Tuesday, May 15, 2012

அன்பாகவே இருக்கும் தேவன்

தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார் (யோவான் 3:16)


ஒரு காவல் அதிகாரியின் கையில் 'தவறவிட்ட குழந்தை' என்ற சுவிசேஷ கைப்பிரதி ஒன்று கிடைத்தது. அதில் தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனை உலகிற்கு கொடுத்த அந்த அற்புத செய்தி சொல்லப்பட்டிருந்தது. அதை ஏளனமாக பார்த்த அவர், வழக்கம்போல கசக்கி அதை குப்பை கூடையில் எறிந்து விட்டார். அன்று மாலை அவருடைய வீட்டின் இரண்டாவது மாடியில் தன்னுடைய ஒன்றரை வயது குழந்தையுடன் கொஞ்சி விளையாடி கொண்டிருந்தார். மாடியின் முகப்பில் நின்ற அவர் கையிலிருந்த குழந்தை திடீரென துள்ளியது. அவரது இறுக்கமான கையிலிருந்து எப்படியோ நழுவி, கீழே விழ ஆரம்பித்தது, உடனே அவரும் கீழே குதித்தார். காவல் துறையின் பயிற்சியினால், குழந்தையை லாவகமாக பிடித்தார். தன்னை கீழே கிடத்தி தன் குழந்தையை மார்பில் ஏந்தினார். குழந்தை எந்த காயமுமின்றி காப்பாற்றப்பட்டது. ஆனால் அவருக்கோ இடது கை, காலில் முறிவு ஏற்பட்டு, மருத்தவமனையில் சேர்க்கப்பட்டார்;.
.
மறுநாள் கண்விழித்து, தன் குழந்தையை தேடினார். குழந்தை அவரை பார்த்து சிரித்தது. குழந்தையை காப்பாற்றி திருப்தியில் வலியையும் மறந்து, அவரும் புன்னகைத்தார். அன்று மாலை சில சகோதரிகள் மருத்துவமனை ஊழியம் செய்ய வந்தனர். அந்த அதிகாரியின் கையில், 'தவற விட்ட குழந்தை' என்ற அதே கைப்பிரதியை கொடுத்து, சுவிசேஷம் அறிவித்தனர். இப்பொழுது அவரால் இந்த கைப்பிரதியின் உண்மையை உணர முடிந்தது. 'பொல்லாதவனாகிய நானே என் பிள்ளைக்காக இதை செய்யும்போது, பரிசுத்தமுள்ள தேவன் பாவிகளாகிய நமக்காக மனுஷனாய் இப்புவிக்கு வந்து தன் உயிரை கொடுத்தது நிச்சயம் உண்மையே' என மனதிற்குள் எண்ணினார். அன்றே இரட்சிக்கப்பட்டார்.
.
நம்முடைய தேவன் ஏதோ மனிதனை படைத்தோம், அவன் எப்படியோ போகட்டும் என விட்டுவிடவில்லை. தம்முடைய மகிமையின் புகழ்ச்சிக்காக படைத்த மனுக்குலம் பாவத்தில் வீழ்ந்து மாண்டு போகிறதே என மன்தாபப்பட்டார். அதோடு நின்று விடாமல் நம்மை மீட்கும்படியாக குமாரனை அனுப்பினார். பாவிகளான நமக்கு அவ்வுண்மையை உணர செய்து இவ்வளவாய் அன்பு கூர்ந்தார். இந்த அன்பை மாம்ச கண்களால் பார்த்து விட முடியாது. நமது விசுவாச கண்களால் அதை காணலாம். அவரோடு ஐக்கியப்படும்போது அந்த அன்பை உணர முடியும்.
.
என்னை நேசிக்க யாருமில்லையே என ஏங்கும் சகோதரனே, சகோதரியே, நம்மேல் இயேசுகிறிஸ்து காட்டின அன்பை இன்னும் நாம் உணராமல் இருக்கிறோமா? மனித அன்பை நாடி ஓடுகிறோமா? அவர்கள் மூலம் ஏதாவது ஒரு நன்மை உண்டாகுமோ என்று ஏங்கி கொண்டு இருக்கிறோமா? நம்மேல் வைத்த அன்பினிமித்தம் தம் குமாரனை அனுப்பி, அவருடைய ஜீவனையே நமக்கு கொடுத்தவர் அவரை நாம் நம்பும்போது, நமக்காக எல்லாவற்றையும் கொடுப்பது அதிக நிச்சயமல்லவா?
.
தேவன் நம்மேல் வைத்த அன்பு உண்மையானது, உறுதியானது. யார் நம்மை கைவிட்டாலும், நம்மை விட்டு விலகாத அன்பு. அந்த அன்புக்கு நாம் பாத்திரர்களாக இல்லாவிட்டாலும், தம்முடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாக நம்மை அவருடைய சொந்த பிள்ளைகளாக ஏற்று கொண்டு, நமக்கும் பரலோக வாழ்வை, கொடுத்திட்ட அன்பு. அந்த அன்பை புரிந்து கொண்டு, நம்மை அவருக்கு ஒப்பு கொடுத்து, நம் இருதயத்தில் அவர் வாழ்வதற்கு இடம் கொடுப்போமானால், அந்த நித்திய அன்பு நம்மை நித்தியத்திற்கு நேராக வழிநடத்தும். அந்த அழியாத, மாறாத, அளவில்லா அன்பை ருசித்து, அவருக்கு சாட்சியாக வாழ்வோமாக. ஆமென் அல்லேலூயா!

Monday, February 27, 2012

கானல் நீர்

உங்கள் சாந்தகுணம் எல்லா மனுஷருக்கும் தெரிந்திருப்பதாக. கர்த்தர் சமீபமாயிருக்கிறார். - (பிலிப்பியர் 4:5)
 
 
கடும் கோடை காலத்தில் கண் தேடிய இடமெங்கும் தண்ணீர் தேடி மான் ஒன்று தவித்தது. தண்ணீர் தேடி அங்குமிங்கும் அலைந்தது. களைப்போடு தண்ணீரைத் தேடிக் கொண்டிருந்த போது அதன் கண்களில் ஒரு நீரோடை தெரிந்தது. தொலைவில் தெரிந்த அந்த நீரோடையை நோக்கி மான் இன்னும் வேகமாய் ஆர்வமாய் ஓடியது. அருகில் சென்ற போது வெறும் மண்ணைக் கண்டு ஏமாற்றம் அடைந்தது. அந்தோ! அது கானல் நீர்! ஆம்; கொடுமையான
காற்றில் ஏற்படும் வெப்பத்தின் மாறுபாட்டினால் இது உண்டாகிறது.
.
வேதத்திலும் இது போன்ற ஒரு சம்பவம் உள்ளது. இயேசுவானவர் ஊழியம் செய்ய சென்ற போது தூரத்திலே ஒரு அத்திமரத்தைக் கண்டு அதன் செழிப்பைப் பார்த்து, பசியோடு இருந்த படியால், அதன் கனிகளை எதிர்ப்பார்த்து ஆவலோடு அருகில் சென்றார். அந்தோ! அந்த மரத்தில் இலைகளைத் தவிர வேறொன்றும் காணாமல் ஏமாற்றமடைந்து, அம்மரத்தை சபித்தார். - (மத்தேயு 21:18-19)
.
நம்முடைய வாழ்க்கையும் அநேக நேரங்களில் வெறுமையான கானல் நீர் போன்று காணப்படுகிறது. சில நேரங்களில் நாம் வெளியில் பார்ப்பதற்கு செழிப்பாக தோற்றமளித்த அந்த அத்தி மரத்தைப் போல காணப்படுகிறோம். என்றோ ஒரு நாள் நம்முடன் பழகும் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் அண்டை வீட்டுக்காரர்களுக்கும் ஆலயத்திலுள்ள சக விசுவாசிகளுடைய பார்வையிலும் நாம் கனி நிறைந்தவர்களாகவும், தெளிந்த நீரோடை
போலவும் காணப்படலாம். ஆனால் நம் அருகில் அவர்கள் பழக நேரிடும் போது தான் நம்முடைய உண்மையான, கனியற்ற தன்மைகள் வெளிப்படும்.
 
.
முக்கியமாக. நம் வீட்டில் எப்போதும் நம்முடனே இருக்கும் கணவன்
மனைவி, பெற்றோர், மாமியார், மாமனார், பிள்ளைகளிடம் நாம் எப்படி நடந்துக் கொள்கிறோம்? அவர்கள் நம்மில் கனியைப் பார்க்கிறார்களா? நம்மிடம் தாழ்மையையும் பொறுமையையும் காண்கிறார்கள்? அன்பும் அமைதலும் நம்மிடம் உண்டா? நம் வீட்டிலுள்ளவர்கள் நம்மை குறித்து நற்சாட்சி கூற முடியுமா? ஒரு நிமிடம் யோசியுங்கள், ஆம் என்றால் உங்களது கிறிஸ்தவ பயணம் சரியாகத்தான் சென்றுக் கொண்டிருக்கிறது. இல்லையென்றால் நாம் வேஷமாகவே வாழ்கிறோம். கானல் நீரும், கனியற்ற அத்திமரமும் யாருக்கும் பயன்படாதது போல நமது வாழ்வும் பயனற்ற வாழ்வாகவே இருக்கும்.
 
.
பிரியமானவர்களே! தேவன் நமக்குள் மறைந்திருக்கும் இருதயத்தையே காண்கிறார். வெளித்தோற்றத்தையல்ல. ஆகவே நாம் வெளித்தோற்றத்தில் நற்சாட்சி பெற விரும்பாமல், மெய்யான குணங்களில் வளர பிரயாசப்படுவோம். ஆமென் அல்லேலூயா!
.
கனிதேடி வந்தேன் கனிக் காணவில்லை
கனிதர மாட்டோயோ அத்திமரமே!


Tuesday, February 21, 2012

வேதத்தின் புதையல்களை தேடுவோம்


நீ என் வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு,.. அதை வெள்ளியைப்போல் நாடி, புதையல்களைத் தேடுகிறதுபோல் தேடுவாயாகில், அப்பொழுது கர்த்தருக்குப் பயப்படுதல் இன்னதென்று நீ உணர்ந்து, தேவனை அறியும் அறிவைக் கண்டடைவாய். - (நீதிமொழிகள் 2:2,4,5).
.
ஒரு வயதான மூதாட்டியை அவருடைய சொந்தக்கார மனிதர் ஒருவர் கவனித்து வந்தார். அந்த மூதாட்டி மரிக்கும்போது, உயிலில் அவருக்கு ஒரு வேதாகமத்தையும், அதிலுள்ள அனைத்தும், மற்றும் தான் இருக்கும் எஸ்டேட்டை எல்லா கடன்களும் அடைத்தப்பின் மிச்சம் இருப்பது எல்லாம் அந்த மனிதருக்கு சேரும் என்று எழுதியிருந்தார்கள். ஆனால் அடக்க ஆராதனைக்குப்பின், எல்லா கடன்களும் அடைக்கப்பட்ட பின்பு, அந்த மனிதருக்கு சேர்ந்தது, மிகவும் குறைவான தொகைதான். அந்த மனிதர் அந்த வேதாகமத்தை எடுத்து மேலே ஒரு இடத்தில் வைத்து விட்டு, பின் மறந்து போனார்.
.
முப்பது வருடங்கள் கழித்து, தன் மகனோடு தங்குவதற்காக மேலே இருந்த பொருட்களை எடுத்தபோது, அவர் கண்களில் வேதாகமம் தட்டுப்பட்டது. அதை அப்போதுதான் அவர் திறந்து பார்க்க ஆரம்பித்தார். அதில் அடுக்கடுக்காய் டாலர் நோட்டுகள் ஆயிரக்கணக்காக ஒவ்வொரு பக்கத்திலும் வைக்கப்பட்டிருந்தது. வேதத்தை பிரித்து படிப்பவர்க்கே அந்த பணம் என்று அந்த மூதாட்டி வைத்து போயிருந்தார்கள். அதை அறியாதவராக, ஒரு ஏழையாய், தன்னை வெறுமையாய் விட்டு சென்றதாக அந்த மூதாட்டியின் மேல் கோபம் கொண்டவராக, முப்பது வருடங்களை கழித்திருக்கிறார்.
.
நம் தேவனும் வேதத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் நமக்கு ஆசீர்வாதங்களை எழுதி கொடுத்திருக்கிறார். ஆனால் நாமோ அதை வாசிப்பதில்லை, அதில் எழுதப்பட்டிருக்கிற காரியங்கள் யாருக்கோ என்று அந்நிய காரியமாக நினைக்கிறோம். 'என் வேதத்தின் மகத்துவங்களை அவர்களுக்கு எழுதிக்கொடுத்தேன்; அவைகளை அந்நியகாரியமாக எண்ணினார்கள்'(ஓசியா 8:12) என்று தேவன் சொல்வதை போல வேதத்தில் எழுதப்பட்டிருக்கிற காரியங்கள் யாருக்கோ எழுதப்பட்டிருக்கிறது என்று அதை வாசிக்காமல் விட்டு விடுகிறோம்.
.
வேதத்திலுள்ள மகத்துவங்களை காண என் கண்களை திறந்தருளும் என்று சங்கீதக்காரனை போல ஜெபித்து விட்டு, வாசிப்போமானால், தேவன் நமக்கு எழுதியிருக்கிற காரியங்கள், நமக்கு சொல்லும் எச்சரிப்புக்கள், நம்மை அன்போடு விசாரிக்கும் காரியங்கள், நமக்கு கொடுக்கும் ஆசீர்வாதங்கள் அத்தனையும் நாம் காண முடியும்.
.
அந்த மூதாட்டி எப்படி வேதத்தில் டாலர் நோட்டுக்களை வைத்திருந்தார்களோ, அதுப்போல தேவனும் ஆசீர்வாதங்களை வைத்திருக்கிறார். ஆனால் அதை பிரித்து படித்து, அதை சுதந்திரமாக எடுத்து கொள்ள வேண்டியது நமது கடமை. அதை பிரிக்காமல், போதகர்கள் படித்து நமக்கு சொல்வார்கள், அதை நாம் கேட்டால் போதும் என்று நினைத்தோமானால், நாம் ஆசீர்வாதத்தை சுதந்தரிக்க முடியாமற் போய் விடும்.
.
நாம் வேதத்தை வாசிக்காமல் இருப்பதனால்தான், வேத புரட்டர்கள் வேத வார்த்தையை புரட்டும்போது, அதை நிதானித்து அறியாமல் இருக்கிறோம். யாரும் சொல்வதை அப்படியே ஏற்று கொள்கிறோம். அது சரியானதொன்று அல்ல. வேதத்தை வாசிக்கும்போது ஆவியானவர் வெளிப்படுத்துவார், இதுதான் சரி, அது சரியல்ல என்று. அப்படிப்பட்ட மனநிலையோடு வாசிப்போமானால், கர்த்தரின் வார்த்தைகளை கொண்டு யாரும் நம்மை ஏமாற்ற முடியாது.
.
'நீ என் வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு,.. அதை வெள்ளியைப்போல் நாடி, புதையல்களைத் தேடுகிறதுபோல் தேடுவாயாகில், அப்பொழுது கர்த்தருக்குப் பயப்படுதல் இன்னதென்று நீ உணர்ந்து, தேவனை அறியும் அறிவைக் கண்டடைவாய்' என்ற வார்த்தையின்படி, வேதத்தில் கர்த்தர் எழுதி கொடுத்திருக்கிற காரியங்களை வெள்ளியை போல நாடுவோம், புதையல்களை தேடுவது போல தேடுவோம். அப்பொழுது ஆசீர்வாதங்களையும், தேவனை அறியும் அறிவையும் நிச்சயமாய் கண்டடைவோம். ஆமென் அல்லேலூயா!



வேதத்திலுள்ள அதிசயம் அனைத்தும்
நன்கு புரியும்படி
தேவனே எனது கண்களையே
தினமும் திறந்தருளும்
ஆண்டவரே உம்பாதம் சரணடைந்தேன்
அடிமை நான் ஐயா

Wednesday, February 15, 2012

ஓடு ஓடு விலகி ஓடு


அன்றியும், பாலியத்துக்குரிய இச்சைகளுக்கு நீ விலகியோடி, சுத்த இருதயத்தோடே கர்த்தரைத் தொழுதுகொள்ளுகிறவர்களுடனே, நீதியையும் விசுவாசத்தையும் அன்பையும் சமாதானத்தையும் அடையும்படி நாடு. - (2 தீமோத்தேயு 2:22).
. 
இந்த பூமியில் பிறந்த எவரும் பரிபூரண பரிசுத்தர்கள் அல்ல. வாலிப வயதிலே மாத்திரமல்ல, நடுத்தர வயதிலும் எதிர்பாலினத்தவருடைய அன்பை பெறவும், அன்பை காண்பிக்கவும் தீவிரப்படுவது இயற்கையானதே. நாம் பாலியல் உணர்வுகளோடுதான் படைக்கப்பட்டுள்ளோம். ஆனால் நாம் இவ்விஷயத்தில் தூய்மையை காத்து கொள்ள வேண்டியது மிக மிக முக்கியம். பாலியல் சோதனையில் அகப்படும்போது, அச்சூழ்நிலையிலிருந்து தப்பி ஓடுவோமானால் நம் உடலையும், ஆத்துமாவையும் தப்புவித்து கொள்ள முடியும்.
. 
ஏறத்தாழ எல்லா நாடுகளிலும் பால் உறவில் தூய்மை என்பது தேடி கண்டுபிடிக்க வேண்டிய ஒன்றாயிற்று. பெற்றோருக்கு தெரியாமல் தவறான உறவில் ஈடுபட்டு, பின் கருக்கலைப்பு செய்கிற பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதில் அதிகமானோர் கல்லூரி மாணவிகளே! அதற்கு முக்கிய காரணம் தேவன் மனிதர்களுக்கு நியமித்திருக்கிற 'பால் உறவில் தூய்மை' என்னும் விதிமுறைககு விரோதமாக மனிதர், தேவபயமின்றி வாழ்வதே ஆகும்.
.
பால் உறவில் தூய்மையாக வாழ வேண்டும் என்கிற தீர்மானத்தில் உறுதியாய் இருக்கும்போது, அந்த தீர்மானத்தை உடைக்கும்படியாக தவறு செய்வதற்கான தனிமையான சந்தர்ப்பத்தை சாத்தானே உங்களுக்கு அமைத்து கொடுப்பான். வேதத்திலே யோசேப்பு தன்னை தவறு செய்யும்படி அழைத்த எஜனானின் மனைவியை விட்டு ஓடிப்போனதை போல நீங்களும் ஓடிப்போவதற்கு ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும். இன்றைக்கு அநேகர் பாவமான சூழ்நிலையில் இருந்து கொண்டே, பாவம் செய்யாமல் பரிசுத்தமாய் வாழ வேண்டும் என்று வாஞ்சித்தும், தொடர்ந்து பாவத்திற்கு அடிமையாகவே வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். ஏனென்றால் ஒரு முறை பாவத்தில் விழுந்தவர்கள் அதை விட்டு வெளியே வருவது மிகவும் கடினமே! செய்து பார்த்தால் தான் என்ன என்று துணிவுடன் பாவத்தில் விழுபவர்கள் அதற்கு அடிமையாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். வெளியே வரவேண்டும் என்ற ஆசை இருந்தாலும் வெளியே வரமுடியாதபடி சூழ்நிலைகள் அமைந்து விடுகின்றன. ஆகவே பாவம் பழக்கமாகி போகுமுன், 'இது பாவ சூழ்நிலை' என்று தெரிந்தவுடன் அந்த இடத்தை விட்டு ஓட்டம் பிடியுங்கள். சிம்சோன் பாவ சூழ்நிலையை நோக்கி ஓடினான், முடிவு மரணம். யோசேப்பு பாவ சூழ்நிலையை விட்டு ஓடினான், முடிவு உயர்வு.
ஒரு முறை விழுந்தவர்கள் ஐயோ நான் விழுந்து விட்டேனே என்று விழுந்த இடத்திலேயே கிடக்காமல் எழுந்து, மன்னிப்பதில் தயவு பெருத்த கர்த்தரிடம் மன்னிப்பை பெற்று கொண்டு தூய்மையாக வாழ பிரயாசப்பட வேண்டும். அசுத்தத்திலேயே விழுந்து புரண்டு கொண்டு இருக்க கூடாது.
.
இந்த விஷயத்தில் நாம் தூய்மையாக இருக்க வேண்டுமென்றால் முதலாவது நம் இருதயத்தில் யோசேப்பை போல - (ஆதியாகமம் 39:9) எந்த சூழ்நிலையிலும் தேவனுக்கு விரோதமாக பாவம் செய்ய கூடாது என்று தீர்மானம் பண்ணவேண்டும். அப்பொழுது பாவ சூழ்நிலைகளும், சோதனைகளும் வந்தாலும், நம் சிந்தனையிலும், செயலிலும் கர்த்தருக்கேற்ற தூய்மையோடு இருப்பதை கண்டு ஆச்சரியப்படுவோம்.
.
அடுத்ததாக நான் இந்த காரியத்தில் விழ சான்ஸே கிடையாது என்று ஓவர் நம்பிக்கை வைக்காமல் எப்போதும் ஜாக்கிரதையாய் இருப்போம். காரணம் பவுல் மேலே குறிப்பிட்டுள்ள வசனத்தை ஆலோசனையாக தன்னுடைய உத்தம குமாரனாகிய தீமோத்தேயுவுக்கே அவர் எழுதினார். அப்படியென்றால் உத்தமர்களும் சறுக்கி விட வாய்புள்ளதல்லவா?
.
இயேசுகிறிஸ்து தமக்கு வந்த மூன்று பாவ சோதனைகளையும் வேத வசனத்தை கொண்டே ஜெயித்தார். நாமும் வேத வசனத்தை கொண்டே பிசாசையும், இச்சைகளையும், அசுத்தங்களையும் ஜெயித்து என்றைக்கும் பாலியல் தூய்மையுள்ளவர்களாக, தேவன் விரும்பும் பரிசுத்தர்களாக வாழ்வோம். ஆமென் அல்லேலூயா!
.
வேசித்தனத்திற்கு விலகி ஓடு
இயேசுகிறிஸ்துவை நோக்கி ஓடு
நோக்கி ஓடு நீ நோக்கி ஓடு

.
ஓடு ஓடு விலகி ஓடு
வேண்டாத அனைத்தையும் விட்டு ஓடு
ஓடு ஓடு தொடர்ந்து ஓடு
இயேசுகிறிஸ்துவை நோக்கி ஓடு

.
 

Sunday, February 12, 2012

குணமாக்கும் தேவன்


நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம். - (ஏசாயா 53:5).
.
டாக்டர் வில்லியம் ஜேம்ஸ் என்பவர் பிரபல மனநோய் மருத்துவ நிபுணர். இவர் ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தில், (Harvard University)பேராசிரியராக பணியாற்றினார். திடீரென்று அவர் ஒரு மர்ம நோயால் தாக்கப்பட்டார். நரம்பு மண்டலம் முழுவதும் தளர்ச்சியடைந்து சரீரம் செயிலிழந்தது. மருத்துவர்களால் அவரை சுகமாக்க முடியவில்லை. அவர் மருத்துவத்தில் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தபடியால், மருத்துவர்களின் இயலாமை அவரை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியது. உலகில் நரம்பு தொடர்பான நிபுணர்கள் எங்கெங்கு உண்டோ, அவர்கள் அவரை குணமாக்க அழைக்கபட்டனர். ஆனால் ஒரு பலனுமில்லை. தான் வாழ்ந்து என்ன பயன் என்று அவர் நினைக்க ஆரம்பித்தார்.


டாக்டரின் இந்நிலை குறித்து அறிந்த ஒரு தேவ ஊழியர் அவரை சந்தித்தார்.
இவர் சுகமளிக்கும் வரத்தை பெற்றவர் அல்ல. சாதாரண மனிதரான அந்த ஊழியர், ஜெபிக்குமுன், இயேசுகிறிஸ்துவைக் குறித்தும், அவர் அளிக்கும் தெய்வீக சுகத்தைக் குறித்தும் பேசினார். டாக்டருக்கோ நம்பிக்கை வரவில்லை. எனினும் அவருடைய அனுமதியுடன் தலையின் மீது கை வைத்து ஜெபித்தார். உடனே, ‘மின்சாரம் போன்ற வல்லமை என் உடலுக்குள் பிரவேசித்து செயல்படுகிறதை நான் உணர்ந்தேன். என் நரம்புகள் பெலப்படுகிறதை அறிகிறேன். நான் குணமாகிறேன்’ என்று உற்சாகமாக கூறிக்கொண்டே அவர் அற்புதமாக சுகமடைந்தார். அன்றே இயேசுவுக்கு தன் வாழ்வை அர்ப்பணித்தார்.


மருத்துவர்களால் கூடாத காரியம் நம் இயேசுவால் கூடும். பொதுவாகவே நாம் மருந்து மாத்திரைகள் மீது நம்பிக்கை வைக்கிறோம். மருந்துகளை எடுப்பது தவறல்ல. வேதத்திலே எசேக்கியா ராஜாவின் புற்றுநோய் குணமாக அத்திப்பழ அடையை போடும்படி தேவனே கூறுகிறார். இருப்பினும் நமது நம்பிக்கையை மருந்துகளின் மேல் வைக்காமல், எல்லாவித மருந்துகளையும் கண்டுபிடிக்க மனிதனுக்கு ஞானம்கொடுக்கும் தேவன் மேலேயே வைப்போம். டாக்டர் கொடுக்கும் மருந்தை சாப்பிடுங்கள். சுகத்தை தேவனிடமிருந்து எதிர்பாருங்கள். அவரே நம்மை குணமக்க வல்லவர்.
.இன்றும் நம்மில் அநேகர் தீராத வேதனையோடும், குணமடையாத வியாதியோடும் வாழ்ந்துக் கொண்டிருக்கலாம். இருந்த பணத்தையெல்லாம் மருத்துவத்திற்கு செலவழித்தும் வியாதி நீங்காமலிருக்கலாம். இயேசுகிறிஸ்துவை நம்பி வாருங்கள். அவர் குணமாக்கும் கர்த்தர். அவர் சிலுவையில் பட்ட காயங்களின் தழும்புகளால் குணமாகிறோம் என்று வேதம் நமக்கு கூறுகிறது. அவரிடம் வந்த அநேகர் முற்றிலும் சுகமானார்கள்.

இன்றும் அதே தேவனாய் மாறாதவராக குணப்படுத்திக் கொண்டிருக்கிறார். அவருடைய நாமங்களில் ஒன்று யெகோவா ரஃபா. அப்படியென்றால் குணமாக்கும் கர்த்தர் என்று அர்த்தமாகும். 12 வருடமாய் பெரும்பாடுள்ள ஒரு ஸ்திரீ இயேசுவின் வஸ்திரத்தின் ஓரத்தை தொட்டால் நான் குணமாவேன் என்று விசுவாசித்து தொட்டாள். அந்த கணமே அவள் குணமானாளே! 38 வருடமாய் படுத்த படுக்கையாய் கிடந்த திமிர்வாதக்காரனை இயேசு கண்டு அவன் வெகுநாளாய் வியாதிப்பட்டவன் என்று அறிந்து அவனை சுகமாக்கினாரே! அதே தேவன் இன்றும் மாறாதவராயிருக்கிறார். நாம் படும் வேதனைகளை அறிந்த தேவன் நம் தேவன். நாம் படுகிற துன்பங்களை காண்கின்ற தேவன். அவருடைய தழும்புகளால் நம்மை குணமாக்கிற தேவன்.


உம்மால் ஆகாத காரியம் ஒன்றுமில்லை
எல்லாமே உம்மால் ஆகும் இயேசுவே
சொல்லி முடியாத அற்புதம் செய்பவர் நீரே
எண்ணி முடியாத அதிசயம் செய்பவர் நீரே

Wednesday, February 8, 2012

கணக்கொப்புவிக்க வேண்டும்


ஆதலால் நம்மில் ஒவ்வொருவனும் தன்னைக்குறித்துத் தேவனுக்குக் கணக்கொப்புவிப்பான். - (ரோமர் 14:12).

ஒரு தேவ மனிதர் இரயிலை பிடிப்பதற்காக வேகமாக இரயில் நிலையத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார். நுழைவாயிலில் இரு மனிதர்க்ள சரியான உடையின்றி, எலும்பும், தோலுமாக உடலில் உயிரே இல்லையோ என சந்தேகிக்கும் அளவுக்கு பரிதாபமாக படுத்திருந்தனர். ஒரு நிமிடம் நின்று அவர்களுக்காக ஜெபித்து விட்டு கடந்து சென்றார். இரயிலில் அமர்ந்தவுடன் தனது உடலை பார்த்தார். உடையை பார்த்தார். கண்ணீர் நிறைந்த கண்களோடு, 'இயேசுவே ஏன் அவர்களை மட்டும் இவ்வாறு வைத்திருக்கிறீர்?' என்று மனதிற்குள் கேட்டார். சிறிது நேரத்தில் அவருடைய இருதயத்தில் இவ்வாறு உணர்த்தப்பட்டார். 'அவர்களை விட உனக்கு அதிகம் கொடுத்துள்ளேன். ஆகவே அவர்களை விட உன்னிடம் அதிகம் எதிர்ப்பார்க்கிறேன்' என்பதாக. அவர் இரயில் பயணத்தில் இன்னும் தன்னை கர்த்தருக்கு அர்ப்பணித்தார்.
.
ஆம், ஐந்து தாலந்து கொடுத்தவனிடம் தேவன் பத்து தாலந்தை எதிர்ப்பார்த்தார். தேவன் நமக்கு கொடுக்கும் அனைத்தையும் நம் சுய இலாபத்திற்கும், சுய கௌரவத்திற்காகவும், பெருமைக்காகவுமே பயன்படுத்துவோமானால் இவ்வுலகில் மிகவும் வறுமையில் வாடுபவர்களை விட பரிதபிக்கப்பட்டவர்கள் நாமே. தேவன் நமக்கு கொடுத்துள்ள பெரிய வேலையை குறித்தோ, பணத்தை குறித்தோ, நல்ல உடல் ஆரோக்கியத்தை குறித்தோ கணக்கொப்புவி என்று கேட்பாரானால் நமது நிலை எப்படி இருக்கும் என சிந்திப்போமா?

.
தேவன் உங்களுக்கு கொடுத்த அதிகமதிகமான பணத்தை கொண்டு லேட்டஸ்ட் மாடல் கார்களை வாங்கி கொண்டு இருக்கிறோமா? வீட்டில் ஒவ்வொரு பகுதியையும் இடித்து புது மாடலில் கட்டுகிறோமா? அல்லது தேவனுடைய ஊழியத்திற்கு, ஏழை எளியவர்களுக்கு கொடுக்கிறோமா? இப்பொழுதெல்லாம் பெரும் பணக்காரர்கள் தங்கள் புகழ்ச்சிக்காகவே காணிக்கைகளையும், உதவிகளையும் செய்கின்றனர். அப்படிப்பட்ட சிந்தையாயிராதபடி எச்சரிக்கையாயிருப்போம்.

.
தற்போதுள்ள உலகில் மாதம் ஐம்பதாயிரம், ஒரு லட்சம் சம்பளம் வாங்குவதெல்லாம் சர்வ சாதாரணமாகி விட்டது. இவ்வளவு பெரிய தொகை நமது திறமைக்கும், படிப்பிற்கும் கிடைத்த பரிசு மட்டுமல்ல, தேவன் நம்மிடம் அதிகமாக எதிர்ப்பார்ப்பதினால் கிடைக்கும் அதிக தொகை என்பதை மறந்து போகாதிருப்போம்.

.

.
யோசேப்பிற்கு இவ்வளவு பெரிய பதவி கிடைத்ததென்றால் தமது தாசனாகிய ஆபிரகாமின் சந்ததியை பஞ்சத்தில் இருந்து காக்கவே! எஸ்தருக்கு கொடுக்கப்பட்ட பெரிய பதவி, யூத ஜனங்களின் உயிரை காப்பாற்றவே! தானியேலுக்கு அரசியலில் உயர் பதவியை தேவன் கொடுத்ததற்கு காரணம் தம்மை பற்றி அறியாத ஜனங்கள் தானியேலின் வைராக்கியத்தின் மூலம் தேவனே கர்த்தர் என்று அறிந்து கொள்ளவே!

.
பிரியமானவர்களே, தேவன் நமக்கு கொடுத்திருக்கும் பதவியும், செல்வாக்கும் அவரை உயர்த்தவே! அதிகமாக நமக்கு தேவன் கொடுக்க கொடுக்க நாம் அவருக்கு திரும்பி அதிகமாக கொடுக்க வேண்டும் என்றே எதிர்ப்பார்க்கிறார். பணத்தில் மட்டுமல்ல, நம்முடைய சாட்சியில், நம்முடைய வார்த்தைகளில், நம்முடைய செயல்களில் அவரை வெளிப்படுத்தவே எதிர்ப்பார்க்கிறார். அரசாங்கத்தில் இருப்பவர்கள் லஞ்சம் ஊழலுக்கு சாயாத சாட்சியுள்ள கிறிஸ்தவ வாழ்வை எதிர்ப்பார்க்கிறார். அப்படிப்பட்டதான வாழ்வை வாழ்ந்து அவருக்கு பிரியமாக இருப்போம். கர்த்தர் அதை ஆசீர்வதிப்பார். ஆமென் அல்லேலூயா!

. 
பண்படுத்தும் உம் சித்தம் போல
பயன்படுத்தும் உம் விருப்பம் போல
உம் கரத்தில் நான் புல்லாங்குழல்
ஒவ்வொரு நாளும் இசைத்திடுமே
உமக்காக தானே ஐயா - நான்
உயிர் வாழ்கின்றேன் ஐயா

Friday, February 3, 2012

ஆயுசு நாட்கள்


எங்கள் ஆயுசுநாட்கள் எழுபது வருஷம், பெலத்தின் மிகுதியால் எண்பது வருஷமாயிருந்தாலும், அதின் மேன்மையானது வருத்தமும் சஞ்சலமுமே; அது சீக்கிரமாய்க் கடந்து போகிறது, நாங்களும் பறந்துபோகிறோம். - (சங்கீதம் 90:10).
.
ஒரு வேடிக்கையான கதை உண்டு. தேவன் முதலாவது ஒரு காளையை
உருவாக்கினார். உருவாக்கி, அதனிடம் 'நீ நாளெல்லாம் ஒரு விவசாயின் கீழ் இருந்து சூரியனுக்கு கீழே நிலத்தை உழுது உழைக்க வேண்டும். உனக்கு வாழ்நாளாக 50 வருடங்கள் தருகிறேன்' என்று கூறினார். அதற்கு காளை, 'என்னது, இத்தனை கஷ்டமான வேலை செய்வதற்கு எனக்கு ஏன் ஐம்பது வருடங்கள்? வேண்டாம், வேண்டாம் எனக்கு வாழ்நாள் இருபது வருடங்கள் போதும், முப்பது வருடங்களை உமக்கே திருப்பி தருகிறேன்' என்றது. தேவனும் அதற்கு ஒத்து கொண்டார்.
.

அடுத்ததாக அவர் ஒரு குரங்கை உண்டாக்கினார். 'குரங்கு நீ மனிதர்களை சிரிக்க வைக்க வேண்டும். நீ செய்கிற சேட்டைகளை பார்த்து அவர்கள் சிரிக்க வேண்டும். உனக்கு 20 வருடங்களை வாழ்நாளாக தருகிறேன்' என்றார். அதற்கு குரங்கு, 'இந்த வேலைக்காக நான் இருபது வருடங்கள் உயிர் வாழ வேண்டுமா? பத்து வருடங்கள் போதும், பத்து வருடங்களை உமக்கே தருகிறேன்' என்றது. தேவனும் ஒத்து கொண்டார்.
.

அடுத்ததாக அவர் ஒரு நாயை உண்டாக்கினார். உண்டாக்கி, 'நீ நாள் முழுவதும் வீட்டு வாசற்படியில் உட்கார்ந்து, போகிற வருகிறவர்களை பார்த்து குரைத்து கொண்டிருக்க வேண்டும். உனக்கு வாழ்நாளாக இருபது வருடங்களை தருகிறேன்' என்றார். அதற்கு நாய் 'வாழ்நாளெல்லாம் நான் வீட்டு வாசற்படியில் இருந்து என் தொண்டை தண்ணீர் வற்றி கத்தி கொண்டு இருக்க வேண்டுமா? எனக்கு பத்து வருடங்கள் போதும், பத்து வருடங்ளை உமக்கே திருப்பி தருகிறேன்' என்றது. தேவனும் ஒத்து கொண்டார்.

.

அடுத்ததாக மனிதனை உண்டாக்கினார். அவனிடம், 'நீ ஒன்றும் செய்ய வேண்டாம், நேராநேரம் நன்கு சாப்பிட்டு, வாழ்க்கையை அனுபவி. உனக்கு 20 வருடங்களை தருகிறேன்' என்றார். அதற்கு மனிதன், 'ஒன்றும் செய்யாமல் ஜாலியாக இருப்பதற்கு இருபது வருடங்கள் மட்டும் தானா? காளை வேண்டாம் என்று கூறின முப்பது வருடங்கள், நாய் வேண்டாம் என்று கூறின 10 வருடங்கள், குரங்கு வேண்டாம் என்று கூறின பத்து வருடங்கள் எல்லாவற்றையும் சேர்த்து எனக்கு தாரும், நான் அவற்றை எடுத்து கொள்கிறேன. அப்போது மொத்தம் எழுபது வருடங்கள் ஆகுமல்லவா?' என்றான். தேவனும் ஒத்து கொண்டார்.

.
அதனால் தான் நாம் முதல் 20 வருடங்கள் ஒன்றும் செய்யாமல், உறங்கி, தூங்கி, வாழ்க்கையை அனுபவிக்கிறோம். அடுத்த முப்பது வருடங்கள் காளையை போல கடுமையாக உழைக்கிறோம். அடுத்த பத்து வருடங்கள் நம் பேர குழந்தைகளிடம் குரங்கை போல முகத்தை காட்டி, அவர்களை சிரிக்க வைக்கிறோம். அடுத்த பத்து வருடங்கள் நாயை போல வீட்டிலிருந்து, காவல் காத்து கொண்டிருக்கிறோம்.

.

இந்த கதை வேடிக்கையாக இருந்தாலும், தேவன் நமக்கு கொடுத்த வருடங்கள் எழுபது, பெலத்தின் மிகுதியால் எண்பது வயது என்று வேதம் கூறுகிறது. இந்த எழுபது வருட வாழ்க்கையில் நாம் எல்லா பாடுகளையும் பட்டு, வாழ்ந்து முடித்தாலும், அதன் மேன்மை வருத்தமும் சஞ்சலமுமே; அது சீக்கிரமாய்க் கடந்து போகிறது, நாங்களும் பறந்துபோகிறோம் என்று தேவ தாசனாகிய மோசே கூறுகிறார். எழுபது வயதிற்கு மேல் வியாதியும், படுக்கையில் விழுந்து யாராவது திருப்பி விட்டால்தான் திரும்ப முடியும் என்ற நிலைமையும் இருந்தால் மிகவும் வருத்தமும் சஞ்சலமுமே! இதில் இன்னும் வருடங்கள் கூட்டப்பட்டால் அப்பப்பா எத்தனை வேதனை! யாரும் படுக்கையில் விழுந்து, மற்றவர்களுக்கு பாரமாக, நாமே நமக்கு பாராமாக இருந்து விடக்கூடாது! தேவன் அப்படிப்பட்ட வாழ்வை யாருக்கும்
தராதிருப்பாராக! 

.

தேவன் கிருபையாய் கொடுத்த இந்த வாழ்க்கையில், மனிதனுக்கு மட்டுமே அதை அவன் சித்தத்திற்கு செலவிடும் பாக்கியத்தை கொடுத்திருக்கிறார். மிருகங்களும் தங்கள் இஷ்டத்திற்கு வாழ்ந்தாலும் அவற்றை நாம் பொருட்டாக மதிப்பதில்லை. நாம் நம் இஷ்டத்திற்கு வாழ்ந்தாலும் அதை தேவன் கையில் ஒப்புக்கொடுத்து வாழ்ந்தோமானால் அதற்கு பின் வரும் வாழ்வில் நமக்கு பலன் உண்டு. தற்போது ஏனோதானோ என்று வாழ்ந்து, பின்வரும் வாழ்வில் பலனற்று போவதை விட இப்போதே நமக்கு கொடுக்கப்பட்டிருக்கும் அருமையான வாழ்வை அருமையான பாதுகாக்கும் தேவனிடத்தில் ஒப்புக்கொடுத்து, அவருடைய சித்தத்தின்படி வாழும்போது, அவர் நம் வாழ்வை பொறுப்பெடுத்து கொள்வார்.
.

இந்த உலகில் நாம் வாழும் வாழ்கை ஒருமுறைதான். அதை பலர் சிறக்க வாழவும் முடியும். பலர் வெறுக்க வாழவும் முடியும். நம்முடைய கைளில் கொடுக்கப்பட்டுள்ள இந்த வாழ்க்கையை தேவன் நாமம் மகிமைப்பட வாழ்வோம். அவருடைய நாமத்திற்கு சாட்சியாக வாழ்வோம். ஒவ்வொரு நாளும் தேவனுடைய பரிசு என்று அவருக்காக, அவரை துதித்து, அவருக்கென்று வாழ்வோம். மறுமையின் வாழ்வில் அவர் நமக்கு சிறந்த பலனை தருவார். ஆமென் அல்லேலூயா!
.
.
பூமியிலே அந்நியர் என்று அறிக்கை செய்திடுங்கள்
இனிமேல் வரும் பலன்மேல் மனம் ஊன்றியே வாழ்ந்திடுங்கள்
இயேசுவின் சொல்லுக்கு எல்லாவ்ற்றிலும் கீழ்ப்படிந்திடுங்கள்
முதல் அன்பிலே குறையாமலே இயேசுவை பின்பற்றுங்கள்
மேலாவவைகளை நாடுங்கள்
தேவாதி தேவனின் பிள்ளைகள் நீங்கள்
.

Wednesday, February 1, 2012

கவலைப்படாதே மனமே

இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: மார்த்தாளே, நீ அநேக காரியங்களைக்குறித்துக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய். - (லூக்கா 10:41).
.
பண ஆசை எல்லா தீமைக்கும் வேராயிருப்பது போல மனிதனுக்கு சோர்வை உண்டாக்கும் வேர் கவலையில் தான் ஆரம்பமாகிறது. கவலைப்படாதவர்கள் இவ்வுலகில் யாருமே கிடையாது. அரசன் முதல் ஆண்டி வரை, பிரதம மந்திரி முதல் பியூன் வரை அனைவருமே கவலைப்படுகிறோம். ஒரு காரியத்தை குறித்து கவலைப்படும்போது அதில் அடங்கியிருக்கிற இரண்டுஉண்மைகளை நாம் அறிந்து கொள்வது நமக்கு பயனளிக்கும்.
.

1. நம்மால் மாற்ற முடியாத காரியங்களுக்காக கவலைப்படுதல்
2. நம்மால் மாற்றக்கூடிய காரியங்களுக்காக கவலைப்படுதல்
.

நம்மால் மாற்ற முடியாத காரியம்: நம் வாழ்வில் நடந்துள்ள சில காரியங்களை நம்மால் மாற்ற இயலாது. உதாரணமாக நமது நெருங்கின உறவினர் ஒருவர் திடீரென இறந்து விட்டார் என வைத்து கொள்வோம். அது நம்மை வெகுவாக பாதிக்கிறது. அதை குறித்து கவலைப்படுகிறோம். அதை நம்மால் மாறற் முடியுமா? சூரியன் வடக்கே உதிப்பதும், தெற்கே அஸ்தமாவதும் எப்படி இயலாத காரியமோ அதே போலத்தான் அவர் மீண்டும் உயிரோடு வருவதும் இயலாத காரியம். ஆகவே அதையே எண்ணி எண்ணி கவலைப்படாமல் கர்த்தருக்குள் நம்மை திடப்படுத்தி கொள்வதேபுத்திசாலித்தனமாகும்.
.

.

நம்மால் மாற்றக்கூடிய காரியம்: நமது வாழ்வில் நடந்துள்ள சில காரியங்களை நம்மால் மாற்ற முடியும். உதாரணமாக ஒரு நேர்முகத் தேர்வில் தேல்வி அடைந்து விட்டீர்கள். அதற்காக இந்த தோல்வியை வெற்றியாக மாற்றக்கூடிய நடவடிக்கையில் இறங்க வேண்டுமே தவிர கவலைக்கடலில் அமிழ்ந்து விடக்கூடாது. ஒரு வீட்டின் சுவரில் கீழ்க்கண்ட வாசகம் மாட்டப்பட்டிருந்தது. 'உன்னால் எதை மாற்ற இயலுமோ, மாற்ற முடியுமோ அதை மாற்ற முயற்சி செய். உன்னால் எதை மாற்ற முடியாதோ அதை மறந்து விடு. கனவில் கூட அதை குறித்து நினைக்காதே' என்பதாகும்.
.
இப்படி கவலைகள் விதவிதமாய் இருந்தாலும் எல்லா கவலைக்கும் ஒரே மருந்து ஆண்டவரின் பாதத்தில் அமருவதுதான். அந்த அறிவுரையை இயேசுகிறிஸ்து மார்த்தாளிடம் கூறுகிறார் வீட்டிற்கு வந்த விருந்தினருக்கு உணவு ஆயத்தம் செய்வது இயற்கை. ஆனால் வந்த விருந்தினர் தன்னை பாராட்ட வேண்டும், புகழ வேண்டும் என்பதற்காக நிறைய பதார்த்தங்களை செய்ய முயற்சிப்பது தேவயைற்றது. இதுதான் மார்த்தாள் செய்த தவறு. வந்தவர் யாரோ ஒருவர் அல்ல, ஐந்து அப்பம் இரண்டு மீனை கொண்டு ஐயாயிரம் பேரை போஷித்தவர். அவர் நினைத்தால் மார்த்தாள் ஒன்றும் செய்யாமலே நல்ல உணவை கிறிஸ்துவாள் கொடுத்திருக்க முடியும். ஆனால் அதை எல்லாம் நினைக்காமல், தன் தங்கை மரியாள் தன்னுடன் சமையல் வேலை செய்யுமாறு இயேசுவிடம் கேட்கிறாள். வீட்டிற்கு வந்த விருந்தினரிடம் புகார் செய்வது சரியல்ல. மார்த்தாளுக்கு இயேசு கொடுத்த

பதில் என்ன தெரியுமா? ' நீ அனாவசியமாக அநேக காரியங்களை குறித்து கவலைப்பட்டு கலங்குகிறாய்: உனக்கு தேவை என்ன தெரியுமா? பேசாமல் அந்த வேலைர அனைத்தையும் விட்டு விட்டு, உன் தங்கையை போல என் பாதத்தில் அமர்ந்து நான் சொல்லும் வார்த்தைகளை கேள், இதுதான் உன் கவலைக்கு மருந்து' என்றார்,
..
இதை வாசிக்கிற நாமும் கூட சிறு சிறு காரியங்களுக்காக, அனாவசியமான காரியங்களுக்காக, மாற்ற முடியாத காரியங்களுக்காக, இப்படி நடந்து விடுமோ, அப்படி நடந்து விடுமோ என கற்பனையாக கவலைப்பட்டு கொண்டே இருக்கிறோம். இந்த கவலைகளால் மன சோர்வடைந்து, செய்ய வேண்டிய காரியங்களை செய்ய முடியாதாடி சிந்தனைகளை சிதற விட்டு விடுகிறோம். ஆகவே கவலைப்பட நேரம் கிடைக்காத அளவு பகலில் நம்மை வேலைகளில் மூழகடித்து கொண்டோமானால், இரவில் எதையும் குறித்து கவலைப்படுவதற்கு முன் உறங்கி விடுவோம். 

கவலைப்படாதீர்கள் என்று சொன்ன கர்த்தரின் வார்த்தைக்கு கீழ்ப்பட்டு, நம் பாரங்கள் கவலைகள் எல்லாவற்றையும் அவருடைய பாதத்தில் வைத்து விடுவோம். கர்த்தர் எல்லாவற்றையும் பார்த்து கொள்வார். ஆமென் அல்லேலூயா!
.
எனக்காக யாவையும் செய்பவரே
செய்து முடிப்பவரே
என் பாரங்கள் என் சுமைகள்
உம் பாதத்தில் இறக்கி வைத்தேன்

Tuesday, January 31, 2012

ஜெயங் கொடுக்கும் தேவன்


நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம். - (1 கொரிந்தியர் 15:57)

ஒரு விவசாயியும் அவருடைய நண்பரும் காட்டில் வாத்துக்களை பிடிப்பதற்காக சென்றுக் கொண்டிருந்தனர், அவர்கள் தங்கள் பேச்சைகடவுளைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது விவசாயியின் நண்பர், ‘நீர் எப்போதும் உமக்கும் சத்துருவுக்கும் இடையே நடக்கும்போராட்டத்தைப் பற்றிக் கூறுகிறீரே, நான் ஒரு கிறிஸ்தவன் கூட இல்லை. ஆனால் எனக்கு அந்த மாதிரி போராட்டங்கள் எதுவுமே இல்லையே’ என்றுக் கூறினார். 

அதற்கு அந்த விவசாயி சொனனார், ‘நாம் இப்போது வேட்டையாடப் போகிறோம், அதில் இரண்டு வாத்துக்கள் அடிபட்டு ஒன்று இறந்துப் போகிறது, மற்றது தப்பி ஓடப் பார்க்கிறது, இதில் எதை நீர் பின்தொடருவீர்’ என்றுக் கேட்டார். அதற்கு நண்பர், ‘தப்பியோடப் பார்ப்பதைத்தான், ஏனென்றால், இறந்துக் கிடப்பதை நாம் எப்போது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாமே!’ என்றுக் கூறினார். அப்போது விவசாயி, ‘சாத்தானுக்கு தெரியும், நீர் இறந்துப் போன வாத்து என்று’ என்றுக் கூறினார்.
.
கர்த்தருடைய வழிகளில் நடக்கிறவர்களை குறிவைத்து, சாத்தான் எப்போதும் தாக்குதல்களை அனுப்பிக் கொண்டே இருப்பான். ஏனென்றால் நாம் கர்த்தருக்கு என்று எதையும் செய்ய துணிந்தவர்கள் என்றும், இவர்களை விட்டு வைத்தால் உலகத்தையே கலக்கிவிட்டு வந்துவிடுவார்கள் என்றும் அவனுக்குத் தெரியும், அந்த பயத்தினால், அவன் நம்மோடு போராடிக் கொண்டே இருப்பான்.

.
ஆனால் அவன் என்றும் தோற்றுப் போனவன். அவன் ஒரு நாளும் நம்மை

ஜெயங் கொள்வதில்லை. நாம் போராடி அவனை மேற்க் கொள்வோம். ஏனென்றால் ஜெயக்கிறிஸ்து நம் பக்கம் இருக்கிறார்.
.
நான் கர்த்தரை விசுவாசித்து, அவருடைய வழிகளில் நடக்கிறேன். ஆனால் எனக்கு எத்தனை சோதனைகள், எத்தனை பாடுகள்’ என்றுச் சொல்லுகிறீர்களா? யோபு தன் காலத்தில் வாழ்நதவர்களிலே தேவனே மெச்சிக் கொள்ளும் அளவு நீதிமானாய் வாழ்ந்தான். அவனையும் சாத்தான் விட்டு வைக்கவில்லை. அவனுக்குரிய எல்லாவற்றையும் தேனுடைய அனுமதியோடே பறித்துக் கொண்டான். ஆனால், கடைசி வெற்றி யாருக்கு? நிச்சயமாக யோபுவிற்குத்தான். கர்த்தர் யோபின் முன்னிலைமையைப் பார்க்கிலும் அவன் பின்னிலைமையை ஆசீர்வதித்தார்; பதினாலாயிரம் ஆடுகளும், ஆறாயிரம் ஒட்டகங்களும், ஆயிரம் ஏர்களும், ஆயிரம் கழுதைகளும் அவனுக்கு உண்டாயின. ஏழு குமாரரும், மூன்று குமாரத்திகளும் அவனுக்குப் பிறந்தார்கள். - (யோபு 42:12,13).ஆகவே சோர்ந்துப் போகாதீர்கள்! வெற்றி நமக்குத்தான்! நீங்கள் இழந்துப் போன எல்லாவற்றையும் திரும்பப் பெற்றுக் கொள்வீர்கள், ஆமென்! தேவன் நம்பட்சத்தில் இருக்கும்போது நமக்கு விரோதமாயிருப்பவன் யார்? – (ரோமர் 8:31)
.
ஆனால் நம்முடைய போராட்டம், நாம் காண்கிற மனிதர்களோடு அல்ல, வசனம் சொல்கிறது, ‘ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு’ - (எபேசியர் 6:12). நாம் காண்கிற மக்கள் அல்ல நம் எதிரிகள். அவர்களுக்கு பின்னாக இருந்து கிரியை செய்கிற பிசாசின் தந்திரங்களே நமக்கு எதிரிகள். நாம் சாதாரண மனிதர்களோடே சண்டையிட்டு, வழக்காடி எந்தப் பிரயோஜனமுமில்லை. ஆனால் அவர்கள் நமக்கு எதிராக வரும் போது, அவர்களுக்கு பின்னாக கிரியை செய்கிற அந்தகார சக்திகளை இயேசுவின் நாமத்தில் நாம் கடிந்துக் கொள்ள வேண்டும். ஆனால் அவர்களுக்கு முன்பாக அல்ல, மனதில் கடிந்துக் கொள்ள வேண்டும். நம் ஜெபங்களில் கடிந்துக் கொண்டு ஜெபிக்க வேண்டும். இயேசுவின் நாமத்தில் உள்ள வல்லமையால் அவைகள் தோற்கடிக்கப்பட்டு; பறந்தோடிக் போகும். எந்த பெரிய போராட்டம் என்றாலும் இறுதி வெற்றி நமக்கே! ஐயோ இப்படி ஆகிவிட்டதே என்று சோர்ந்துப போகாதிருங்கள்! இயேசுவின் நாமம் என்கிற பெரிய ஆயுதம் நம் கைகளில் உண்டு. அதற்கு மேலாக எந்த அதிகாரமும் இல்லை எந்த வல்லமையும் இல்லவே இல்லை. ஆமென் அல்லேலூயா!
.
அந்தகார வல்லமைகளை
தேவ பெலத்தால் முறியடிப்பேன்
இயேசுவின் நாமம் எந்தன் பாதுகாப்பு
பயமில்லை வெற்றி எனக்கே
என்றும் பயமில்லை வெற்றி எனக்கே