாம். புதிதான இறகுகள் முளைத்தவுடன், உயர எழும்பி பறக்கும். அதுப்போல கர்த்தருக்கு நாம் காத்திருக்கும்போது, அவர் நமக்குத் தரும் புது பெலத்தினால் உலகையும் சததுருவையும் எதிர்கொள்ள தேவன் நம்மை பதுபெலத்தினால் நிரப்புகிறார். அதற்காக நாம் ஜெபத்தில் காத்திருக்க வேண்டும், அவர் தரும் வாக்குதத்த வசனத்தை நினைவு கூர்ந்து, அவருடைய நேரத்திற்காக காத்திருக்க வேண்டும். உபவாசித்து காத்திருக்க வெண்டும். அப்போது அவர் நமக்குத் தரும் பெலன் காண்டாமிருகத்தின் கொம்பைப்போல இருக்கும். ‘காண்டாமிருகத்துக்கொத்த பெலன் அவர்களுக்கு உண்டு’ - (எண்ணாகமம் 23:22)
.

கர்த்தருக்கு காத்திருந்து
கழுகுப் போல் பெலனடைந்து
செட்டைகளை அடித்து
உயரே எழும்பிடுவாய்
புது பெலன் அடைந்திடுவாய்

Tuesday, January 24, 2012

தீமையாகும் நன்மைகள்

உங்கள் நன்மை தூஷிக்கப்பட இடங்கொடாதிருங்கள். - (ரோமர் 14:16).

நம்மில் யாரும் பெரிய பெரிய பாவங்களையோ, தவறுகளையோ அதாவது, கொலையோ, கொள்ளையோ செய்வதில்லை. அப்படிப்பட்ட பாவங்களை செய்ய நாம் திட்டமிடுவதுமில்லை. இப்படிப்பட்ட பயங்கர பாவங்களில் நம்மை பிசாசானவன் விழ வைக்க முடியாததால், அவன் தந்திரமான ஒரு வழியை கையாளுகிறான். அதில் ஒன்று தேவன் நன்மை என்று சொல்லுகிற காரியத்தில் நம்மை எல்லையை மீறச் செய்து பாவத்தில் விழ வைப்பதே. நம்முடைய வாழ்க்கையிலே வேத வசனம் நன்மை என்று செர்ல்லக்கூடிய காரியங்கள் எப்படி தீமையாக மாறக்கூடும் என்று ஒரு சில காரியங்களை பார்ப்போம்.
.
ஓய்வு தேவன் தந்த ஒரு கிருபை. வாரத்தில் ஒரு நாள் நாம் ஓய்வெடுத்து கொள்ளும்படி தேவன் நமக்கு அனுக்கிரகம் செய்திருக்கிறார். ஆனால் அந்த ஓய்வெடுத்தல் எல்லையை மீறும்போது அது 'சோம்பேறித்தனம்' என்னும் பாவமாக மாறுகிறது
.
நமது நாவின் ஆசையை நிறைவேற்ற அநேக வகையான பழங்களையும் காய்களையும் உணவு வகைகளையும் தேவன் கொடுத்திருக்கிறார். இவற்றை நாம் மகிழ்வோடு உண்ணலாம். ஆனால் அது எல்லையை மீறும்போது அது 'பெருந்தீனி' என்னும் பாவமாக மாறுகிறது
.
நம்மை நாம் கவனித்து கொள்வதிலும் நமக்குரியவற்றில் ஞானமாய் இருப்பதும் நல்லது. ஆனால் நம்மை குறித்து மட்டுமே யோசித்து கொண்டிருக்கும்போது அது 'சுயநலம்' என்னும் பாவமாக மாறுகிறது
.
பிறரோடு நல்ல உறவு வைத்து கொள்ள தகவல் தொடர்பு அவசியமானது. எல்லோரோடும் நன்றாக பேச வேண்டும். பழக வேண்டும். ஆனால் அது எல்லையை மீறும்போது 'புரளிபேசும்' பாவமாக மாறுகிறது
.
ஆண்களும் பெண்களும் இணைந்து படிக்கும், வேலை பார்க்கும் நாட்களில் வாழ்கிறோம். ஒருவரோடொருவர் பேசுவதிலும், உதவுவதிலும் தவறில்லை. ஆனால் அது எல்லையை மீறும்போது பஞ்சும் நெருப்பும் போல அந்த நட்பு இருவரையும் அழித்து விடும்.
.
நாம் எதிர்பாலரோடு பழகுவதில்லை என்று சொல்லி, ஜாக்கிரதையாய் வாழலாம். ஆனால் ஒரே பாலின நண்பர்களுக்குள் நட்பு அதிகமாகும் போது ஓரின சேர்க்கை என்னும் விகற்பம் எழக்கூடும்.
.
அழகான ஏதேன் தோட்டத்தில் பிசாசு ஆதாமையும், ஏவாளையும் வஞ்சித்ததை நாம் மறந்து விடக்கூடாது. நன்மையென்று நினைத்து நாம் செய்து கொண்டிருக்கிற காரியங்கள் தீமையை நோக்கி சென்று விடாதபடி எல்லைகளை கவனமாக காத்து கொள்வோம். எந்த காரியத்திலும் நாம் எல்லை மீறாதபடி, எல்லைக்குள் அடங்கி இருக்க கற்று கொள்வோம். வாழ்க்கையில் எந்த ஒரு காரியத்திற்கும் அடிமையாகாதபடி எல்லாவற்றிலும் சமநிலையான சிந்தனையையும், தெளிவையும் பெற்று வாழ்வோம். நன்மையான காரியங்கள் தீமையாகாதபடி எல்லாவற்றையும் எல்லைக்குள் வாழ்ந்து கர்த்தருக்கு சாட்சியாக இருப்போம். ஆமென் அல்லேலூயா!
. 
எதை நான் பேச வேண்டுமென்று
கற்று தாருமையா
எவ்வழி நடக்க வேண்டுமென்று
பாதை காட்டுமையா
ஒளியான தீபமே
வழிகாட்டும் தெய்வமே

Sunday, January 22, 2012

ஃபேனி கிராஸ்பி - Fanny Crosby


கர்த்தருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; அவர் அதிசயங்களைச் செய்திருக்கிறார்; அவருடைய வலதுகரமும், அவருடைய பரிசுத்த புயமும், இரட்சிப்பை உண்டாக்கினது. - சங்கீதம் 98:1.
.
ஒரு மருத்துவரின் தவறான சிகிச்சையினால், ஆறே வாரங்கள் நிரம்பிய ஃபேனி கிராஸ்பி (Fanny Crosby 1820-1915) தன் இரண்டு கண்களிலும் பார்வையை இழக்க வேண்டிய பரிதாப நிலை எற்பட்டது. அதனால் அக்குழந்தை மனமடியவில்லை. சிறு வயதில் அவருடைய பாட்டி அவருக்கு அநேக காரியங்களைக் குறித்து சொல்லிக் கொடுத்தார். பூக்களை அவைகளின் மணத்தை வைத்தே என்ன பூ என்றும், மரத்தை தடவிப் பார்த்து என்ன மரம் என்று கூறும் திறமைப் படைத்தவராயிருந்தார்.
.
சிறுவயதில் வசனங்களை மனப்பாடம் செய்ய ஆரம்பித்தார். 5 ஆகமங்களையும், சங்கீதங்களையும் நீதிமொழிகளையும், ரூத் போன்ற வேத புத்தகங்களையும் அவர் மனனம் செய்து வைத்திருந்தார். அது அவருக்கு ஆவிக்குரிய வாழ்வில் முன்னேறுவதற்கு அவருக்கு பெரிதும் உதவின.
.
தனது 15ஆவது வயதில், குருடருக்கான பள்ளியில் நியூயார்க்கில் சேர்ந்து, அருமையான படிப்பை படித்து முடித்தாள். அதன் பிறகு அங்கேயே ஆசிரியையாக பணியாற்றி, தனது 38ஆவது வயதில் தன்னோடு பணியாற்றின குருடரான அலெக்ஸாண்டர் (Alexander van Alstyne) என்னும் பியானோ வாசிப்பவரை திருமணம் செய்துக் கொண்டார். அவர்கள் 44 வருடங்கள் திருமண வாழ்க்கையை சந்தோஷமாய் நடத்தினார்கள்.
.
சரி, யார் இந்த ஃபேனி கிராஸ்பி? அவர் தான் 8000 த்துக்கும் மேலான கிறிஸ்தவ பாடல்களை இயற்றி இசை அமைத்த மேதையாவார். அவர் எழுதிய அநேக பாடல்கள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு, சபைகளில் இன்றளவும் பாடப்பட்டு வருகிறது. அவர் இயற்றிய பாடல்களில் சில ‘I am Thine O Lord, To God be the glory, Draw me nearer, Blessed Assurance’ இப்படி அருமையான பாடல்களை அவர் இயற்றி இசையமைத்திருக்கிறார்.
.
அவர் தன் பார்வை இழந்த போதிலும், விசுவாசக் கண்களினால் கர்த்தரின் மகிமையைக் கண்டவராய், அற்புதமான பாடல்களை இயற்றியிருக்கிறார். தனது குறையை நினைத்து ஒரு போதும் அவர் முறுமுறுக்கவே இல்லை. ‘தேவன் தமது மேலான கிருபையினால், தமது ஊழியத்திற்கு இந்த நிலைமையில் இருக்கிற என்னையும் தெரிந்தெடுத்ததற்காக அவருக்கு நன்றி செலுத்துகிறேன்’ என்று அவர் நன்றியோடு வாழ்ந்தார்.
.
ஒரு முறை ஒரு ஊழியர், அவர் பார்வையில்லாதவராக இருப்பதைக் குறித்து, தனது துயரத்தை வெளிப்படுத்த முற்பட்ட போது, கிராஸ்பி, அவரைத் தடுத்து, ‘எனது பிறப்பின் போது எனது விருப்பம் எது என்று என்னைக் கேட்டிருந்தால் நான் குருடாக இருப்பதையே விரும்புவேன். ஏனெனில், நான் பரலோகத்திற்கு போகும்போது நான் காணும் முதல் முகம் எனக்காக தன் ஜீவனையே கொடுத்த என் நேசர் இயேசுவாகத்தான் இருக்கும்’ என்று நெகிழ்ச்சியோடு கூறினார்.
.
ஃபேனி சுவிசேஷத்தை பாடல்கள் மூலம் பரப்புவதே தன் பணி என்று நினைத்தார். தேவ செய்திகளைவிட பாடல்கள் மூலம் அநேக ஆத்துமாக்கள் சந்திக்க முடியும் எனறு அவர் நம்பினார்.
.
பியானோ, கிட்டார், ஆர்கன் என்று அநேக இசை வாத்தியங்களை வாசிக்க அறிந்திருந்ததுடன், அழகான குரலில் பாடவும் அறிந்திருந்தார். அவருக்கு ஒரு குழந்தை பிறந்து, முதலாம் வருடததிலேயே மரித்து; போனது.
.
அவர் உயிரோடு இருந்த காலத்தில், எட்டு அமெரிக்க அதிபர்களுக்கு அவர்களுடைய ஆட்சி காலத்தில் அவர்களால் அழைக்கப்பட்டு, அவர்களோடு அமர்ந்து அவர்களுக்கு வேதத்திலிருந்து ஆலோசனைகளை கொடுக்கும் வாய்ப்பு அவருக்கு கிட்டியிருந்தது.
.
தனது குறைகளிலும் எந்த முறுமுறுப்பும் இல்லாமல், கர்த்தருக்காக வாழ்ந்து, இசைக் குயிலாக அநேக பாடல்களைப் பாடி, அநேகரை கர்த்தருக்குள் வழி நடத்திய ஃபேனி பரலோகத்திலும் கர்த்தரின் பாதத்தில் அமர்ந்திருந்து, அவரை முகமுகமாய் தரிசித்து, அவரை துதிக்கும் பாடல்களை பாடிக் கொண்டிருப்பார் என்பதில் சந்தேகமேயில்லை.
.
கர்த்தருக்காக சாதிக்க நினைப்போர் தங்கள் சரீர குறைகளை நினைத்து புலம்பிக் கொண்டிக்க மாட்டார்கள். எந்த குறையும் தடையும் அவர்களை தடுத்து நிறுத்த முடியாது.
.
குறைவுள்ளோனானாலும் கூடவே இருக்கிறீர்
நிறைவாம் புல் தரைகளில் மெதுவாகவே நடத்துகிறீர்
இறைவனாம் இயேசு எல்லாவற்றிலும்
திருப்தியாக்குகிறீர் திருப்தியாக்குகிறீர்

Tuesday, January 17, 2012

பிறரை நேசிக்கும் நேசம்

உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக. - (மத்தேயு 22:39).

 .
ஒரு போர் வீரன் வியட்நாம் போர் முடிந்து, தன் வீட்டிற்கு திரும்பும் நேரம் வந்தது. சான் பிரான்சிஸ்கோ நகரில் தன் பெற்றோரை அவன் போனில் அழைத்து, நான் வீட்டிற்கு வரப்போகிறேன். ஆனால் உங்களிடம் ஒரு உதவியை கேட்கிறேன். என்னோடு என் நண்பனும் வர இருக்கிறான்' என்று கூறினான். அதற்கு பெற்றோர்கள், 'ஓ, தாராளமாக கூட்டி கொண்டு வா, அவனை நாங்களும் பார்க்க ஆவலாய் இருக்கிறோம்' என்றார்கள்.
.
அதற்கு மகன், ' அவன் நடந்த போரில் நிலத்தில் வைக்கப்பட்டிருந்த கண்ணியில் காலை வைத்ததினால், அவனுடைய ஒரு காலும், ஒரு கையும் இழந்து விட்டான். அவனுக்கு யாரும் இல்லாததால் அவன் என்னோடு இருப்பதை விரும்புகிறேன்' என்று கூறினான்.

.
பெற்றோர், 'மகனே, அதை கேட்க மிகவும் விசனமாயிருந்தாலும், அவனை நாம் வேறொரு இடத்தில் தங்க வைக்க ஆயத்தப்படுத்துவோம். நம்மோடு அவன் இருக்க முடியாது. அவனை வைத்து பார்த்து கொள்வது என்பது மிகவும் கஷ்டம் என்று உனக்கு தெரியும். இந்த வயதான காலத்தில் எங்களுக்கு இப்படிப்பட்ட ஒரு பாரம் இருக்குமானால் மிகவும் கஷ்டம். இதை புரிந்து கொண்டு, அவனை வேறு இடத்தில் விட்டுவிட்டு, நீ மட்டும் வா' என்று கூறினர். மகன் போனை வைத்து விட்டான்.

சிறிது நாட்கள் கழித்து, சான் பிரான்சிஸ்கோ நகர போலீஸ் அந்த பெற்றோரை அழைத்து, 'உங்கள் மகன் ஒரு உயரமான கட்டிடத்திலிருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டான். நீங்கள் வந்து பார்த்து அது உங்கள் மகன் தானா என்று உறுதி செய்யுங்கள்' என்று கூறினார்கள். உடனே பதைத்து, பெற்றோர் போய் பார்த்த போது, அது அவர்களின் மகன்தான் என்று தெரிந்தது. அப்போது அவர்களுக்கு தெரியாத ஒரு காரியமும் இருந்தது. அவனுக்கு ஒரு கையும் காலும் இல்லாமல் இருந்தது.
.
பிரியமானவர்களே, நம்மில் அநேகரும் அப்படித்தான் இருக்கிறோம். நம்மை போல எல்லாவற்றையும் உடையவர்களாகவும், அழகாயும், அறிவாயும் இருந்தால் அவர்களோடு பழக துடிக்கிறோம். பழகுகிறோம். ஆனால், நம்மை விட அழுக்காயும், உடல் ஊனமுற்றவர்களாக இருந்தால், அவர்களை நாம் தவிர்க்கவே விரும்புகிறோம். மேலே சொல்லப்பட்ட கதையில் அந்த பெற்றோர் தங்கள் பிள்ளைதான் ஊனமடைந்திருக்கிறான் என்று தெரிந்திருந்தால் நிச்சயமாக வீட்டிற்கு அழைத்து அவனை பராமரித்திருந்திருப்பார்கள். ஆனால் வேறு யாரோ என்று நினைத்து, அவனுக்காக நான் ஏன் இதை செய்ய வேண்டும் என்று நினைத்ததினாலேயே அவர்கள் தங்கள் சொந்த மகனையே இழக்க வேண்டியதானது.
.
நமக்கு ஒருவர் உண்டு. அவரின் அன்பு நிபந்தனையற்றது. அவர் நாம் எத்தனைதான் அழகற்றவர்களாயிருந்தாலும், அறிவற்றவர்களாயிருந்தாலும் நம்மையும் நேசித்து, நம்மை பராமரித்து, போஷித்து காத்து வழிநடத்தும் நம் தேவன். அவர் பட்சபாதமில்லாதவர். அவருடைய பிள்ளைகள் என்று சொல்லி கொள்ளும் நாமும் அப்படிப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்பதையே அவர் விரும்புகிறார். 'அப்பொழுது, நீதிமான்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, நாங்கள் எப்பொழுது உம்மைப் பசியுள்ளவராகக் கண்டு உமக்குப் போஜனங் கொடுத்தோம்? எப்பொழுது உம்மைத் தாகமுள்ளவராகக்கண்டு உம்முடைய தாகத்தைத் தீர்த்தோம்? எப்பொழுது உம்மை அந்நியராகக்கண்டு உம்மைச் சேர்த்துக்கொண்டோம்? எப்பொழுது உம்மை வஸ்திரமில்லாதவராகக் கண்டு உமக்கு வஸ்திரங்கொடுத்தோம்? எப்பொழுது உம்மை வியாதியுள்ளவராகவும் காவலிலிருக்கிறவராகவும் கண்டு, உம்மிடத்தில் வந்தோம் என்பார்கள். அதற்கு ராஜா பிரதியுத்தரமாக: மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்' (மத்தேயு 25:37-40) என்று இயேசுகிறிஸ்து கூறுகிறார். நாம் மற்றவர்களுக்கு செய்யும் நன்மையான காரியம் அது தேவனுக்கே செய்தது போலாகும்.

நம்மால் இயன்றதை மற்றவர்களுக்கு உதவியாக செய்வோமா? உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்ற கற்பனையை நிறைவேற்றுவோமா? நமக்கு உதவி செய்ய முடியும்போது, அதை செய்யத்தக்கவர்களுக்கு செய்யாமல் இருக்க கூடாது. நிச்சயமாய் செய்வோம். நம் பலன் பரலோகத்தில் சேர்த்து வைக்கப்படும். ஆமென் அல்லேலூயா!
.
பசியுற்றோருக்கு பிணியாளிகட்கு
பட்சமாக உதவி செய்வோம்
உசித நன்மைகள் நிறைந்து தமை மறந்து
இயேசு கனிந்து திரிந்தனரே
தாசரே இத்தரணியை அன்பாய்
இயேசுவுக்கு சொந்தமாக்குவோம்

Wednesday, January 11, 2012

விசுவாச வார்த்தை - பாகம் ஒன்று


அப்பொழுது காலேப் மோசேக்கு முன்பாக ஜனங்களை அமர்த்தி: நாம்
உடனே போய் அதைச் சுதந்தரித்துக்கொள்வோம்; நாம் அதை
எளிதாய் ஜெயித்துக் கொள்ளலாம் என்றான். 
- (எண்ணாகமம்13:30).
.
மோசே இஸ்ரவேல் ஜனங்கள் கானானை சுதந்தரிப்பதற்கு முன், 'தேசம்
எப்படிப்பட்டதென்றும், அங்கே குடியிருக்கிற ஜனங்கள் பலவான்களோ
பலவீனர்களோ, கொஞ்சம்பேரோ அநேகம்பேரோ என்றும், அவர்கள்
குடியிருக்கிற தேசம் எப்படிப்பட்டது, அது நல்லதோ கெட்டதோ என்றும்,
அவர்கள் பட்டணங்கள் எப்படிப்பட்டதென்றும், அவர்கள் கூடாரங்களில்
குடியிருக்கிறவர்களோ கோட்டைகளில் குடியிருக்கிறவர்களோ என்றும்,
நிலம் எப்படிப்பட்டது, அது வளப்பமானதோ இளப்பமானதோ என்றும்;
அதில் விருட்சங்கள் உண்டோ இல்லையோ என்றும் பாருங்கள்;
தைரியங்கொண்டிருந்து, தேசத்தின் கனிகளிலே சிலவற்றைக்
கொண்டுவாருங்கள்' என்று சொல்லி, கோத்திரத்திற்கு ஒருவராக 12 பேரை
கானான் தேசத்தை பார்த்து வரும்படி அனுப்புகிறார்.
.
அந்த பன்னிரண்டு பேரும் நாற்பது நாட்கள் அந்த தேசத்தை சுற்றி பார்த்து
விட்டு, ஒரே குலையுள்ள திராட்ச கொடியை அறுத்து, அதை ஒரு தடியிலேகட்டி, மோசேயிடம் வந்து தங்கள் அறிக்கையை சொல்ல ஆரம்பித்தார்கள்.எல்லா ஜனத்திற்கும் முன்பாக பத்து பேர் தங்கள் அறிக்கையைஇவ்விதமாய் சொன்னார்கள்.

'மோசேயை நோக்கி: நீர் எங்களை அனுப்பினதேசத்துக்கு நாங்கள் போய் வந்தோம்; அது பாலும் தேனும் ஓடுகிறதேசந்தான்; இது அதினுடைய கனி. ஆனாலும், அந்த தேசத்திலேகுடியிருக்கிற ஜனங்கள் பலவான்கள்; பட்டணங்கள் அரணிப்பானவைகளும் மிகவும் பெரியவைகளுமாய் இருக்கிறது; அங்கே ஏனாக்கின் குமாரரையும் கண்டோம்'. அவர்கள் அந்த தேசத்தை பாலும்தேனும் ஓடுகிற நாடாக கண்டார்கள். தேவன் அவர்களுக்கு அந்தஅருமையான தேசத்தை கொடுப்பேன் என்று வாக்குதத்தம் செய்தபடியேஅந்த தேசம் மிகவும் அருமையாக இருப்பதை கண்டார்கள். 

அதினால் தான்அதன் ஒரு குலையுள்ள திராட்ச கொடியை அவர்கள் கைகளினால் தூக்கிவர முடியவில்லை. அதை ஒரு தடியில் கட்டி இரண்டு பேராக தூக்கிகொண்டு வந்தார்கள்.


ஆனால் அந்த பத்து பேருக்கும் தேவன் செய்த மற்ற அற்புதங்களும்,
தங்களை எவ்விதமாய் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட பண்ணினார்
என்பதும் சீக்கிரம் மறந்து போய் விட்டது. அவர்களுடைய கண்களுக்கு
முன் அந்த தேசத்தில் வாழும் மக்கள், அங்குள்ள பெரிய பெரிய கனிகளை
சாப்பிட்டு, ராட்சதர்களை போலவே மாறிவிட்டார்கள் என்று நினைத்து
விட்டார்கள். ஆகவே தான், 'ஆனாலும், அந்த தேசத்தில் வாழுகிற ஜனங்கள்பலவான்கள், நாங்கள் எங்கள் பார்வைக்கு வெட்டுக்கிளிகளைப்போல் இருந்தோம், அவர்கள் பார்வைக்கும் அப்படியே இருந்தோம்' என்றுஅவிசுவாச வார்த்தைகளை எல்லா ஜனத்திற்கு முன்பும் சொல்ல ஆரம்பித்தார்கள். 

இவர்களுடைய பார்வைக்குத்தான் இவர்கள் வெட்டுக்கிளிகளை போல இருந்தார்கள், அந்த ஜனத்தின் பார்வைக்கும் அவர்கள் அப்படித்தான் இருந்தார்கள் என்று இவர்களுக்கு எப்படி தெரியும்? கதைகளை கட்டி, ஜனத்தின் மனதை துவள செய்தார்கள். அத்தனை காலம், நாம் அந்த தேசத்தை போய் சுதந்தரித்து, இந்த வனாந்திர வாழ்க்கைக்கு முற்று புள்ளி வைக்கலாம் என்று நினைத்திருந்த மக்கள், இந்த பத்து பேரின்
அறிக்கையை கேட்டு, இரவு முழுவதும் அழுதார்கள். 

கர்த்தர் செய்தஅற்புதங்களையும், அதிசயங்களையும் மறந்து, தேவனுக்கு விரோதமாக முறுமுறுத்து, நாங்கள் எகிப்திலேயே செத்து போயிருந்தால்
நலமாயிருக்குமே என்று தங்களுக்கு ஒரு தலைவனை ஏற்படுத்தி கொண்டு, எகிப்துக்கு திரும்பி போவோம் என்று கூறி கொண்டார்கள். பிரச்சனைகளை பார்த்து, இத்தனை நாள் அதிசயமாய் நடத்தி வந்த கர்த்தருக்கு விரோதமாக முறுமுறுத்ததால் என்ன நடந்தது தெரியுமா? கர்த்தர் அவர்களுக்கு கொடுத்த வாக்குதத்தங்களை மறந்து, அல்லது அதை பெரியதாக நினைக்காமல், ஏதோ பத்து பேர் சொன்ன அறிக்கையை நம்பி, கர்த்தருக்கு விரோதமாக வார்த்தைகளை பேசி, நாங்கள் எகிப்திலேயே செத்தால் நலமாயிருக்கும்என்று சொல்லி தேவனை கோபப்படுத்தின அவர்களுக்கு விரோதமாக தேவகோபம் எழும்பியது. 

'கர்த்தர் மோசேயை நோக்கி: எதுவரைக்கும் இந்த ஜனங்கள் எனக்குக் கோபம் உண்டாக்குவார்கள்? தங்களுக்குள்ளே நான் காட்டின சகல அடையாளங்களையும் அவர்கள் கண்டும், எதுவரைக்கும் என்னை விசுவாசியாதிருப்பார்கள்? நான் அவர்களைக் கொள்ளைநோயினால் வாதித்து, சுதந்தரத்துக்குப் புறம்பாக்கிப்போட்டு, அவர்களைப்பார்க்கிலும் உன்னைப் பெரிதும் பலத்ததுமான ஜாதியாக்குவேன் என்றார்' 

அந்த இடத்தில் மோசே தேவனிடம், அவரையும், தேவனையும் குறை சொல்லிய மக்களுக்காக திறப்பின் வாசலில் நின்று ஜெபிக்கிறார். ஒரு வேளை நாமாயிருந்தால், ஆம் ஆண்டவரே, இந்த ஜனம் எப்போதும் முறுமுறுக்கிற ஜனம், அழித்து போட்டு விடும், என்று அவரிடம் கூறியிருப்போம். 

ஆனால் மோசே அந்த இடத்தில் ஒரு அருமையானஜெபத்தை, ஜனம் அழியாதபடிக்கு திறப்பில் நின்று, தன்னை குறைகூறின ஜனத்திற்காக, தேவனுடைய வழிநடத்துதலை மறந்த ஜனத்திற்காக தேவனிடம் மன்றாடினார். அந்த அழகான ஜெபத்தை எண்ணாகமம் 14: 13-19 வரை உள்ள வசனத்தில் காணலாம்.

.ஆம், நமக்காக தேவனிடத்தில் பரிந்து பேசுகிற தகப்பனை போன்றபோதகர்கள் இருப்பதால்தான் நாம் குறைகளை சொல்லி, ஆலயத்தையும்,போதகர்களையும், ஏன் சில சமயம் நம்மை இரட்சித்து, நம்மை அருமையாய்வழிநடத்தி வரும் கர்த்தரையும் குறை சொன்னாலும், தேவன் கிருபையாய்நம்மை அழிக்காமல் விட்டு வைத்திருக்கிறார். அப்படிப்பட்ட தகப்பனைபோன்ற தேவ மனிதர்களை நமக்கு போதகர்களாக கிடைக்கப்பெற்ற நாம்

எத்தனை பாக்கியவான்கள்! அவர்களுக்காக கர்த்தரை ஸ்தோத்தரிப்போம்.

.

கர்த்தர் மோசேயின் ஜெபத்தினால், 'உன் வார்த்தையின்படியே
மன்னித்தேன். என் மகிமையையும், நான் எகிப்திலும் வனாந்தரத்திலும்
செய்த என் அடையாளங்களையும் கண்டிருந்தும், என் சத்தத்துக்குச்
செவிகொடாமல், இதனோடே பத்துமுறை என்னைப் பரீட்சைபார்த்த
மனிதரில் ஒருவரும், அவர்கள் பிதாக்களுக்கு நான் ஆணையிட்டுக்கொடுத்ததேசத்தைக் காணமாட்டார்கள்; எனக்குக் கோபம் உண்டாக்கினவர்களில்ஒருவரும் அதைக் காணமாட்டார்கள்' என்று கூறி முறுமுறுத்த ஜனத்திற்குதண்டனை கொடுத்து, ஆனால் அந்த ஜனத்தை அழிக்காமல் விட்டு விடுகிறார். 

அதன்படியே தேவனுக்கு விரோதமாக முறுமுறுத்த அவர்கள்
ஒருவரும் கானான் தேசத்தை சுதந்தரிக்கவில்லை! எத்தனை பரிதாபம்!
பாலும் தேனும் ஓடுகிற தேசத்தை குறித்து கேள்விப்பட்டார்களே ஒழிய,
அவர்கள் அதில் கால் எடுத்து வைக்கவில்லை. அந்த தேசத்தின் கனியை
புசிக்கவில்லை, அந்த தேசத்தின் நன்மையை அனுபவிக்கவில்லை.
வனாந்திரத்திலேயே மரித்து, அங்கேயே அடக்கம் செய்யப்பட்டார்கள்.

.ஒருவேளை நாமும் கூட தேவன் நமக்கு கொடுத்த வாக்குதத்தங்களைமறந்தவர்களாக, நமக்கு ஒரு மோசமான சூழ்நிலை ஏற்படும்போது, அவர்மேல் நாம் நம்பிக்கை வைக்காமல், அவருக்கு விரோமாகமுறுமுறுக்கும்போது, தேவன் நமக்கு செய்ய இருந்த, வாக்குதத்தம் செய்தகாரியங்களை நாம் அனுபவிக்காமல் போய் விட நேரிடும். நாம்முறுமுறுக்கிறவை எத்தனை முறை என்று கூட தேவன்

எண்ணுகிறவராயிருக்கிறார். பாருங்கள் இஸ்ரவேலர் என்னை பத்துமுறை
பரிட்சை பார்த்தார்கள் என்று தேவன் கூறுவதை! தேவன் நம்மேல் கோபம் கொண்டு விடாதபடி, நம் வார்த்தைகள் இருக்கட்டும்! நாம் சொல்லும் வார்த்தைகளின்படியே நமக்கு தேவன் செய்யக்கூடும். ஆகவே நாம் கோபத்திலும், விரக்தியிலும், மனம் வெறுத்து பேசும் வார்த்தைகள் மிகவும் ஜாக்கிரதையுள்ளவைகளாக இருக்க வேண்டும். தேவன் நமக்கு பாராட்டுகிற கிருபைகளை நாம் நினைத்தவர்களாக, இதுவரை நடத்தினவர் இன்னும் நடத்த வல்லவர் என்று அவர் மேல் நம் பாரத்தை வைத்து, எந்த
காரியத்திலும் முறுமுறுக்காமல், அவரை கோபமூட்டும் வார்த்தைகளை
பேசாமல், நம்மை காத்து கொள்வோம். 

கர்த்தர் நம்முடைய வார்த்தைகளை கொண்டே நம்மை நியாயம் தீர்த்துவிடாதபடி, ஜாக்கிரதையாக பேசுவோம்.

மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்'(நீதிமொழிகள் 18:21)
என்ற வார்த்தையின்படி, நாம் மரணத்தை தெரிந்து கொள்ளாதபடி ஜீவனை
தெரிந்து கொள்ளத்தக்கதாக நம் வார்த்தைகள் இருக்கட்டும். ஆமென்
அல்லேலூயா!
.
முறுமுறுக்காமல், வாதாடாமல்
அனைத்தையும் செய்து நாம் முன்னேறுவோம்
கோணலும் மாறுபாடுமான உலகத்தில்
குற்றமற்ற குழந்தைகளாய் வாழ்ந்திடுவோம்

Tuesday, January 10, 2012

விலையேறப் பெற்ற புத்தகம்


கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவைஉயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய சாட்சிசத்தியமும், பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது. -சங்கீதம் 19:7.

.ஒரு கர்த்தருடைய ஊழியர் சிறைச் சாலைகளுக்கு சென்று அங்குள்ளகைதிகளுக்குகர்த்தருடைய வார்த்தையை பகிர்ந்துவிட்டு,ஒவ்வொருவருக்கும் ஒரு வேதாகமத்தைஇலவசமாக கொடுத்து வருவதுவழக்கம்அதில் ஒரு கைதி, 'நீர் சொன்ன கிறி்துவின்வார்த்தைகளைநான் ஏற்றுக் கொள்கிறேன்ஆனால்இந்த வேதாகமத்தினால் எனக்குஎந்தபயனுமில்லைஎன்றுக் கூறினார்.
.
அப்போது அந்த ஊழியர் ஏன் என்று கேட்டதற்கு, 'ஐயா எனக்குபடிக்கவோஎழுதவோ தெரியாது. உங்களால் முடிந்தால்எழுத்துகளில்லாத ஒரு வேதத்தை எனக்குத் தாருங்கள்' என்றுக்கூறினார்.
.
இந்த வார்த்தைகள் அந்த ஊழியரை அதிகமாய் யோசிக்கவைத்தது. நன்குயோசித்து அவர், அந்த படிக்காதவருக்காக ஒருவேதாகமத்தைஉருவாக்கினார். அது நான்கே பக்கங்களைஉடையதாயிருந்தது. அந்தஒவ்வொரு பக்கமும் ஒவ்வொருநிறத்தில் இருந்தது. அதை அந்த கைதியிடம்கொடுத்து, அதைகீழ்க்கண்டவாறு விளக்கினார்:
.
முதல்பக்கம் கறுப்பாய் இருப்பது நாம் தேவனுடையவார்த்தையைகேட்பதற்கு முன், நம்முடைய இருதயம் இருக்கும்நிலையும், அதுபாவத்தினால் கறுப்பாக உள்ளதையும் குறிக்கிறது.
.
இரண்டாவது பக்கம் சிவப்பு நிறம். அது கிறிஸ்து நமக்காக சிலுவையில்தம்முடைய மாசற்ற இரத்தத்ததை சிந்தி, நம்மை மீட்டுக் கொண்டதைக்குறிக்கும்.
.
மூன்றாவது பக்கம், வெண்மை நிறம். அது நம்முடைய பாவங்கள்கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்பட்டு, நாம் பரிசுத்தமாகி இருப்பதைக்குறிக்கும்.
.
நான்காவது பக்கம், தங்க நிறம். அது இரட்சிக்கப்பட்ட ஒரு ஆத்துமா போய்சேரும் நித்திய சந்தோஷமான பரலோகத்தைக் குறிக்கும்” என்றுக் கூறினார். அதை அந்தக் கைதி சந்தோஷமாய் பெற்றுக் கொண்டு தன் மார்போடுஅணைத்துக் கொண்டு மகிழ்ந்தார்.
.
உலகத்திலேயே சிறந்த புத்தகமாகிய வேதத்தை நமது சொந்த மொழியில்வாசிக்கும்படியான சிலாக்கியத்தை கர்த்தர் நமக்கு கொடுத்திருக்கிறார். எத்தனையோ மொழிகளில் இன்னும் வேதாகமம்மொழிபெயர்க்கப்படவில்லை. இது தமிழர்களாகிய நமக்கு தேவன்பாராட்டிய கிருபையாகும்.
.
அப்படி நாம் கிருபையாய் பெற்றுக் கொண்ட வேதாகமத்தை நம்மில்எத்தனைப் பேர் தினமும் வாசிக்கிறோம்? ஒவ்வொரு நாளும் ஒவ்வொருநீதிமொழிகளை வாசிக்கும்படி 31 அதிகாரங்கள் நீதிமொழிகளில் இருக்கிறது. நம்மை சீர்திருத்தும்படியாக அப்போஸ்தலனாகிய பவுலின் நிருபங்கள்உள்ளது. இன்னும் எத்தனையோ தேவ இரகசியங்கள் தேவனுடையவார்த்தையில் அடங்கியுள்ளது. கர்த்தருடைய நியாயங்கள் உண்மையும்,அவைகள் அனைத்தும் நீதியுமாயிருக்கிறது. அவைகள் பொன்னிலும், மிகுந்த பசும்பொன்னிலும் விரும்பப்படத்தக்கதும், தேனிலும் தேன்கூட்டிலிருந்துஒழுகும் தெளிதேனிலும் மதுரமுள்ளதுமாய் இருக்கிறது என்று சங்கீதம் 19:9-10-ல் வாசிக்கிறோம். ஆம் அது தேனிலும் இனியது.
.
நம்முடைய சொந்த மொழியில் வாசிக்கும்படியாக, நம்முடைய கைகளில் தவழும் வேதாகமத்தை படிக்கக்கூடாதபடி, பாமரராய் இருக்கும் தமிழர்கள்எத்தனைப்பேர்? அரிய பொக்கிஷமாகிய இந்த வேதத்தை அவர்கள் படிக்கப் கூடாதபடி அவர்கள் எழுத்தறிவில்லாதவர்களாய் இருக்கிறார்கள். சில வேளைகளில் நான் ஜெபிக்கும்போது, வாக்குதத்தங்கள் நிரம்பிய, நம்மைத் தேற்றும், ஆற்றும் இந்த கிருபையுள்ள வார்த்தைகளை படிக்க்கூடாதபடி இருக்கிற ஜனத்தை நினைத்து, கர்த்தருடைய சமுகத்தில் கண்ணீர் விடுவேன், கர்த்தர் எனக்கு ஒரு பாரத்தை அவர்கள் மேல் கொடுத்தார். அப்போது நான் நினைப்பதுண்டு, ஓய்வு பெற்று வீட்டில் ஓயவெடுக்கும் படித்த நமது பெற்றோர்கள் அல்லது வயதானவர்கள் வாரத்தில் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் கிராமங்களில் அல்லது தங்களது வீடடுப் பக்கத்தில்இருக்கும் படிப்பறிவில்லாத மக்களுக்கு எழுதப் படிக்க கற்றுக் கொடுக்கலாமே! அது அவர்களுக்கு எத்தனையோ வகையில் பிரயோஜமாயிருக்குமே! இதற்காக நான் தொடர்ந்து ஜெபித்து வருகிறேன்.கர்த்தர் தம் வேளையில் அதை செய்வார் என்று விசுவாசிக்கிறேன். அதற்காக நீங்களும் ஜெபித்துக் கொள்ளுங்கள். ஆமென் அல்லேலூயா!
.
வாசிக்க சிறந்த புத்தகம் வேதம்
அன்றாடம் நீ வாசித்தால் குன்றாமல் நடத்துமே
ஆம் வாசிக்க சிறந்த புத்தகம் வேதம்

Monday, January 9, 2012

நாவின் அதிகாரம்


மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்; அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைப் புசிப்பார்கள். - நீதிமொழிகள். 18:21.
.
ஒரு சிறுவனுக்கு எப்போதும் அதிகக் கோபம் வரும் அவனுடைய தந்தை எத்தனையோ முறை அவனிடம் அது நல்லதல்ல என்றுச் சொல்லிப் பார்த்தார். அவனுக்கு கோபம் கட்டுப்படவே இல்லை. ஒரு நாள் அவன் தந்தை ஒரு பை நிறைய ஆணிகளையும் ஒரு சுத்தியையும் கொடுத்து, ஒவ்வொரு முறை கோபம் வரும்போதும், தங்கள் வீட்டிற்கு வெளியே வெள்ளைச் சாயம் போட்ட கட்டை வேலியின் மீது, ஒரு ஆணியை அடிக்கச்சொன்னார். அதன்படி, அவன் அடித்துபோது, முதல் நாளில் 37 ஆணிகளை அடித்தான்.
.
அடுத்த சில வாரங்களில், அவன் கோபம் குறையத் தொடங்கியது. ஏனெனில் ஒவ்வொரு முறை கோபம் வரும்போதும், வெளியேப் போய் ஆணிகளை அடிப்பதற்கு பதிலாக, கோபத்தை கட்டுபடுத்துவது அவனுக்கு எளியதாக கண்டது. அதை அவன் தகப்பன் கண்டபோது, அவனிடம் ஒவ்வொரு நாளும் போய் அவன் அடித்த ஆணிகளை பிடுங்கச் சொன்னார். அவன் அப்படியே எல்லாவற்றையும் பிடுங்கி முடித்தான்.
.
அன்று சாயங்காலம் அவன் தந்தை அவனது கையைப் பிடித்து அவனைக் கூட்டிக் கொண்டுப் போய், ‘மகனே, நீ செய்தக் காரியம் நல்லது, ஆனால்பார், நீ ஆணி அடித்த இடத்தை, இந்த அழகிய வேலி இனி அப்படி இருக்கப் போவது இல்லை. நீ ஆணியடித்ததினால் ஏற்பட்ட துளைகளைப் பார், அது துளைகளோடு காட்சியளிக்கிறது. அப்படித்தான் நீ அன்புகூருகிற ஒருவரிடம், நீ கோபத்தோடு பேசிய ஒவ்வொரு வார்த்தையும், இந்த துளைகளைப் போல், இருதயத்தில் மாறாத வடுகளை ஏற்படுத்துகிறது. நீ கோபம் போன பிறகு எத்தனை முறை மன்னிப்புக் கேட்டாலும் அந்த வடுக்கள் மாறாமல் அப்படியேதான் இருக்கும், ஆகவே கோபத்தைக் குறைத்து கோபமான வார்த்தைகளை பேசாதபடிக் காத்துக் கொள்’ என்று அவனுக்கு அறிவுரைக் கூறினார்.
.
நாவை அடக்க ஒரு மனுஷனாலும் கூடாது; அது அடங்காத பொல்லாங்குள்ளதும் சாவுக்கேதுவான விஷம் நிறைந்ததுமாயிருக்கிறது. அதினாலே நாம் பிதாவாகிய தேவனைத் துதிக்கிறோம்; தேவனுடைய சாயலின்படி உண்டாக்கப்பட்ட மனுஷரை அதினாலேயே சபிக்கிறோம். -(யாக்கோபு 3:8-9) என்று வேதம் கூறுகிறது. ஆனால் இயேசுகிறிஸ்துவை சொந்தமாகக் கொண்ட ஜனம் நாவை அடக்கிக் கொள்ள பழக வேண்டும். தேவன் கொடுத்த நாவை மற்றவர்களை உற்சாகப்படுத்தவும், திடனற்றவர்களை தேற்றவும், தேவனை துதிக்கவும் பயன்படுத்த வேண்டும்.
.
இனிய நாவு எலும்பையும் நொறுக்கும் என்று நீதிமொழிகள் 25:15-ம் வசனத்தின் பின்பகுதியில் காணலாம். மற்றவர்களுக்கு பயன்படும் வார்த்தைகளையே பேசுவோம். மட்டுமல்ல, மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்; அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைப் புசிப்பார்கள் என்ற வேதம் நமக்கு கூறுகிறது. நாம் எதை பேசுகிறோமோ, அதன்படிதான் நடக்கும். நாம் மரணத்துக்கு ஏதுவான வார்த்தைகளை பேசினால், அதன் கனியைப் புசிப்போம். ஜீவனுக்கேதுவான் வார்த்தைகளை பேசினால் ஜீவனைப் பெறுவோம். உதாரணமாக,சங்கீதம் 23:6-ல் என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்' என்று பார்க்கிறோம். அதைக் கூறுவதை விட்டுவிட்டு, என் தந்தைக்கு அல்லது தாய்க்கு இரத்த அழுத்த வியாதி இருக்கிறது, அல்லது சர்க்கரை வியாதி இருக்கிறது அதனால் என்னையும் அது தொடரும் என்று நம் வாயினால் அறிக்கை செய்வது மரணத்துக் ஏதுவான வார்த்தைகளைப பேசுவதுப் போலாகும். அதற்கு பதிலாக, டயபடீஸோ, அல்லது ஹைபர் டென்ஷனோ அல்ல, நன்மையும் கிருபையுமே என்னைத் தொடரும் என்று அறிக்கை செய்வது, ஜீவனுக்கேதுவான வார்த்தைகளைப் பேசுவதுப் போலாகும். இன்று வரை எங்கள் குடும்ப ஜெபத்தில், எங்கள் ஜெபங்கள் முடிந்தப் பிறகு நாங்கள் குடும்பமாக, 23ம் சங்கீதத்தை விசுவாச அறிக்கையாக சொல்லித்தான் முடிப்போம். ஆந்த அதிகாரத்தின் ஒவ்வொரு வார்த்தைகளும் அற்புதமானது. எங்கள் அறிக்கைக் கேட்டு தேவன் எங்களை ஆசீர்வதிககிறார். நீங்களும் அப்படி செய்யலாமே!
.
ஆகவே, நல்ல வார்த்தைகளைப் பேசுவோம், விசுவாச வார்த்தைகளைப் பேசுவோம், மற்றவர்களுக்கு ஆறுதலை தேறுதலைக் கொண்டு வருவோம். அதற்காகவே தேவன் நாவைப் படைத்தார் என்று விசுவாசிப்போம் கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக. ஆமென் அல்லேலூயா!
.
நன்றியால் துதிப் பாடு உன் இயேசுவை
நாவாலே என்றும் பாடு
நல்லவர் வல்லவர் போதுமானவர்
வார்த்தையில் உண்மையுள்ளவர்