Sunday, November 27, 2011

விசுவாசமுள்ள ஜெபம்


நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது. - (யாக்கோபு 5:16).


ஜேம்ஸ் கோல்ட் என்ற அமெரிக்க கோடீஸ்வரர் தன் வியாபார காரியமாக நியூயார்க் நகரிலிருந்து லாஸ் ஏஞ்சல் நகருக்கு போய் விட்டு திரும்பும்போது, வந்த வழியே திரும்ப அவருக்கு மனமில்லை. ஆகவே அமெரிக்காவின் தென் பகுதியை சுற்றி பார்த்து விட்டு போக எண்ணி இரயில் ஏறினார். டெக்சாஸ் மாகாணத்தில் வரும்போது ஓர் இடத்தில் எஞ்சினில் கோளாறு ஏறுபட்டு இரயில் நிறுத்தப்பட்டது. இரயில் ஓட்டுனர், 'எஞ்சினை சரி செய்ய குறைந்தது ஐந்து மணி நேரம் ஆகும். ஆகவே பயணிகள் விரும்பினால் அருகிலுள்ள கிராமத்திற்கு சென்று இளைப்பாறி வரலாம்' என்றார்.
.

நேரத்தை செலவழிப்பதற்காக ஜேம்ஸ் கோல்ட் பக்கத்து கிராமத்திற்கு சென்றார். அங்கு ஒரு மைதானத்தில் ஒரு கூட்ட மக்களுக்கு முன் ஒருவர் ஏலம் கூறி கொண்டிருந்தார். கோல்ட், 'இங்கு என்ன ஏலம் விடப்படுகிறது?' என்று விசாரித்தார். அப்போது ஒருவர் பக்கத்திலிருந்த கிறிஸ்தவ ஆலயத்தை காட்டி, 'இந்த கோயிலைத்தான் ஏலம் விடுகிறார்கள். ஏலம் விடுபவர்தான் இதை கட்டிய கான்ட்ராக்டர். தனக்கு சேர வேண்டிய பணம் கொடுக்கப்படாததால் கோயிலை ஏலத்துக்கு கொண்டு வந்து விட்டார். கோயில் நிர்வாகிகளும் மற்றும் சிலரும் ஆலயத்திற்குள் ஜெபம் செய்து கொண்டிருக்கின்றனர்' என்றார். கோல்ட் ஆலயத்திற்குள் சென்றார். அங்கு ஒரு சிறு கூட்டத்தினர் கண்ணீரோடு கதறி ஜெபித்து கொண்டிருந்தனர். 'கர்த்தரே இதை ஏலம் எடுப்பவரிடமிருந்து சிறிது காலத்திற்குள் நாங்கள் பணத்தை செலுத்தி மீட்டு கொள்ள எங்களுக்கு வழியை திறந்தருளும்' என்று ஜெபித்து கொண்டிருந்தனர். அதை கண்ட கோல்ட், ஏலம் விடும் இடத்திற்கு சென்று பெரும் தொகையை கூறி ஏலத்திற்கு அந்த ஆலயத்தை எடுத்தார். ஒரு வழக்கறிஞரை அழைப்பித்து, அவரையும் ஆலய நிர்வாகிகளையும் அழைத்து, ஆலயத்தை அச்சபைக்கு சொந்தமானதாக எழுதி, பத்திரத்தை நிர்வாகிகளிடம் கொடுத்து விட்டு, மணியை பார்த்தார். இரயில் ஓட்டுனர் சொன்ன நேரம் நெருங்கி கொண்டிருந்தது. தேவன் தனக்கு இவ்வழியே வர விருப்பம் தந்ததையும், இரயிலின் கோளாறையும் எண்ணி அதிசயித்தார். தேவனுடைய வல்லமையை எண்ணி வியந்தார்.
.
பிரியமானவர்களே, நீங்கள் விசுவாசத்தோடு ஜெபித்து கொண்டிருக்கும் காரியம் என்ன? நீங்கள் வேண்டி கொண்டிருக்கும் காரியத்தில் தேவன் இன்றே பதில் கொடுப்பார். உங்கள் வாழ்வில் அற்புதம் நடைபெற எந்த வழியும் இல்லாதிருக்கலாம், பணபலமும் ஆள்பலமும் இல்லாதிருக்கலாம், சாதகமற்ற சூழ்நிலைகளே காணப்படலாம், அன்று ஒரு காகத்தை கொண்டு எலியாவின் தேவையை சந்தித்தவர் இன்றும் உங்களுக்கு உதவும்படி ஒருவரை அனுப்புவார். ஏனெனில் விசுவாசமுள்ள ஜெபம் ஒருபோதும் சாவதில்லை. அந்த ஜெபம் நிச்சயமாய் தேவனிடமிருந்து பதிலை பெற்று வரும். ஆகவே உங்கள் ஜெபத்திற்கு நிச்சயமாய் பதிலுண்டு. சோர்ந்து போகாதிருப்போம்.
.
நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும்பெலனுள்ளதாயிருக்கிறது என்ற வசனத்தின்படி, நாம் நீதிமான்களாயிருந்து செய்யும் ஜெபம் மிகவும் பெலனுள்ளதாய், தேவனிடத்திலிருந்து பதிலை பெற்று தரக்கூடியதாக உள்ளது. தானியேல் ஜெபித்தபோது அவன் வேண்டி கொள்ள தொடங்கியபோதே பதிலை ஆண்டவர் அனுப்பிவிட்டார். அப்படிப்பட்டதான ஜெபங்களாக நம் ஜெபங்கள் இருக்கும்படியாக தேவன் தாமே கிருபை செய்வாராக. ஆமென் அல்லேலூயா!
.
ஊக்கத்துடனே ஓர் முகமாய்
வாக்குத்தத்தத்தை பற்றிக் கொண்டு
நோக்கத்தை எல்லாம் நேர்மையாக்கி
கேட்கும்படி கிருபை செய்யும்
..
ஜெபமே ஜீவன் ஜெபம் ஜெயம்
ஜீவியத்திற்கு இதுவே சட்டம்
ஜெபமே ஜீவன், ஜெபம் ஜெயம்
ஜீவியத்திற்கு இதுவே சட்டம்

எதை தெரிந்தெடுப்பீர்கள்?

திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன். - யோவான் 10:10.

ஒரு பணக்கார வாலிபன், மரித்து, பரலோக வாசலண்டை போனபோது, அங்கு பரிசுத்த பேதுரு நின்று அந்த வாலிபனிடம், ‘நாங்கள் இங்கு ஒரு புதிய தீர்மானம் கொண்டு வந்திருக்கிறோம். பரலோகத்திற்கு செல்வதா அல்லது நரகம் செல்வதா என்று நீங்களே தீர்மானிக்கலாம்’ என்றார். அப்போது அந்த வாலிபன், 'ஓ! இவ்வளவுதானே, நான் பரலோகத்திற்கு செல்லவே விரும்புகிறேன்' என்றுக் கூறினான். அப்போது பேதுரு, அப்படி தீர்மானிப்பது அவ்வளவு எளிதல்ல, அதற்கு முன்பு நரகத்தில் ஒரு நாளும், பரலோகத்தில் ஒரு நாளும் செலவழிக்க வேண்டும். அதன்பின், நீ முடிவெடுக்கலாம் என்றுக் கூறினார்.
.
முதலில், அவன் நரகத்திற்கு அனுப்பப்பட்டான். அங்கு போனவுடன், அருமையான ஒரு தோடடம் இருந்தது. அங்கு அவனுடைய பழைய நண்பர்களும், அவனோடு கூட வேலை செய்தவர்களும், அவனை வரவேற்று, பழைய கதைகளைப் பேசி, சந்தோஷமாய் நேரத்தைக் கழித்தார்கள். சாத்தானையும் அவன் சந்தித்தான். சாத்தானும் நல்ல மனிதனாகவே காணப்பட்டான். இரவில் நல்ல சாப்பாடு பரிமாறப்பட்டது. நேரம்போனதே தெரியாமல், அந்த நாள் முடிவடைந்தது. அடுத்த நாள் அவன் பரலோகத்திற்கு சென்றான். அங்கும், நாள் நன்றாகவே இருந்தது. மேகங்களில் மேல், பறந்தும், பாட்டுகளைப் பாடியும் அந்த நாள் முடிவடைந்தது.
.
அடுத்த நாள், பேதுரு வந்து அவனிடம், 'நீ என்ன முடிவெடுத்திருக்கிறாய்?' என்றுக் கேட்டபோது, அந்த வாலிபன், ''பரலோகம் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் நரகத்தில் நான் என் நேரத்தை நன்கு செலவழித்தேன். ஆகவே நான் நரகத்திற்குச் செல்லவே விரும்புகிறேன்’’ என்றுக் கூறினான். அப்படிச் சொன்னவுடன் அவன் நரகத்திற்கு உடனே அனுப்பப்பட்டான். அங்கு போனவுடன், முந்திய நாள் பார்த்ததைப்போல எந்த தோட்டமும் இல்லை. அழுக்கும் பூச்சிகளும், அருவருப்பான துர்நாற்றமும் வீசியது. அவனுடைய நண்பர்கள் கிழிந்த அழுக்கு உடைகளை அணிந்து, அசுத்தமாய் இருந்தனர். அவர்களை குட்டிப் பிசாசுகள் துரத்தி வேலை வாங்கிக் கொண்டிருந்தன. அப்போது அவன் அங்கு வந்த சாத்தானிடம்,'' ''எனக்கு ஒன்றும் புரியவில்லை, நேற்று நான் வந்தபோது என் நேரம்போனதே தெரியாமல், சந்தோஷமாய் கழித்தேன், நல்ல சாப்பாடு கொடுக்கப்பட்டது. ஆனால் இன்றோ எல்லாம் தலைகீழாக இருக்கிறதே'' என்றுக் கேட்டதற்கு சாத்தான், வஞ்சக சிரிப்புடன், 'நேற்று உன்னை நாங்கள் இங்கு வருவதற்கு தெரிந்தெடுத்தோம். இன்று நீ எங்களில் ஒருவன்' என்று அலட்சியமாக சொல்லிவிட்டு, சாட்டையினால் அடித்து, வேலை செய்யும்படி விரட்டினான்.
.
இந்தக் கதை கற்பனையாக இருந்தாலும் சாத்தான் மக்களை தன் பக்கம் இழுப்பதற்காக பாவத்தையும் உலகத்தின் கவர்ச்சிகளையும் மிகவும், அழகாக காட்டி, இதுவே நல்லது என்று ஆத்துமாக்கள் நினைக்கும்படியாக அவர்களை மயக்கி தன் பக்கம் இழுக்கிறான். ஆனால், அவர்கள் உண்மையான சாமாதானத்தையும், சந்தோஷத்தையும் இயேசு கிறிஸ்துவின் தனிப்பட்ட உறவின் மூலமும், அவருடைய இரத்ததத்தினால் கழுவப்பட்டாலொழிய கிடைக்காது என்பதையும் மறைத்து பாவத்தை மிகவும் அருமையாக கவர்ச்சிகரமாக காட்டுகிறான். அவனுடைய தந்திரத்தில் சிக்கிக் கொண்ட ஒருவரும் வெளியே வருவது மிகவும் கடினம். சிக்கிக் கொள்ளாதபடி நாம் நம்மைக் காத்துக் கொள்ள வேண்டும். சாத்தான் தனக்கு கொஞ்ச காலம்தான் உண்டென்று அறிந்து, தன்னால் இயன்ற வரை ஆத்துமாக்களை தன் பக்கம் ஈர்ப்பதற்காக உலக சந்தோஷங்ளை காட்டி, அதுதான் வாழ்க்கை என்பதைப் போல் அவர்களை தன் பக்கம் இழுத்துக் கொண்டிருக்கிறான். கிறிஸ்துவுக்கு விரோதமாக வாழ்வதும், பாவங்களை செய்வதிலுமே சந்தோஷம் இருப்பதைப் போல் அவன், செய்கிற காரியங்களில் ஆத்துமாக்கலும் இழுப்புண்டு பாவத்தை தண்ணீரைப போல குடிக்கிறார்கள்.
.
மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழியுண்டு; அதின் முடிவோ மரண வழிகள் (நீதிமொழிகள். 16:25) என்று வேதம் திட்டவட்டமாகக் கூறுகிறது. நம்முடைய வழிகள் அல்ல, நம்முடைய ஞானம் அல்ல, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசமும், அவரே தேவனென்று அறிக்கையிட்டு, அவரை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்வதுமே நம்மை பரலோகம் சேர்க்கும். அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்று அப்போஸ்தலர் 4:12ல் வேதம் நமக்கு தெளிவாக கூறுகிறது. ஆகவே கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டு நம்முடைய பாவத்தை அறிக்கையிட்டு, அவரிடம் மன்னிப்பு கேட்போம். இரட்சிப்பை இலவசமாக பெற்றுக் கொள்வோம். அவருக்கென்று வாழ்வோம். சாத்தானின் தந்திரங்களை முறியடிப்போம். அவன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். ஆனால் கிறிஸ்துவோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தார். அவரை நம்புவோம். அவருக்குள் வாழ்வோம் பாலோக ராஜ்ஜியத்தை சுதந்தரிப்போம். ஆமென் அல்லேலூயா!
.
கல்வாரியின் அன்பினையே
கண்டு விரைந்தோடி வந்தேன்
கழுவும் உம் திரு இரத்தத்தாலே
கறை நீங்க இருதயத்தை

Wednesday, November 23, 2011

பிரயாசத்தில் தேவ அனுக்கிரகம்

அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்; உலகத்தையும் அவர்கள் உள்ளத்திலே வைத்திருக்கிறார்; ஆதலால் தேவன் ஆதிமுதல் அந்தம்மட்டும் செய்துவரும் கிரியையை மனுஷன் கண்டுபிடியான். மகிழ்ச்சியாயிருப்பதும், உயிரோடிருக்கையில் நன்மைசெய்வதுமேயல்லாமல், வேறொரு நன்மையும் மனுஷனுக்கு இல்லையென்று அறிந்தேன். - (பிரசங்கி 3:11-12).

ஒரு தகப்பன் தன் குடும்பத்தை மிகவும் நேசித்தார். அவருக்கு மூன்று பிள்ளைகள் இருந்தனர். அவர் அவர்களுக்கு எந்த குறையும் இருக்க கூடாது என்று மிகவும் கடினமாக உழைத்தார். வேலை செய்து முடித்து விட்டு, சாயங்கால வேளைகளில் படிக்க ஆரம்பித்தார். இப்போது இருக்கும் வேலையை விட நல்ல வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவர் விடாது படிக்க ஆரம்பித்தார். அவரது குடும்பம் அவரிடம், 'நீங்கள் எங்களோடு சரியாக நேரம் செலவழிப்பதில்லை' என்று முறையிட்டபோது, 'நான் எதற்கு இவற்றை எல்லாம் செய்கிறேன், நாம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தானே' என்று தேற்றுவார். தன் குடும்பத்தோடு இருப்பதை வாஞ்சிப்பார், ஆனால் படிப்பினிமித்தம் முடியாமல் போய்விடும்.
.
படித்த பாடங்களில் பரிட்சை எழுதி அதில் நல்ல மதிப்பெண்களோடு அவர் வெற்றி பெற்றார். மிகுந்த சந்தோஷத்தோடு வீடு வந்தார். 'பாருங்கள் நான் பட்ட பாட்டிற்கு கிடைத்த பரிசை!' என்று கூறினார். அவருடைய வேலை இடத்தில் அவருக்கு வேலை உயர்வு கிடைத்தது. நல்ல சம்பளமும் கிடைத்தது. குடும்பத்திற்கு இன்னும் வசதிகளை செய்து கொடுத்தார். பிள்ளைகளுக்கு நல்ல உடையும், உணவும் அவர்களுடைய தேவைகளும் சந்திக்கப்பட்டன.
.
இதோடு முடிந்தபாடில்லை, எப்படியாவது மேனேஜர் பதவி வேண்டும் என்று அதற்காக கடுமையாக உழைக்க ஆரம்பித்தார். அதற்காக திரும்பவும் வீட்டிலிருந்தே படிக்கும்படியாக ஓபன் யூனிவர்சிட்டியில் சேர்ந்தார். பிள்ளைகள் மீண்டும் தங்கள் தகப்பனிடம் முறையிட்டனர், 'நீங்கள் எங்களோடு இருக்கும் நேரம் மிகவும் குறைவு' என்று. அப்போதும் அவர் சொன்னார், 'நான் படும் கஷ்டங்கள் யாருக்காக? உங்களுக்காகத்தானே, நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தானே!' என்று கூறினார். அவர் பட்டபாடுகளுக்கு பலனாக அவருக்கு மேனேஜர் பதவியும் கிடைத்தது. வீட்டிற்கு ஒரு வேலைக்காரியும் வைத்து மனைவிக்கு உதவி செய்தார்.
.
மீண்டும் இரவும் பகலும் உழைத்து, ஒரு பெரிய பங்களாவை மிகவும் பிரபலமான இடத்தில் நகரத்தில் வாங்கினார். கடைசியாக சொன்னார், 'இனிமேல் நான் எதுவும் படிக்க போவதில்லை, கடினமாக உழைக்க போவதில்லை, வருகிற சமபளத்தில் நாம் சந்தோஷமாக இருக்க போகிறோம், இனிமேல் நான் உங்களோடு அதிகமான நேரத்தை செலவிட போகிறேன்' என்று கூறினார். மனைவியும் பிள்ளைகளும் மிகவும் சந்தோஷப்பட்டனர். அடுத்த நாள் காலை அவர் எழுந்திரிக்கவில்லை, போய் எழுப்பி விட்டபோது, அவர் உயிரோடு இல்லை!
.
பிரியமானவர்களே, 'பணப்பிரியன் பணத்தினால் திருப்தியடைவதில்லை; செல்வப்பிரியன் செல்வப்பெருக்கினால் திருப்தியடைவதில்லை' (பிரசங்கி 5:10) என்று வேதம் கூறுகிறது. எவ்வளவு சம்பாதித்தாலும் சிலருக்கு திருப்தி உண்டாவதே இல்லை. இன்னும் இருந்தால் நலமாக இருக்குமே என்றுதான் நினைக்கிறார்களே ஒழிய, போதும் என்று ஒருபோதும் நினைப்பதில்லை. நமக்கு இருக்க ஒரு வீடு நிச்சயமாக வேண்டும். அதற்காக நாம் கண்டிப்பாக உழைக்கத்தான் வேண்டும். ஆனால் குடும்பத்திற்கு நமது நேரத்தை கொடுக்காதபடி, எப்பொழுதும் பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்று அதற்காக நமது பிரயாசத்தை எல்லாம் செலுத்தி, நமது உடல் நிலையை கெடுத்து கொள்வது கூடாது. அந்த தகப்பன் எப்பொழுது பார்த்தாலும் உழைத்து, உழைத்து தன் உடல் நிலையை கூட கவனிக்காது, பின்னர் சந்தோஷமாக இருக்க வேண்டிய நேரத்தில் அவற்றை அனுபவியாமற் போனது எத்தனை பரிதாபமான காரியம்!
.
நாம் எத்தனை தான் சம்பாதித்தாலும், நாம் அவற்றை அனுபவிக்கவும் வேண்டும். தகாதவிதமாக அல்ல, நல்ல உணவை உண்டு, நல்ல உடை உடுத்தி, தேவன் கொடுத்த சம்பாத்தியத்தை நல்லபடியாக அனுபவிக்க வேண்டும். எனக்கு தெரிந்த ஒரு குடும்பம், வெளிநாட்டில் தாங்கள் இருக்கிற வீட்டை தங்கள் குடும்பம் (கணவன், மனைவி, இரண்டு பிள்ளைகள்) மற்றும் மூன்று பேருக்கு வாடகை கொடுத்து, (இரண்டு அறைகள் கொண்ட வீடு) வாழ்ந்து வந்தார்கள். சிலர் தங்களுக்கு கிடைக்கும் சம்பளத்தை அப்படியே நாட்டிற்கு அனுப்பி விட்டு, வெளிநாட்டில் சரியாக உண்ணாமலும், தங்களை கவனித்து கொள்ளாமலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மகிழ்ச்சியாயிருப்பதும், உயிரோடிருக்கையில் நன்மைசெய்வதுமேயல்லாமல், வேறொரு நன்மையும் மனுஷனுக்கு இல்லையென்று அறிந்தேன் என்ற வசனத்தின்படி, கர்த்தர் நமக்கு கொடுத்த வருமானத்தை ஏற்றபடி செலவு செய்யும் போது, அந்த வேலையை நமக்கு கொடுத்த தேவனும் மகிழ்வார், நாமும் சந்தோஷமாய் இருக்க முடியும். அதை நாம் தகாதவிதமாக பயன்படுத்தினால், வயிற்றை கட்டி, வாயை கட்டி பணம் எப்படியாவது சேர்ந்தால் போதும் என்று நினைத்தால், நமக்கு தேவன் கொடுத்த வேலைக்காக அவரே வேதனைப்படுவார், இந்த மனிதனுக்கு போய் இந்த நல்ல வேலையை கொடுத்தேனே என்று! 'இதோ, உயிரோடிருக்கும்படி தேவன் அருளிச்செய்த நாளெல்லாம் மனுஷன் புசித்துக் குடித்து, சூரியனுக்குக் கீழே தான் படும் பிரயாசம் அனைத்தின் பலனையும் அநுபவிப்பதே நலமும் உத்தமுமான காரியமென்று நான் கண்டேன், இதுவே அவன் பங்கு. தேவன் ஐசுவரியத்தையும் சம்பத்தையும் எவனுக்குக் கொடுத்திருக்கிறாரோ, அவன் அதிலே புசிக்கவும், தன் பங்கைப் பெறவும், தன் பிரயாசத்திலே மகிழ்ச்சியாயிருக்கவும் அவனுக்கு அதிகாரம் அளிப்பது தேவனுடைய அநுக்கிரகம் (பிரசங்கி 5:18-19). ஆகவே அந்த அநுக்கிரகத்தை நாம் நல்லவிதமாக பயன்படுத்த தேவன் தாமே நமக்கு கிருபை செய்வாராக! ஆமென் அல்லேலூயா!
.
இருக்க நல்ல ஒரு வீடு தந்தீர்
வாழ தேவையான வசதி தந்தீர்
கடுமையாக தினம் உழைக்க வைத்தீர்
கடனே இல்லாமல் வாழ வைத்தீர்
..
நன்றி தகப்பனே நன்மை செய்தீரே
நன்றி தகப்பனே நன்மை செய்தீரே
.

பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷம்

நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமானசித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள். - (ரோமர் 2:2).
.
ஒரு குடியானவன் தான் வளர்க்கும் புறாக்களுக்கெல்லாம் நல்ல ஆகாரத்தை போடுகிறான் என்று ஒரு காகம் கவனித்து, தான் புறா வேஷம் போட்டு கொண்டால் கஷ்டப்பட்டு உணவை தேடி அலைய வேண்டுவதில்லை என எண்ணியது. ஆகவே ஒரு சுண்ணாம்பு குழியிலே போய் புரண்டு புரண்டு படுத்து தன்னை வெண்மையாக்கி கொண்டது. புறாவை போல புதிய நடையும் கற்று கொண்டது. அடுத்த நாள் குடியானவன் புறக்களுக்கு ஆகாரம் கொடுக்கும்போது தானும் ஒரு புறாவை போல நின்று அருமையான உணவை உட்கொண்டது. இப்படி அநேக நாள் இந்த திருட்டு காகம் அவரை ஏமாற்றி கொண்டே வந்தது.
.
ஒரு நாள் அந்த பக்கத்தில் எலி செத்து கிடக்கும் நாற்றம் அடித்தது. மற்ற காகங்களெல்லம் கூடி வந்து காகா என்று கத்தி கொண்டு செத்த எலியை விருந்துண்ண ஆரம்பித்தன. புறா வேஷம் போட்ட காகத்திற்கு தன்னையும் அறியாமல் ஜென்ம சுபாவம் தலையெடுத்தது. புறாக்களின் மத்தியிலிருந்து கா கா என்று கத்தி கொண்டு செத்த எலியை நோக்கி பறந்தது. அதை பாhத்த குடியானவனுக்கு நல்ல கோபம் வந்தது. இனிமேல் வேஷம் போட்ட காக்கா வரட்டும் என்று எண்ணி கொண்டான்.
.
காகத்தின் வேஷத்தை கண்ட மற்ற காகங்கள் அதை விரட்டியடித்தன. உயிர் பிழைத்தால் போதும் என எண்ணி குடியானவனிடம் வந்தது. அவனோ கோலை வைத்து அதை அடித்து துரத்தினான். இங்கும் போக முடியாமல், அங்கும் செல்ல முடியாமல் அந்த காகம் தவித்தது.
.
இந்நாட்களிலே கிறிஸ்தவர்களில் அநேகர் நேரத்திற்கு தகுந்தாற் போல், இடத்திற்கு தகுந்தாற்போல் வேஷம் போட கற்று கொண்டுள்ளார்கள். ஆலயத்தில் விசுவாசிகளை காணும்போதும், போதகரிடம் பேசும் போதும் பரிசுத்த வேஷம் தரித்து கொள்வார்கள். பேச்சு, பார்வை, பாவனை அனைத்தும் பரிசுத்தமாகி விடுகிறது. அங்கிருந்து கொஞ்சம் நகர்ந்து உலகதிற்குள் வந்து வீட்டிற்கு வந்தவுடன் பேச்சு செயல் எல்லாமே மாறி விடுகிறது.
.
ஆனால் தேவன் நமது வெளிவேஷத்தை கண்டு ஏமாறுபவர் அல்ல, அவர் நமது உள்ளந்திரியங்களை ஆராய்ந்து அறிகிறவர். அவரிடம் வரும்போது மட்டும் பரிசுத்த வேஷம் தரித்து அவரை பரவசப்படுத்த முடியாது. ஆகவே நாம் இந்த பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷத்தை தரிக்காதபடி, நம் மனம் புதிதாக ஒவ்வொரு நாளும் மாற வேண்டும்.
.
எப்படி நம் மனதை புதிதாக மாற்ற முடியும்? ஓவ்வொரு நாளும் காலையில் நாம் எழுந்திரிக்கும்போது, நம் மனதையும், சிந்தனைகளையும், எண்ணங்களையும் கர்த்தருடைய கரத்தில் கொடுத்து, அவர் நம்முடைய சிந்தனைகளை ஆளும்படி ஒப்பு கொடுக்க வேண்டும். டெலிவிஷனுக்கும், பேஸ் புக்கிற்கும் கொடுக்கும் நேரத்தில் பாதியையாவது கர்த்தருக்கு கொடுக்கும்படி பழக வேண்டும். அப்படி கர்த்தருக்கு கொடுக்கும்போது, நம் எண்ணங்களும், சிந்தனைகளும் புதிதாக்க மாற்றப்படும். உள்ளே ஒன்றும் வெளியே ஒன்றுமாக நாம் வேஷம் தரிக்கமுடியாது.
.
ஒவ்வொரு நாளும் கர்த்தருடைய சமுகத்தில் நம் மனம் புதிதாக்கப்படுகிறபடியால், பாவத்திற்கு விலகி, கர்த்தருக்குள் எப்பொழுதும் நாம் வாழ முடியும். அவருடைய சிந்தனை நம்மை ஆட்கொள்வதால், கர்த்தர் நம்மோடு எப்போதும் இருப்பதை உணர முடியும். அவருடைய சித்தத்தை பகுத்தறிந்து அவருக்குள் வளருவதால், நம் மனம் புதிதாகி மறுரூபமாக நாம் வாழ முடியும். அப்படிப்பட்டதான ஒரு வாழ்வை கர்த்தர் தாமே நம் ஒவ்வொருவருக்கும் கிருபை செய்வாராக. ஆமென் அல்லேலூயா!
.
கண்களை பதிய வைப்போம்
கர்த்தராம் இயேசுவின் மேல்
கடந்ததை மறந்திடுவோம்
தொடர்ந்து முன் செல்லுவோம்

Monday, November 21, 2011

சாத்தானின் தந்திரங்கள்


சாத்தானாலே நாம் மோசம்போகாதபடிக்கு, அப்படிச் செய்தேன்; அவனுடைய தந்திரங்கள் நமக்குத் தெரியாதவைகள் அல்லவே- (2 கொரிந்தியர் 2:11).

ஒரு முறை சாத்தான் எல்லா பிசாசுகளையும் அழைத்து, சுவிசேஷம் காட்டு நெருப்பு போல பரவி கொண்டிருக்கிறது என்றும், எப்படியாவது சுவிஷேத்தை அழிக்க வேண்டும் என்றும், அதற்கு உபயோகமான திட்டங்களை கொடுக்கும்படி கேட்டு கொண்டான். எல்லா பிசாசுகளும் சற்று நேரம் அமைதியாக இருந்தன.

'நாம் பைபிளே இல்லாதவாறு அழித்து விடுவோம், அப்போது யாருக்கும் தேவன் ஒருவர் இருப்பதே தெரியாது' என்று ஒரு பிசாசு கூறியது. அதற்கு சாத்தான், 'நாம் எத்தனையோ நூற்றாண்டுகளாக அதை முயற்சித்து வருகிறோம் என்று உனக்கு தெரியாதா, நாம் அதை அழிக்க அழிக்க, அது கிறிஸ்தவர்களுக்கு விசேஷித்ததாக மாறிவிடுகிறது. அதை அழிக்க நினைத்த மனிதர்கள் தான் அழிந்தார்களே தவிர வேதாகமம் அழியவே இல்லையே' என்று கூறியது.
.
திரும்பவும் அமைதி ஏற்பட்டது. எல்லா பிசாசுகளும் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தன. பின்னர், ஒரு பிசாசு எழுந்து, 'பொதுவாகவும் பகிங்கரமாகவும் கிறிஸ்தவர்கள் செய்யும் ஜெபங்களை தடுத்து விடுவோம். அதன்பின் யாருக்கும் சுவிசேஷத்தை பிரசங்கிக்க பெலனும், தைரியமும் இராது' என்று கூறியது. அதற்கு சாத்தான், 'அந்த முயற்சியில் நாம் ஏற்கனவே ஈடுபட்டு அமெரிக்காவில் எல்லா பள்ளிகள், அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் பகிரங்கமாக ஜெபிப்பதை நிறுத்தி விட்டோமே, ஆனால் அதினால் ஒவ்வொரு கிறிஸ்தவனின் தனி ஜெபமும் அதிகமாகி விட்டது. ஆகையால் முன்னிருந்ததை விட இப்போது சுவிசேஷம் வேகமாக பரவி வருகிறது' என்று கவலைப்பட்டான்.
.
ஒரு பிசாசு எழுந்து 'எல்லா தேவாலயங்களையும் அழித்து விடுவோம், பின் ஒருவரும் சுவிசேஷத்தை பிரசங்கிக்க முடியாது' என்று கூறியது. அதற்கு சாத்தான், 'இதையும் நாம் ஏற்கனவே எத்தனையோ முறை செய்து விட்டோம், சீனாவில் வெளியே ஒரு சபைக்கூட இல்லாதவாறு செய்தோம், ஆனால் இரகசிய சபைகள் எழும்பி இப்போது இலட்ச இலட்சமாய் சீனாவில் கிறிஸ்தவர்கள் பெருகி வருகிறார்கள்' என்று கவலைப்பட்டது.
.
ஒரு பிசாசு எழுந்து, ' நாம் ஒவ்வொரு கிறிஸ்தவனையும் துன்புறுத்துவோம். கொலை செய்வோம். அவர்கள் இருதயத்தில் ஒரு பயம் வந்து, ஒருவரும் மற்றவர்களுக்கு சுவிசேஷத்தை சொல்ல முடியாதபடி போய் விடும்' என்று கூறியது. அதற்கு சாத்தான், 'போடா முட்டாள், அதை செய்யாமலா இருக்கிறோம்? நைஜீரியாவில் எத்தனை பேரை அப்படியே சபையோடு எரித்து விட்டோம்! நாம் அவர்களை கொல்ல கொல்ல அவர்களின் இரத்தமும், அவர்களின் சாவும் ஒரு புதிய சபை தோன்றுவதற்கு அந்த இடத்தில் விதைக்கப்படுகிறது. ஆதி திருச்சபை உருவானதில் இருந்து நாம் ஒவ்வொரு கிறிஸ்தவனையும் துன்புறுத்தி கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் நாம் தான் தோற்று கொண்டிருக்கிறோமே தவிர கிறிஸ்தவம் இன்னும் வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது, சபைகளும் பெருகி கொண்டு தான் இருக்கிறது. யாரும் உருப்படியான ஒரு யோசனை சொல்ல மாட்டீர்களா?' என்று பெருமூச்சு விட்டது.
.
கடைசியாக ஒரு பிசாசு எழுந்து, 'நான் ஒரு திட்டத்தை சொல்ல போகிறேன், கவனமாக கேளுங்கள், நாம் கிறிஸ்தவர்களிடம் நீங்கள் போய் கர்த்தருக்காக கடினமாக உழையுங்கள், கூடி ஜெபியுங்கள், தனித்து ஜெபியுங்கள், வேதத்தை தினமும் வாசியுங்கள், சபைகளை சபைகள் இல்லாத இடங்களில் ஸ்தாபியுங்கள், கர்த்தருக்காக வைராக்கியமாக காரியங்களை செய்யுங்கள், ஆனால் இன்று வேண்டாம், ஏனெனில் நீங்கள் ஏற்கனவே அதிக வேலை செய்து ரொம்பவும் களைப்பாக இருக்கிறீர்கள், ஆகவே நாளைக்கு செய்யுங்கள் என்று சொல்லிவிட்டு, நாளை திரும்பவும், எல்லாம் செய்யுங்கள், ஆனால் நாளை செய்யுங்கள் என்று ஒவ்வொரு நாளும் அவர்கள் வேதம் வாசிப்பதையும், ஜெபிப்பதையும் செய்ய இருக்கும் மற்ற காரியங்களையும் அடுத்த நாள் அடுத்த நாள் என்று தள்ளி போட்டு கொண்டே வருவோம். அவர்கள் கடைசியில் ஒன்றுமே செய்ய மாட்டார்கள்' என்று கூறியது. உடனே எல்லா பிசாசுகளும், சாத்தானும் பலமாக கைகளை தட்டி, ' ஆஹா, நல்ல ஐடியா!' என்று கூறி ஏகமாய் ஆர்ப்பரித்தன. அதன்படி செய்ய ஆரம்பித்து வெற்றியும் கண்டு கொண்டிருக்கின்றன.
.
பிரியமானவர்களே, நாம் கர்த்தருக்காக என்னென்னவோ செய்ய வேண்டும் என்று தீர்மானிக்கிறோம், வாஞ்சிக்கிறோம். ஆனால் செய்ய வேண்டிய நேரம் வரும்போது, இப்போது வேண்டாம், நாளைக்கு வைத்து கொள்வோம் என்று தள்ளி போட்டு கொண்டே இருக்கிறோமல்லவா? நாளையிலிருந்து ஒரு மணி நேரமாவது ஜெபிக்க வேண்டும் என்று தீர்மானிக்கிறோம், அதன்படி செய்ய உட்காரும்போதுதான், யாராவது வந்து பேசி பேசி நேரம் போவது தெரியாமல் பேசி விட்டு, ஐயோ இன்று ஜெபிக்கவில்லையே, நாளைக்கு ஜெபிப்போம் என்று தள்ளி போட்டு விடுகிறோம். நாமாக ஏதாவது முயற்சி செய்து ஆரம்பிக்காதவரை நாம் ஒரு போதும் ஒரு காரியத்தையும் செய்யவே முடியாது. தீர்மானங்கள் ஆயிரம் செய்யலாம், ஆனால் அதற்கென்று முயற்சி செய்யாதவரை ஒன்றும் நடைமுறைக்கு வர முடியாது.
.
உபவாசித்து ஜெபிக்க வேண்டும் என்று தீர்மானித்தால், ஒரு நாளை அதற்கென்று நியமித்து, அன்று நிச்சயமாக ஜெபித்து ஆரம்பிக்க வேண்டும். இல்லாவிட்டால் அந்த தீர்மானம் எடுத்ததால் எந்த பிரயோஜனமுமிருக்காது. ஒரே நாளில் இரண்டு மணி நேரம் ஜெபித்து விட்டு, பின் ஒரு வாரத்திற்கு ஜெபிக்காமல் இருப்பதும் தவறு. கொஞ்ச கொஞ்ச நேரமாக ஆரம்பிப்போம், ஒவ்வொரு நாளாக அதை அதிகமாக்குவோம். இது உடற்பயிற்சி செய்ய நாம் எப்படி கொஞ்ச கொஞ்சமாக ஆரம்பித்து பின் அதிகமாக்குகிறோமோ அதை போலத்தான், படிப்படியாக உயர்த்தும்போது நாம் கடைசியில் இவ்வளவு நேரமா ஜெபித்திருக்கிறோம் என்று நாமே ஆச்சரியப்படும் அளவிற்கு நாம் ஜெப வாழ்வு உயர்ந்திருக்கும்! அப்படிப்பட்ட ஜெப வாழ்வை, கர்த்தருக்காக வாழும் வாழ்வை, கர்த்தருக்காக செய்யும் பெரிய காரியங்களை தேவன் நம் ஒவ்வொருவருக்கும் வாய்க்க செய்வாராக! ஆமென் அல்லேலூயா!
.
சாவுக்கேதுவான எங்கள் சரீரங்களை
உயிர் பெற செய்பவரே
சாத்தானின் சகல தந்திரங்களை
தகர்த்தெறிய வாரும் ஐயா
ஆட்கொண்டு எங்களை அனலாக்கும்
அன்பினால் இன்று அலங்கரியும்

Sunday, November 20, 2011

கர்த்தர் மேல் பாரத்தை வைத்துவிடு


அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள். 
- 1 பேதுரு 5:7.
. 

விசுவாசத்திற்கு நல்ல ஒரு எடுத்துக்காட்டாக விளங்கியவர் ஜார்ஜ் முல்லர் George Mueller (1805-1898) என்னும் அருமையான தேவ ஊழியர். அவர் கர்த்தருக்காக தன் வாழ்நாளில் பெரிய காரியங்களை செய்ததுமல்லாமல், விசுவாசத்தில் எப்படி எல்லாம் சாதிக்கலாம் என்பதை நடைமுறையில் செய்துக் காட்டியவர். அவர் அநேக அனாதை இல்லங்களை வைத்து நடத்தியவர். மாத சம்பளம் ஒன்றும் பெறாமல் கர்த்தர் மேல் விசுவாசத்தின் மூலமே அவைகளை நடத்திக் காட்டியவர். அவர் ஒருமுறை தன் அனாதை இல்லத்தில் நடந்த உண்மைச் சம்பவத்தை கீழ்க்கண்டவாறு கூறினார்:

.
ஒரு நாள் காலை உணவிற்கு நேரம் வந்தபோது இங்கிலாந்தில் உள்ள எனது அனாதை இல்லத்தில் உணவு ஏதும் இல்லை. ஏதாவது வாங்க வேண்டுமென்றாலும் கையில் பணமும் இல்லை. என்னைக் காண என் நண்பனின் மகள் வந்திருந்தாள். அவளை சாப்பிடும் அறைக்குக் கூட்டிச் சென்று, 'எங்கள் தகப்பன் செய்யப் போகும் காரியத்தைப் பார்' என்றுக் கூறி, அவளை அந்த இடத்தில் அமரச் செய்தேன். அங்கு எல்லா தட்டுகளும் எல்லா டம்ளர்களும் காலியாக இருந்தன. எல்லாரையும் அமரச் செய்து, எங்கள் தலைளை தாழ்த்தி, 'எங்கள் நல்ல தகப்பனே, நீர் எங்களுக்கு கொடுக்க இருக்கும் உணவிற்காக நன்றி' என்றுச் சொல்லி ஜெபித்தோம்.
.
ஆமென் என்றுச் சொல்லி முடிப்பதற்குள் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. அங்கு ரொட்டிகளைச் செய்பவர் நின்றிருந்தார். அவர், 'எனக்கு இரவெல்லாம் தூக்கமில்லை, உங்களுக்கு சாப்பிட காலையில் ஒன்றுமில்லை என்று எனக்கு தோன்றிற்று. ஆகவே காலை 2 மணிக்கு எழுந்து உங்களுக்கென்று புதியதாக இந்த ரொட்டிகளைச் செய்தேன்' என்று தேவையான ரொட்டிகளை அவரிடம் கொடுத்தார். அது முடிந்த உடனே மற்றொரு கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. திறந்தால் பால் கொடுப்பவர், அவருடைய வண்டி இந்த அனாதை இல்லத்தின் முன்பாக உடைந்துப் போய் விட்டது. அதை சரிசெய்ய வேண்டுமென்றால், அதிலிருந்து எல்லா பாலையும் வெளியேற்றவேண்டும். ஆகவே இந்தப் பாலை வாங்கிக் கொள்கிறீர்களா என்றுக் கேட்டாராம். 'அன்று அருமையான காலை உணவு எங்களுக்கு கிடைத்தது' என்று முல்லர் கூறினாராம்.
.
உங்கள் தேவைகளைக் குறித்துக் கலங்கிக் கொண்டிருக்கிறீர்களா? அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளை யெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள் என்று வசனம் கூறுகிறது. அன்று கேரீத் ஆற்றங்கரையில் எலியா தீர்க்கதரிசிக்கு காகங்களைக் கொண்டு காலையும் மாலையும் போஷித்து (1 இராஜாக்கள் 17:6-7) வழி நடத்தின தேவன், இன்றும் உங்கள் தேவைகளை சந்திக்க மாறாதவராயிருக்கிறார்.
.
நீ விசுவாசித்தால் தேவனின் மகிமையைக் காண்பாய் என்று இயேசுகிறிஸ்து கூறினதுப் போல நாம் விசுவாசித்தால் தேவன் நம் வாழ்க்கையிலும் அற்புதங்களைச் செய்ய வல்லராயிருக்கிறார். ஒரு முல்லருடைய வாழ்வில் அற்புதங்களைச் செய்ய தேவன் வல்லமையுள்ளவராயிருக்கும்போது நம் வாழ்விலும் அவர் செய்ய வல்லவராகவேயிருக்கிறார். அவர் படசபாதமுள்ள தேவன் அல்ல. ஆனால் நாம் விசுவாசிக்க வேண்டும். விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும் என்று வேதம் கூறுகிறது. நம்மை விசாரிக்கிற தேவன் ஒருவர் நமக்கு இருக்கும்போது நாம் ஏன் கலங்க வேண்டும்? அவர் நம் தேவைகளை சந்திக்கிற யெகோவாயீரே! கடன்தொல்லையா? பணத்தேவையா? வேலையில்லாத பிரச்சனையா? கலங்காதிருங்கள்! விசுவாசத்தோடு தேவனிடம் கேளுங்கள். தேவன் உங்கள் தேவைகளை சந்திக்க போதுமானவராயிருக்கிறார். வானமும் பூமியும் அவருடையது. அவருடைய பிள்ளளைகளாகிய நமக்கு செய்யாமல் வேறு யாருக்குச் செய்யப் போகிறார். பெரிய தேவனிடமிருந்து பெரிய காரியங்களை எதிர்பாருங்கள். பெரிய காரியங்களைச் செய்ய நம்தேவன் சர்வவல்லமையுள்ள தேவனாயிருக்கிறார்.
.
கர்த்தர் மேல் பாரத்தை வைத்துவிடு
கலங்கி தவிக்காதே
அவரே உன்னை ஆதரிப்பார்
அதிசயம் செய்வார்
நீதிமான் தள்ளாட விடமாட்டார்
நித்தமும் தாங்கி நடத்திடுவார்

Friday, November 18, 2011

சரீரம் தேவனுடைய ஆலயம்


உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா? கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்களே; ஆகையால் தேவனுக்கு உடையவைகளாகிய உங்கள் சரீரத்தினாலும் உங்கள் ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துங்கள். - 1கொரிந்தியர் 6:19-20.

வட துருவத்தில் வாழும் எஸ்கிமோ (Eskimo) என்னும் மக்கள், பனிக்கரடியைப் பிடிப்பதற்கு தந்திரமான, ஆனால் கொடூரமான ஒருமுறையை வைத்திருக்கிறார்கள். சீல் என்னும் கடல் விலங்கைக் கொன்று, அதன் இரத்தத்தை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அதற்குள் ஒரு கூர்மையான கத்தியைப் போட்டு வைத்து விடுவார்கள். அங்கு பனி சூழ்ந்திருப்பதால் அந்த இரத்தம் மிகச் சீக்கிரத்தில் உறைந்து பனியாகிவிடும். அந்த பனி இரத்தத்தின் நடுவில் கத்தியும் உறைந்துப் போயிருக்கும். அந்த பாத்திரம் வீட்டின் வெளியே வைத்துவிடப்படும்.

.
பனிக்கரடிகளுக்கு இரத்தம் என்றால் மிகவும் விருப்பம். அதனுடைய மணத்தை வைத்து அது அந்த இரத்தம் நிறைந்த பாத்திரத்தைத் தேடி வந்துவிடும். அங்கு அந்த பாத்திரத்திலுள்ள இரத்தத்தைப் பார்த்தவுடன், அந்த பனிக்கரடி இரத்தத்தை நக்கத்துவங்கி விடும். அந்த பனி அதன் நாவை மரக்கச் செய்யும். அந்த பனிக் கரடி அதை அறியாமல் தொடர்ந்து நக்கிக் கொண்டிருப்பதால்; உள்ளே உள்ள கத்தியின் கூர்மையால், அதன் நாக்கு அறுபட்டு அதனுடைய சொந்த இரத்தமே வெளிவரத் துவங்கிவிடும். ஆனால் அதை அந்த கரடி அறியாமல் தொடர்ந்து இரத்தத்தின் சுவையை சந்தோஷமாய் நக்கிக் கொண்டே இருக்கும். கடைசியில் அதனுடைய இரத்தம் எல்லாம் வெளியேறி, மயக்கம் வரும் நிலையில் அதை எஸ்கிமோக்கள் கொண்டுப் போய் கொன்று, அதனுடைய மாம்சத்தை புசித்து, அதனுடைய தோலை தங்களுக்கு கதகதப்பான ஆடைகளாக செய்து அதைப் பிரயோஜனப் படுத்திக் கொள்வர்.
.
இந்த பனிக்கரடியைப் போலத்தான் சிகரெட், குடி, போதை மருந்துகளுக்கு அடிமையானவர்கள், பான்பராக் புசிப்பவர்கள், கெட்ட படங்களை பார்ப்பவர்கள், விபச்சாரத்தில் ஈடுபடுபவர்கள் இப்படி பாவத்திற்கு அடிமைகளாய்ப் போனவர்கள். இரத்தத்தைக் கண்டவுடன் அந்த பனிக்கரடி எப்படி மோப்பம் பிடித்து வந்து விடுகிறதோ, அதைப்போல பாவத்திற்கும் சிற்றின்பங்களுக்கும் அடிமையானவர்களாகி தங்களது சொந்த சமாதான வாழ்க்கை, பரிசுத்தம், ஆரோக்கியம் எல்லாவற்றையும் இழந்து, அந்த பனிக்கரடியைப்போல பரிதாபமாக பிசாசின் பிடியில் சிக்கி மடிவார்கள்.
.
ஒரு முறை இந்த பழக்கத்திற்கு அடிமையானவர்கள் வெளியே வருவது மிகவும் கடினம். இப்படி அடிமையாகி தங்களது குடும்ப வாழ்க்கையின் சந்தோஷத்தை இழந்தவர்களாய் நடைப்பிணமாய் வாழ்கிற மக்கள் ஏராளம். அவர்கள் வெளியே விரும்பினாலும் வர முடியாமல், தங்கள் வாழ்க்கையை நரகமாக்கி கொண்டவர்கள் அதிகம். வேத வசனம் சொல்கிறது, 'இந்த சரீரம் தேவனுடைய ஆலயம்' என்று. பரிசுத்த ஆவியானவர் வந்து தங்கியிருக்கிற ஆலயம் என்றுப் பார்க்கிறோம். அப்படிப்படட சரீரத்தில் பாவத்திற்கு இடம் கொடுத்து அதற்கு அடிமைகளாகிப் போனவர்களின் சரீரத்தில் ஆவியானவர் எப்படி தங்கியிருப்பார்? இயேசுகிறிஸ்துவின் சொந்த இரத்த்தினாலே கிரயத்திற்கு கொள்ளப்பட்ட நாம் பாவத்திற்கு எப்படி நம் சரீரத்தின் அவயவங்கனை ஒப்புக் கொடுக்கலாம்?
.
தேவனுக்கு சொந்தமான இந்த சரீரத்தில் பாவம் செய்யாதபடி தற்காத்து, பரிசுத்த ஆலயமாக தேவனுக்கு ஒப்புக்கொடுப்போம். தேவனுக்கு உடையவைகளாகிய நமது சரீரத்தினாலும் நமது ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துவோம்.
.
இந்தப் பாவ பழக்கங்களில் சிக்கித் தவிக்கும் மக்கள் பிசாசின் பிடியிலிருந்து தப்பி வரும்படி தேவனிடம் நாம் மன்றாடுவோம்.
.
கட்டப்பட்ட மனிதரெல்லாம்
கட்டவிழ்க்கப்பட வேண்டும்
காயப்பட்ட மனிதரெல்லாம்
கல்வாரி வர வேண்டும்
கர்த்தர் உம்மைக் காண வேண்டும்

Wednesday, November 16, 2011

பாவத்தின் வேரை பிடுங்குவோம்


..யாதொரு கசப்பான வேர் முளைத்தெழும்பிக் கலக்கமுண்டாக்குகிறதினால் அநேகர் தீட்டுப்படாதபடிக்கும்,.. எச்சரிக்கையாயிருங்கள். - (எபிரேயர் 12:16).

ஒரு மனிதர் ஒரு குதிரையை பாசமாக வளர்த்து வந்தார். அந்த குதிரை தன் எஜமான் சொல்வதை கேட்டு அவருக்கு உதவியாக இருந்து வந்தது. ஒரு நாள் அது பின்னால் இருந்த வேலியை எட்டி உதைத்ததினால் அதன் கால்களில் புண் உண்டானது. அதை கண்ட அந்த மனிதர் அதற்கு மருந்து போட்டு, காயத்தை கட்டி விட்டார். ஆனால் அந்த குதிரையால் சரியாக நடக்க முடியவில்லை. ஆகையால் ஒரு மிருக மருத்துவரிடம் போய் அந்த குதிரையை காட்டினார். அவர் அந்த குதிரையை பரிசோதித்து விட்டு, அதற்கு புண் ஆறுவதற்கான மருந்தை கொடுத்தார். அதை சாப்பிடும் நேரத்தில் அந்த குதிரை நன்றாக நடந்தது. ஆனால் மருந்தை நிறுத்தினால், பின் திரும்பவும் நடக்க முடியாமல் போனது. அந்த மனிதர் திரும்பவும் அந்த மருந்தை கொடுத்தார். அதை சாப்பிட்ட குதிரை நடந்தது, பின் திரும்ப பழையபடி நொண்டி நொண்டி நடக்க ஆரம்பித்தது.

.
அந்த மனிதர் அந்த குதிரையை நேசித்ததால் மீண்டும் அதை மருத்துவரிடம் கொண்டு போய் காண்பித்தார். அந்த வைத்தியர் மயக்கமருந்து கொடுத்து அந்த காலை சரியாக பரிசோதித்து பார்த்தபோது, அந்த காலுக்குள், ஒரு இரும்பு கம்பி உள்ளே இருப்பதை கண்டார். அந்த குதிரை ஆண்டிபயாடிக் (Antibiotic)என்னும் கிருமி தடுப்பு மருந்தை சாப்பிடும் நேரம் சுகமாக இருந்தது. பின் அது மீண்டும் பழைய நிலைப்படி நொண்டி நொண்டி நடந்தது. அந்த இரும்பு கம்பியை எடுத்து, சரியான மருந்து இட்டபோது, அந்த குதிரை குணமாகி, நன்கு நடக்க ஆரம்பித்தது.
.
நம்முடைய இருதயத்திற்குள்ளும் பாவத்தின் வேர் உள்ளே ஆழமாக பதிந்து வைக்கப்பட்டிருக்கிறது. நாம் கர்த்தருடைய வசனத்தை கேட்கும்போது, பாவத்திலிருந்து நாம் அறிக்கையிட்டு, மன்னிப்பை பெற்று விட்டோம் என்று நினைத்து கொள்கிறோம். ஆனாலும் திரும்ப திரும்ப நாம் ஏன் பாவம் செய்து அதில் விழுந்து கொண்டிருக்கிறோம்?
.
நாம் கர்த்தரிடம் வந்து அவரிடம் மன்னிப்பை பெற்றது உண்மைதான். ஆனாலும் அடுத்த முறை வரும்போது, நாம் பரிசுத்தமுள்ளவர்களாய் இருப்பதில்லை, ஏதாவது பாவத்தில் விழுந்தவர்களாகவே காணப்படுகிறோம். ஏனெனில் பாவ சுபாவம் நமக்குள் வேர்விட்டு ஆழ பதிந்திருப்பதால் தான். ஆகையால் தான் நம்முடைய சில கூடபிறந்த சுபாவங்கள் நாம் மறுபடியும் பிறந்தாலும் நம்மை விட்டு மாறிப்போவதில்லை.
.
அப்போஸ்தலனாகிய பவுலும் 'என்னிடத்தில், அதாவது, என் மாம்சத்தில், நன்மைவாசமாயிருக்கிறதில்லையென்று நான் அறிந்திருக்கிறேன்; நன்மைசெய்ய வேண்டுமென்கிற விருப்பம் என்னிடத்திலிருக்கிறது, நன்மைசெய்வதோ என்னிடத்திலில்லை. ஆதலால் நான் விரும்புகிற நன்மையைச் செய்யாமல், விரும்பாத தீமையையே செய்கிறேன்' (ரோமர் 7:18-19) என்று சொல்கிறார். நாம் செய்யக்கூடாது என்று நினைத்தாலும் நம் மாம்சம் செய்யும்படி தூண்டுகிறதாகவே இருக்கிறது.
.
அதிலிருந்து நாம் எப்படி வெளிவருவது? பழைய மனிதனுக்கு மரித்து, கிறிஸ்துவுக்குள் வளருவதே. 'கிறிஸ்து உங்களிலிருந்தால் சரீரமானது பாவத்தினிமித்தம் மரித்ததாயும், ஆவியானது நீதியினிமித்தம் ஜீவனுள்ளதாயும் இருக்கும்'(ரோமர் 8:10). கர்த்தருடைய வருகையிலே நாம் மறுரூபமாக்கப்படும்போது, நமது பாவ சுபாவமும், பாவ சரீரமும் அழிந்து போகும். நாம் முற்றிலும் மறுரூபமாக்கப்படுவோம். அதுவரை நாம் பாவத்திற்கு விரோதமாக போராடி அதிலே வெற்றி காண்பவர்களாக காணப்பட வேண்டும்.
.
நமக்கு உதவியாக பரிசுத்த ஆவியானவர் எப்பொழுதும் துணையாக இருப்பதால் அவர் மூலமாக நாம் பாவத்தின் மேல் வெற்றி பெற்றவர்களாக வாழ முடியும். 'மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்' (1 கொரிந்தியர் 10:13) என்ற வசனத்தின்படி, தேவன் தாமே பாவத்திலிருந்தும், சோதனைகளிலிருந்தும் தப்பும்படியான போக்கை உண்டாக்கி நம்மை அதிலிருந்து வெளியேற்றுவார்.
.
நம் தேவன் பரிசுத்தராய் இருக்கிறது போல நாமும் பரிசுத்தமாய் வாழ்ந்து, 'அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள்' (பிலிப்பியர் 2:12) என்ற வார்த்தையின்படி பரலோக ராஜ்யத்திற்கு பாத்திரவான்களாக பரிசுத்தமாய் வாழ பிரயாசப்படுவோம், தேவன் தாமே நம் ஒவ்வொருவருக்கும் அந்த கிருபை செய்வாராக! ஆமென் அல்லேலூயா!
.
பாவத்தின கறைகள் நீங்கட்டுமே
சாபத்தின் நுகங்கள் முறியட்டுமே
இயேசுவின் நாமத்தில் ஜெயம்மெடுத்தே
வெற்றியின் கீதங்கள் பாடிடுவேன்
..
அக்கினி ஜீவாலை ஆக்கும் தேவா
கொழுந்து விட்டெறிய ஊற்றும் தேவா
பாவம் நெருங்கா அக்கினியாய்
சாத்தானை ஜெயிக்க உதவும் தேவா

பாவ சிந்தனைகள்

தன் வஸ்திரம் வேகாமல் மடியிலே எவனாவது நெருப்பை வைத்துக்கொள்ளக்கூடுமோ?  
நீதிமொழிகள். 6:27.
.
1991ம் வருடம் ஜூன் மாதம் 12ம் தேதி பிலிப்பபைன்ஸ் நாட்டின் சுதந்திர நாளில் பினாடுபோ (Pinatubo) என்னும் எரிமலை வெடித்தது. அது 500 வருடத்திற்கு மேலாக அமைதியாக சலனமில்லாமல் இருந்தது. அது இனி வெடிக்கப் போவதில்லை என்று மக்கள் அதை மறந்திருந்த நேரத்தில், அது வெடித்தது. அப்போது 8 மணி நேரத்திற்கு மேல் பூமி அதிர்ந்தது. அது 50,000 அடி உயரத்திற்க்கு சாம்பல் புகையை மேலே கிளப்பியது. மாத்திரமல்ல, Typhoon Yunga என்னும் சூறாவளிக் காற்றும் சேர்ந்து வீசியதால் சாம்பலும் புகையும் சேர்ந்து, கறுப்பு மழை பெய்தது. அதனால் அந்த சனிக்கிழமை கறுப்பு சனிக்கிழமை (Black Saturday) என்று அழைக்கப்பட்டது.
.
அந்த மலையிலிருந்து சில மைல் தூரத்தில் அமைந்திருந்த அமெரிக்க விமானப்படை அந்த இடத்தை முழுவதுமாக விட்டுவிட வேண்டி வந்தது. ஆயிரக்கணக்கான மக்களும் அமெரிக்க வீரர்களும் தங்கள் உயிரைக் காப்பாற்ற, தப்பித்து ஓட வேண்டி இருந்தது. அநேக நாட்கள் அந்த எரிமலை வெடிக்காததால் மக்கள் அதை சாதாரண மலையாக நினைத்து வாழ்ந்து வந்தார்கள்.
.
இந்த எரிமலை எத்தனையோ வருடங்கள் அமைதியாக இருந்து, ஒரு நாள் வெடித்ததுப் போல நம்முடைய பாவ குணங்களும் நமக்குள் மறைந்து இருந்து, வெளியே தலைக்காட்டாமல், அமைதியாக இருக்கின்றது. அது எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம். அது அமைதியாக இருப்பதால், அது அப்படியே இருந்துவிடும் என்று நாம் நினைத்தால் அது ஒரு வேளை தவறாகி விடலாம்.
.
இதைத்தான் சாலமோன் ஞானி தன் வஸ்திரம் வேகாமல் மடியிலே எவனாவது நெருப்பை வைத்துக்கொள்ளக்கூடுமோ? என்றுக் கேட்கிறார். அதாவது, பாவமானது அமைதியான எரிமலையைப் போல நமக்குள் எத்தனையோ நாடகள் தூங்கிக் கொண்டிருக்கலாம். ஆனால் அது ஒரு நாள் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம். அப்போது அதனுடைய விளைவு மிகவும் மோசமாக இருக்கும். நாம் ஒரு வேளை நினைத்துக் கொண்டிருக்கலாம், நான் பாவம் செய்வதிலிருந்து வெளிவந்து விட்டேன். இனிமேல் பாவம் செய்ய மாட்டேன், நான் பரிசுத்தமாகி விட்டேன் என்று நினைத்துக் கொண்டிருக்கலாம்; ஆனால் ஒரு நாள் எரிமலை வெடிப்பதைப் போன்று, நமக்குள் கனிந்துக் கொண்டிருக்கிற பாவம் அதற்கு தருணம் கிடைக்கும்போது, வெடிக்க தவறுவதில்லை.
.
இதிலிருந்து நாம் எப்படி தப்பித்துக் கொள்வது? நான் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாதபடிக்கு, உமது வாக்கை என்னிருதயத்தில் வைத்து வைத்தேன் என்று சங்கீதக்காரன் சங்கீதம் 119:11 ல் கூறுகிறார். ஆம் அது தான் வழி. பாவ சிந்தனைகள் நம் இருதயத்தில் வரும்போது கர்த்தருடைய வார்த்தைகளை மனதில் கொண்டு வந்து, பிசாசுக்கு எதிர்த்து நிற்க வேண்டும். ஒரு சில நிமிட இன்பத்திற்காக பாவத்தைச் செய்துவிட்டு வாழ்நாள் முழுவதும் குற்ற உணர்வில் சிக்கித் தவிப்பதை விட பாவம் செய்யாதபடி நம்மை பாதுகாத்துக் கொள்வதே சிறந்தது. கர்த்தருடைய வார்த்தைகள் நம் இருதயத்தில் இருந்தால் பாவ நெருப்பு அல்ல, பரிசுத்த ஆவியானவரின் நெருப்பே நம் இருதயத்தில் கொழுந்து விட்டு எரியும். வார்த்தைகளை நம் இருதயத்தில் வைத்து வைப்போம், பாவம் செய்யாதபடி நம்மைக் காத்துக் கொள்வோம் இயேசுகிறிஸ்து சீக்கிரம் வருகிறார்.
.
சிற்றின்ப மோகம் சீக்கிரம் போம்
பேரின்ப நாதா நீர் போதாதா?
பாழாகும் லோகம் வேண்டாமையா
வீணான ஆசை வேண்டாமையா
.

Monday, November 14, 2011

நாம் பூமிக்குரியவர்கள் அல்ல


தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்? - (ரோமர் 8:31).
.
தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்? இந்த வசனம் நம் அனைவரையும் சந்தோஷப்பட வைக்கும் வசனம். என் வேதாகமத்திலும் இந்த வசனத்தை ஒட்டி வைத்திருக்கிறேன். நாம் கிறிஸ்தவர்களாயிருப்பதால், தேவன் நம்மோடு இருப்பதால், நமக்கு விரோதமாக யாரும் இருக்க முடியாது என்று நாம் விசுவாசிக்கிறோம். அது உண்மை என்றாலும், இந்த வசனத்தின் உண்மையான அர்த்தத்தை காண்போம்.
.
பழைய ஏற்பாட்டில், இஸ்ரவேல் ஜனங்கள் கூறினார்கள், 'தேவன் எங்களோடிருக்கிறார், ஆகவே நாங்கள் பெலிஸ்தியர்களை முறியடிப்போம்' என்று. தாவீது கூறினார், 'சேனைகளின் கர்த்தரின் நாமத்தினாலே கோலியாத்தாகிய உன்னை ஜெயிப்பேன்' எனறு. இஸ்ரவேலர் எமோரியரை அழித்தனர், எலியாவை பிடிக்க வந்தவர்களை தேவன் அழித்தார், இதே சிந்தையுடன் அநேக கிறிஸ்தவர்கள இன்றும் காணப்படுகின்றனர். 'எனக்கு விரோதமாக எழும்பும் அண்டை வீட்டுக்காரனை, இந்த இடத்தையே விட்டு காலி பண்ண செய்யும் ஆண்டவரே, எங்கள் குடும்ப சொத்தில் இருக்கும் தகராறில் என் சகோதரனுக்கும், எனக்கும் உள்ள வழக்கில், என்னை ஜெயிக்க வைத்து நீர் என்னோடு இருக்கிறீர் என்பதை அவனுககு வெளிப்படுத்தும் ஆண்டவரே' என ஜெபிக்கின்றனர்,
.
பழைய ஏற்பாட்டிலே எலிசாவை 'மொட்டை தலையா' என கேலி செய்தவர்களை கரடிகள் வந்து பட்சித்து போட்டது என வாசிக்கிறோம். ஆனால் கவனியுங்கள், இயேசுகிறிஸ்துவை பெயல்செபூல் (பிசாசுகளின் தலைவன்) என்று விரோதிகள் கூறிய போது எந்த கரடியும் வந்து அவர்களை சாப்பிடவில்லை. ஆகவே மேற்கண்ட வசனத்திற்கு, நம்முடைய எல்லா சத்துருக்களையும் தேவன் கொன்று விடுவார் என்று பொருளல்ல. அவர்களை தேவன் தோற்கடிப்பார் என்றும் பொருளல்ல, ஒரு வேளை நம் சத்துருக்கள் நம்மை கொல்ல தேவன் அனுமதிக்கலாம், இயேசுகிறிஸ்துவை விரோதிகள் கொன்றனர். இயேசுவோடிருந்த அப்போஸ்தலரையும், சத்துருக்கள் கொலை செய்தனர். நாம் இயேசுகிறிஸ்துவையும் அப்போஸ்தலர்களையும் காட்டிலும் மேன்மையானவர்கள் அல்ல.
.
புதிய ஏற்பாட்டின்படி நம்முடைய சத்துரு பிசாசு, மாம்சம், பாவம் ஆகியவையே. அண்டை வீட்டுக்காரரோ, சகோதரனோ சக விசுவாசிகளோ அல்ல. தேவனுடைய ராஜ்யம் இந்த உலகத்திற்குரியதல்ல. ஆகவே தேவப்பிள்ளைகளுக்கு பூமியில் சத்துருக்களே இருக்க கூடாது. பூமியில் உங்களுக்கு சத்துருக்கள் இருப்பார்களானால் இன்னும் நாம் கிறிஸ்துவின் ராஜ்யத்திற்கு உட்படவில்லை என்பதே பொருள். இயேசுகிறிஸ்து கூறினார், 'என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல, அப்படியிருந்திருந்தால் உங்களிடம் என்னை ஒப்புகொடாதபடி என் ஊழியக்காரர்கள் போராடியிருப்பார்களே' (யோவான் 18:36)என்று. பூமிக்குரிய காரியங்களுக்காக, மக்களோடு போராடும் யாவரும் இவ்வுலகத்தின் ராஜ்யத்திற்கு உரியவர்களே! இன்னும் அண்டை வீட்டாரோடு சண்டையிட்டு கொண்டு, சகோதரனை பகைத்து, நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து கொண்டிருப்போமானால், நாம் இவ்வுலகத்திற்குரியவர்கள் என்பதற்கு அதுவே அத்தாட்சி.
.
பிரியமானவர்களே, நாம் எந்த ராஜ்யத்திற்குரியவர்களாக இருக்கிறோம்? நமது அன்றாட வாழ்க்கை நம்மை இந்த உலகத்திற்குரியவர்களாக மாற்றியிருக்குமானால், நம்மை தேவ ராஜ்யத்திற்குரியவர்களாக மாற்றி கொள்ள முடிவு செய்வோம். நாம் இந்த உலகத்தில் வாழ்கிறவர்களாக இருந்தாலும், நமது ராஜ்யம் பரலோகத்திற்குரியதாகவே இருக்க வேண்டும்! ஆமென் அல்லேலூயா!
.
பூமிக்குரியவை அல்ல பூமிக்குரியவை அல்ல
மேலானவைகளை என்றும் நாடிடுவோமே நாமும்
..
லாபமான தெல்லாம் நஷ்டமென்றெண்ணுகிறேன்
உலக மேன்மை எல்லாம் குப்பை என்றே சொல்வேன்