Tuesday, May 15, 2012

அன்பாகவே இருக்கும் தேவன்

தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார் (யோவான் 3:16)


ஒரு காவல் அதிகாரியின் கையில் 'தவறவிட்ட குழந்தை' என்ற சுவிசேஷ கைப்பிரதி ஒன்று கிடைத்தது. அதில் தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனை உலகிற்கு கொடுத்த அந்த அற்புத செய்தி சொல்லப்பட்டிருந்தது. அதை ஏளனமாக பார்த்த அவர், வழக்கம்போல கசக்கி அதை குப்பை கூடையில் எறிந்து விட்டார். அன்று மாலை அவருடைய வீட்டின் இரண்டாவது மாடியில் தன்னுடைய ஒன்றரை வயது குழந்தையுடன் கொஞ்சி விளையாடி கொண்டிருந்தார். மாடியின் முகப்பில் நின்ற அவர் கையிலிருந்த குழந்தை திடீரென துள்ளியது. அவரது இறுக்கமான கையிலிருந்து எப்படியோ நழுவி, கீழே விழ ஆரம்பித்தது, உடனே அவரும் கீழே குதித்தார். காவல் துறையின் பயிற்சியினால், குழந்தையை லாவகமாக பிடித்தார். தன்னை கீழே கிடத்தி தன் குழந்தையை மார்பில் ஏந்தினார். குழந்தை எந்த காயமுமின்றி காப்பாற்றப்பட்டது. ஆனால் அவருக்கோ இடது கை, காலில் முறிவு ஏற்பட்டு, மருத்தவமனையில் சேர்க்கப்பட்டார்;.
.
மறுநாள் கண்விழித்து, தன் குழந்தையை தேடினார். குழந்தை அவரை பார்த்து சிரித்தது. குழந்தையை காப்பாற்றி திருப்தியில் வலியையும் மறந்து, அவரும் புன்னகைத்தார். அன்று மாலை சில சகோதரிகள் மருத்துவமனை ஊழியம் செய்ய வந்தனர். அந்த அதிகாரியின் கையில், 'தவற விட்ட குழந்தை' என்ற அதே கைப்பிரதியை கொடுத்து, சுவிசேஷம் அறிவித்தனர். இப்பொழுது அவரால் இந்த கைப்பிரதியின் உண்மையை உணர முடிந்தது. 'பொல்லாதவனாகிய நானே என் பிள்ளைக்காக இதை செய்யும்போது, பரிசுத்தமுள்ள தேவன் பாவிகளாகிய நமக்காக மனுஷனாய் இப்புவிக்கு வந்து தன் உயிரை கொடுத்தது நிச்சயம் உண்மையே' என மனதிற்குள் எண்ணினார். அன்றே இரட்சிக்கப்பட்டார்.
.
நம்முடைய தேவன் ஏதோ மனிதனை படைத்தோம், அவன் எப்படியோ போகட்டும் என விட்டுவிடவில்லை. தம்முடைய மகிமையின் புகழ்ச்சிக்காக படைத்த மனுக்குலம் பாவத்தில் வீழ்ந்து மாண்டு போகிறதே என மன்தாபப்பட்டார். அதோடு நின்று விடாமல் நம்மை மீட்கும்படியாக குமாரனை அனுப்பினார். பாவிகளான நமக்கு அவ்வுண்மையை உணர செய்து இவ்வளவாய் அன்பு கூர்ந்தார். இந்த அன்பை மாம்ச கண்களால் பார்த்து விட முடியாது. நமது விசுவாச கண்களால் அதை காணலாம். அவரோடு ஐக்கியப்படும்போது அந்த அன்பை உணர முடியும்.
.
என்னை நேசிக்க யாருமில்லையே என ஏங்கும் சகோதரனே, சகோதரியே, நம்மேல் இயேசுகிறிஸ்து காட்டின அன்பை இன்னும் நாம் உணராமல் இருக்கிறோமா? மனித அன்பை நாடி ஓடுகிறோமா? அவர்கள் மூலம் ஏதாவது ஒரு நன்மை உண்டாகுமோ என்று ஏங்கி கொண்டு இருக்கிறோமா? நம்மேல் வைத்த அன்பினிமித்தம் தம் குமாரனை அனுப்பி, அவருடைய ஜீவனையே நமக்கு கொடுத்தவர் அவரை நாம் நம்பும்போது, நமக்காக எல்லாவற்றையும் கொடுப்பது அதிக நிச்சயமல்லவா?
.
தேவன் நம்மேல் வைத்த அன்பு உண்மையானது, உறுதியானது. யார் நம்மை கைவிட்டாலும், நம்மை விட்டு விலகாத அன்பு. அந்த அன்புக்கு நாம் பாத்திரர்களாக இல்லாவிட்டாலும், தம்முடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாக நம்மை அவருடைய சொந்த பிள்ளைகளாக ஏற்று கொண்டு, நமக்கும் பரலோக வாழ்வை, கொடுத்திட்ட அன்பு. அந்த அன்பை புரிந்து கொண்டு, நம்மை அவருக்கு ஒப்பு கொடுத்து, நம் இருதயத்தில் அவர் வாழ்வதற்கு இடம் கொடுப்போமானால், அந்த நித்திய அன்பு நம்மை நித்தியத்திற்கு நேராக வழிநடத்தும். அந்த அழியாத, மாறாத, அளவில்லா அன்பை ருசித்து, அவருக்கு சாட்சியாக வாழ்வோமாக. ஆமென் அல்லேலூயா!