Sunday, October 30, 2011

உயர பறக்கும் அனுபவம்

உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை. - (1யோவான் 2:15).

தங்கள் வழக்கம் போல காட்டு வாத்துக்கள் குளிர் காலத்தில் தெற்கு நோக்கி பறக்க ஆரம்பித்தன. ஒரு V வடிவிலே பறப்பதை கீழே இருந்து பார்ப்பவர்களின் கண்களுக்கு விருந்தாக அவைகள் இருந்தன.
.
அந்த வாத்துகளோடு பறந்து கொண்டிருந்த சேனி என்ற வாத்து கீழே பார்த்தது. அப்பொழுது வாத்துக்களை வளர்க்கும் பண்ணை ஒன்றை கண்டது. அங்கு அநேக வாத்துக்கள் தங்களுக்கு கொடுக்கப்படும் சோளத்தை ஆவலோடு பொறுக்கி தின்று கொண்டிருப்பதை பார்த்தவுடன், அவைகளோடு தானும் சென்று உண்ண வேண்டும் என்கிற எண்ணம் அதற்கு உண்டாயிற்று. அந்த எண்ணம் வந்த உடன், அது மற்ற வாத்துக்கள் சொல்வது ஒன்றும் கேட்காமல், ஒரு டைவ் அடித்து, கீழே மற்ற வாத்துக்களுடன் சேர்ந்து கொண்டது. அவைகளோடு சேர்ந்து, சோளத்தையும், மற்ற தானியங்களையும் சாப்பிட ஆரம்பித்தது. அது நினைத்தது, 'திரும்ப என் கூட்ட வாத்துக்கள் வரும்போது, அவைகளோடு நான் சேர்ந்து கொள்வேன்' என்று.
.
கொஞ்ச மாதங்கள் கழித்து, அந்த கூட்ட வாத்துக்கள், மேற்கு நோக்கி வர ஆரம்பித்தன. கீழே இருந்த சேனி, அவர்களோடு சேர்ந்து கொள்ள வேண்டும் என்று எண்ணி, பறக்க ஆரம்பித்தது. ஆனால் அது அங்கு சாப்பிட்டு சாப்பிட்டு, எடை கூடி, அதனால் ஒரு குறிப்பிட்ட உயரத்திற்கு மேல் பறக்க முடியவில்லை. அது திரும்ப திரும்ப முயற்சித்தது. ஆனால் முடியவில்லை. அதன் கூட்டத்தில் இருந்த பறவைகள், அதை தாண்டி பறந்து சென்று விட்டன. சேனி, 'நான் மறுபடியும் இவர்கள் வரும்போது எப்படியாவது அவர்களோடு சேர்ந்து விடுவேன்' என்று எண்ணி கொண்டது.
.
அடுத்த முறையும் வந்தது. சேனி அவர்களோடு பறக்க ஆசைப்பட்டது. ஆனால் அதனால் பறக்க முடியவில்லை, காரணம் அதனுடைய எடையும், பறக்காமலேயே இருந்தபடியால் அதனுடைய சிறகுகள் சக்தியையும் இழந்து விட்டன. அதனுடைய தோழ வாத்துக்கள் ஒவ்வொரு முறையும் சேனியை அழைத்தபடி பறந்து கொண்டிருந்தன. ஆனால் சேனியால் திரும்பவும் பறக்கவே முடியவில்லை.
.
மாதங்கள் ஆக, ஆக தோழ வாத்துக்கள் கூப்பிட்டாலும், அது அதை கவனிக்காமற் போக ஆரம்பித்தது. அது தான் ஒரு முறை உயர பறந்த வாத்து என்பதை மறந்து, ஒரு பண்ணை வாத்தாகவே மாறி விட்டது.
.
நாமும் கூட உயர பறப்பதற்கே அழைக்கப்பட்டிருக்கிறோம். தேவனோடு உறவாடும்படியாக, அவர் வரும்போது அவரோடு மறுரூபமடைந்து, பறப்பவர்களாக மாறும்படியாகவே இந்த உலகத்தில் இருக்கும்போது அழைக்கப்பட்டிருக்கிறோம். ஆனால் எப்போது நம் கவனம் உலக காரியங்களில் ஈடுபாடு கொள்கிறதோ, அப்போது, நாம் நம் தரிசனத்தை இழந்தவர்களாக, அவைகளிலேயே சிக்கி கொள்கிறோம். மீண்டும் நாம் வரவேண்டும் என்று ஆசித்தாலும் வரமுடியாதபடி, அவை நம்மை இழுக்க ஆரம்பிக்கின்றன. உலக பாரங்களும், ஆசை இச்சைகளும் நம்மை மேலே பறக்க விடாதபடி தடை செய்து விடுகின்றன.
.
லோத்தின் மனைவி பின்னால் திரும்பி பார்க்காதே என்று எச்சரிக்கப்பட்டும், உலக இச்சைகளும், உலக இன்பங்களும் அவளை திரும்பி பார்க்க வைத்து விடுகின்றன. கர்த்தருக்கு பயந்த, கர்த்தரால் கைபிடித்து, அழிவிற்கு தப்ப வைக்கப்பட்ட குடும்பம், உலக ஆசையால், நினைத்து பார்க்கவே கூசும் அளவிற்கு பயங்கர பாவ வாழ்க்கைக்குள் கடந்து செல்ல வேண்டி வந்தது. அந்த மனைவி திரும்பி பார்க்காமல் இருந்திருந்தால், ஒரு அருமையான குடும்பமாக, ஒரு எடுத்துகாட்டான குடும்பமாக லோத்தின் குடும்பம் வேதத்தில் இருந்திருக்கலாம். ஆனால் உலகத்தின் மேல் வைத்த ஆசை அந்த குடும்பத்தையே நாசமடைய வைத்தது.
.
'உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்' என்று வேதம் நம்மை எச்சரிக்கிறது. அவைகளில் அன்பு வைத்தால் அந்த வாத்து எப்படி தான் ஆசைபட்டாலும் பறக்கவே முடியாமற் போயிற்றோ அந்த நிலை ஏற்படலாம். 'இப்பொழுது இருக்கிற வானங்களும் பூமியும் அந்த வார்த்தையினாலேயே அக்கினிக்கு இரையாக வைக்கப்பட்டு, தேவபக்தியில்லாதவர்கள் நியாயந்தீர்க்கப்பட்டு அழிந்துபோகும் நாள்வரைக்கும் காக்கப்பட்டிருக்கிறது' (2பேதுரு 3:7) என்று வேதம் கூறுகிறது. ஆகையால் ஒரு நாள் வானமும் பூமியும் அழிந்து போகும், இவை என்றும் நிலைத்திருப்பதில்லை. அதன் மேல் பற்று வைத்திருப்போர் நிலை என்னவாகும் என்பதை நாம் அறிவோம். கர்த்தர் மேல் நாம் பற்று வைப்போம், உலகத்தின் மேலும், அதின் ஆசை இச்சைகள் மேலும் நம் பற்றை வைக்காதபடி, கர்த்தர் வரும்போது நாம் அவரோடு பறக்கும்படியாக, எந்த உலக பாரங்களும், எந்த பற்றும் நம்மை தடை செய்யாதபடி நம்மை காத்து கொள்வோம். ஆமென் அல்லேலூயா!
.
சூழ்ந்து நிற்கும் சுமைகள்
நெருங்கி பற்றும் பாரங்கள்
உதறி தள்ளிவிட்டு
ஓடுவோம் உறுதியுடன்
..
கண்களை பதிய வைப்போம்
கர்த்தராம் இயேசுவின் மேல்
கடந்ததை மறந்திடுவோம்
தொடர்ந்து முன்செல்லுவோம்

Thursday, October 27, 2011

அருமையான குடும்பம் ஒரு அழகிய தோட்டம்

தன் மனைவியில் அன்புகூருகிறவன் தன்னில்தான் அன்புகூருகிறான். - (எபேசியர் 5:28ன் பின்பகுதி)

நீங்கள் ஒரு நாள் இரண்டு வீடுகளுக்கு போகிறீர்கள் என்று வைத்து கொள்வோம். ஒரு வீட்டில் உள்ள தோட்டம் அருமையானதாய் இருக்கிறது. அடுத்த வீட்டு தோட்டத்திலே எங்கு பார்த்தாலும் களைகளும், முட்செடிகளும், காய்ந்த புல்லுகளுமாயிருந்தது. இரண்டும் பக்கத்து பக்கத்து வீடுகள்தான். என்ன வித்தியாசம் பாருங்கள்! தேவன் பட்சபாதமுள்ளவராயிருந்து இவருக்கு அருமையான தோட்டத்தையும், அவருக்கு பிரயோஜனமற்ற தோட்டத்தையும் கொடுத்து விட்டாரோ? இல்லை. முதல் வீட்டிலுள்ள கணவனும், மனைவியும் அருமையான ஒரு தோட்டத்தை உருவாக்க அநேக மணி நேரங்கள் பிரயாசப்பட்டிருக்கிறார்கள். இந்த இரு தோட்டங்களும், இரு வேறு திருமண வாழ்வை சித்தரிக்கிற படம் போன்றது. ஒரு திருமணம் அருமையான ஒரு தோட்டம் போல் இருக்கிறது. அங்கேயும் அநேக களைகள் இருந்தன. ஆனால் அதையெல்லாம் அவர்கள் அன்றன்றே பிடுங்கி விட்டார்கள். ஒவ்வொரு முறையும் களைகள் முளைக்கும்போதே அவை பிடுங்கப்பட்டு விட்டன.
.
அதன் பொருள் என்னவென்றால், இருவரும் ஒருவருக்கொருவர் தங்கள் தவறுக்கு மன்னிப்பு கேட்ட தீவிரமாயிருந்தனர். பிரச்சனையை வளர விடவில்லை. அன்றைக்கே அப்பொழுதே மன்னிப்பு கேட்டு, அதை மறந்து அடுத்த காரியத்தை குறித்து பேச ஆரம்பித்து விட்டனர். ஆகவே தான் அவர்கள் திருமண வாழ்வாகிய தோட்டம் அருமையாக காணப்பட்டது.
.
தேவன் ஒவ்வொருவருக்கும் அருமையான தோட்டத்தை போன்று திருமண வாழ்க்கையை தருகிறார். அதை அழகாக ஒரு நல்ல கனி தரும் தோட்டமாக மாற்றுவது நமது கையில் தான் இருக்கிறது. அதற்காக நேரம் எடுத்து, தண்ணீர் பாய்ச்சி, எரு இட்டு, களைகளை பிடுங்கி வேலி அடைத்து காத்து கொள்ளும்போது, அந்த தோட்டம் நல்ல கனிதரும் மரங்களையும், செடிகளையும் கொடுத்து அருமையான தோட்டமாக மாறுகிறது. அதுபோல குடும்பத்திற்காக நேரம் எடுத்து, மனைவி பிள்ளைகளுக்காக நேரம் கொடுத்து, அவர்களின் தேவைகளை சந்தித்து, தேவையானவற்றை வாங்கி கொடுத்து, குடும்பமாக தேவ சமுகத்தில் காத்திருந்து ஜெபித்து, பிள்ளைகளுக்கு வேதத்தை குறித்து போதித்து, கர்த்தருடைய வழியில் நடத்தும்போது, அந்த குடும்பம் ஒரு அழகிய தோட்டமாக உருவாகிறது.
.
அதே சமயத்தில் களைகளை வளரவிட்டு, தண்ணீர் கூட பாய்ச்சாமல் இருந்தால் அந்த தோட்டத்தின் செடிகள் வளரவது எப்படி? ஒரு அன்பான வார்த்தைக்கூட பேசாமல் ஒரு கணவன் இருந்தால் அவனை நம்பி வந்த மனைவிக்கு எப்படி இருக்கும்? எப்போது பார்த்தாலும் கோபம், கோபம், எதற்கெடுத்தாலும் கையை ஓங்குதல் போன்றவை இருந்தால் அந்த குடும்பம் எப்படி அழகான தோட்டமாக இருக்க முடியும்? கிறிஸ்தவர்களாக இருந்தாலும் மனைவியை அடிக்கிற கணவர்கள் எத்தனை பேர்? உண்மையிலேயே வேதனையான விஷயம்! வீட்டிலே சாட்சியை காத்து கொள்ளாமல் வெளியே போய் சாட்சி சொன்னால் அது யாருக்கும் பிரயோஜனமாயிருக்காது.
.
குடும்ப வாழ்க்கையிலே எப்போது வேண்டுமானாலும் சமாதானத்தை குலைக்கும் காரியங்கள் ஏற்படலாம். பிரச்சனை, கசப்பு, கோபம் வரலாம். ஆனால் அவற்றை உடனே களைந்து, மன்னிப்பு கேட்க வேண்டி இருந்தால் கேட்டு, உடனுக்குடன் சரி செய்து விடும்போது, அது மீண்டும் சந்தோஷத்தை கொடுக்கும் வீடாக மாறுகிறது.
.
தன் மனைவியில் அன்புகூருகிறவன் தன்னில்தான் அன்புகூருகிறான் என்று வேதம் கூறுகிறது. நாம் நம்மில் அன்புகூருவதால்தானே, வேளாவேளைக்கு சாப்பிடுகிறோம், நம் உடல் நலத்தில் கவனம் செலுத்துகிறோம். அதை போலவே நாம் நம் மனைவியின் மீது அன்புகூர வேண்டும். திருமணத்திற்கு பின் கணவனும் மனைவியும் ஒரே மாம்சமாயிருக்கிறார்கள். கணவன் வேறு, மனைவி வேறு என்று இல்லை. ஆகவே ஒருவருக்கொருவர் செய்யும் தவறுகளை விட்டு கொடுத்து, மன்னித்து வாழும்போது, அந்த குடும்பம் ஒரு அழகிய தோட்டமாக மாறி விடுகிறது.
.
பிரியமானவர்களே, நாம் ஒருவரையொருவர் மன்னித்து விடாதிருக்கும் பட்சத்தில், களைகள் வளர்ந்து, முடசெடிகள் செழித்து, வளர்ந்து தோட்டத்தையே பாழாக்கி விடும். ஆகவே சூரியன் அஸ்தமிக்கும் முன்பாக நம் கோபம் மறையட்டும். மறுநாள் மறுநாள் என்று பிரச்சனையை இழுத்து கொண்டே போவாமானால், பிரச்சனைக்கு முடிவே வராது. வளரும் களைகளை அன்றே பிடுங்குவோம், பிரச்சனைக்கு உடனே முடிவு கட்டுவோம். தேவன் தாமே அதற்கு உதவி செய்வாராக. ஆமென் அல்லேலூயா!
.
நல்ல குடும்பம் நீர் தந்தீரையா
செல்ல பிள்ளைகள் தந்தீரையா
அணைக்கும் கணவரை தந்தீரையா
அன்பு மனைவியை தந்தீரையா
..
நன்றி தகப்பனே நன்மை செய்தீரே
நன்றி தகப்பனே நன்மை செய்தீரே

Wednesday, October 26, 2011

கிறிஸ்தவ விசுவாசிகளுக்கு சாத்தானின் கடிதம்


அனுப்புநர்:
சாத்தான்

அக்கினி வாசல்

எரிநரகம் 666
 
பெறுநர்
விசுவாசி,

மாயமாலக்கோட்டை

சிற்றின்பசாலை

பூலோகம்
அன்பான மகனே, மகளே
உனக்குள் என் ராஜ்யத்தை ஸ்தாபிப்பது மிகவும் கடினம் என்று எண்ணினேன்.ஆனால் என் வேலையை நீ மிக சுல‌பமாக்கினாய், அதிகாலையில் எழுந்தவுடன் முழ‌ங்காற்படியிட்டு ஜெபிக்கவேண்டிய நீ ஜெபிக்காமலேயே அன்றாட கடமைகளை செய்யத் துவங்கினாய்.முதலில் எனக்கு ஏற்பட்ட இந்த வெற்றி என்னுடைய பல வெற்றிகளுக்கு வித்திட்டதை எண்ணினால், எனக்கு எவ்வளவு மகிழ்ச்சியாய் இருக்கிறது தெரியுமா
வெரிகுட் கீப் இட் அப்
சாப்பிடுவதற்கு முன் ந‌ன்றி ஜெபம், வேலைக்கு கிளம்புவதற்கு முன் பாதுகாப்பு ஜெபம்…இப்படி ஏதாவது செய்துவிடுவாயோ என பயந்திருந்தேன். ஆனால் நீயோ அடுத்தடுத்து செய்யவேண்டிய வேலைகளை நினைத்தபடி பிஸியாக இருந்தாய்.தேவனிடத்தில் ந‌ன்றியில்லாத உன் இருதய‌மும் எளிதில் ப‌த‌ற்ற‌ம‌டைகிற‌ குண‌மும் தான் உன்னிட‌த்தில் எனக்கு மிகவும் பிடிக்கும்!
ஏய்! நீ தான் எனக்குக் கிடைத்த முத்தான சொத்து!
பல ப‌ரிசுத்த ஆவிக்குரிய கூட்டங்களில் கலந்துக் கொண்டு,எத்தனையோ புத்தகங்களை வாசித்து ந‌ல்ல கருத்துகளை தெரிந்துகொண்டும் மாற்ற -மில்லாமல் நீ தொடருகிறாயே, அது தான் என்னை மிகவும் கவர்ந்த குணம்.நீ நரகத்துக்கு வந்த பிற‌கு நாம் இருவ‌ரும் சேர்ந்து வாழுவதை விட,பூமியில் சேர்ந்திருக்கிறோமே என்னை பூரிப்பாக்குகிற உண்மை இது. நான் இருக்கிற இடத்திலே உன்னை சேர்ப்பதற்கு நான் எடுக்கிற எல்லா நடவடிக்கைகளும் உன் விஷயத்தில் வெற்றியாய் அமைவதை நினைத்தால் என் இருதயம் இன்பத்தால் நிரம்பி வழிகிறது தெரியுமா?
டிவியில் வருகிற தொடர் நாடகங்கள் பார்ப்பது, அவ்வப்போது சினிமா நிகழ்ச்சிகளை ரசிப்பது, மற்றவர்களைப் பற்றி தர‌க்குறைவான வார்த்தைகளை தாராளமாய் பேசுவது, உன் தலைமை அதிகாரியை மதிக்காமல் ந‌டப்பது போன்ற‌வை எல்லாம் என்னுடைய சிறப்பான ஆற்றலால் உனக்குள் நான் புகுத்திய காரியங்கள் என்பது மட்டும் என‌க்கு மகிழ்ச்சி அல்ல,இத்தனையும் செய்துங்கூட "கிறிஸ்தவன்" என்ற போர்வைக்குள் நீ மறைந்திருக்கிறாயே அதுதான் விசேஷம்!
ஆனால் எனக்கு ஒரே வருத்தம் என்னன்னா…நீ உலக வாழ்க்கையை முடித்து என்னிடம் நிரந்தரமாய் வந்தவுடன் உன்னை சந்தோஷமாய் வைக்கமுடியாதது தான். நான் இருக்கிற இடமே அக்கினிக் கடல் தானே.அதனால் தான் உன்னை இப்பவே சிற்றின்ப சாலையில் வைத்து சந்தோஷப்படுத்துகிறேன்.கிடைக்கிற சான்ஸை விட்டுவிடாதே!
அனுபவி நன்றாக அனுபவி
மரணத்திற்கு பின்னிருக்கிற நித்திய பரலோக வாழ்வைக் குறித்து எடுத்துக் கூறி,யாராவது உன்னை என்னிடமிருந்து பிரித்துவிடுவார்களோ என முன்பு நான் பயந்தது உண்டு.ஆகவே தான் நீ என்னுடைய ஆள் என்று வெளியே பிரபலமாகாதபடிக்கு உன்னை வெளிப்படையான கிறிஸ்த‌வ‌ நடைமுறைக‌ளை‌ப் பின்ப‌ற்றச் செய்தேன்.
பாவ‌ப் ப‌ழ‌க்க‌ங்களைத் தொட‌ர்ந்து பின்ப‌ற்றிய‌தால் நீ என்னிட‌ம் நிர‌ந்த‌ர‌மாய் வ‌ந்து சேருகிற‌ நாள் ச‌மீப‌மாகிவிட்ட‌து.நீ என்னிட‌ம் வ‌ந்துவிட்டால் பூமியில் என் ப‌க்க‌மிருந்து செய‌ல்ப‌ட‌ ஆள் தேவைப்ப‌டும்.ஆக‌வே இன்னும் நீண்ட‌ நாள் வாழ‌விருக்கிற‌ சிறுபிள்ளைக‌ளுக்குள்ளும் இளைஞ‌ர்க‌ளுக்குள்ளும் கெட்ட‌ சுபாவ‌ங்க‌ள் ப‌தியும்ப‌டி அவ‌ர்க‌ளுக்கு முன்பாக‌ கோப‌ப்ப‌டுகிறாய்,கீழ்த்த‌ர‌மான‌ வார்த்தைக‌ளைப் பேசுகிறாய்,ச‌ண்டையிடுகிறாய்,இன்னும் ப‌ல‌ தீய‌ செய‌ல்க‌ளில் ஈடுப‌டுகிறாய்.இப்ப‌டியெல்லாம் நீ செய்வ‌தால் அவ‌ர்க‌ளும் என் ப‌க்க‌ம் வ‌ந்துவிடுவார்க‌ள்.
அதும‌ட்டும‌ல்ல‌ என்னிட‌ம் வ‌ருகிற‌ பிள்ளைக‌ள் த‌ங்க‌ள் இள ர‌த்தத்தின் வ‌லிமையால் மேலும் ப‌ல‌ரையும் என் ப‌ணியில் இணைத்து விடுவார்க‌ள்.உன்னைக் குறித்து என் எதிர்பார்ப்பு இதுதான்.
ப்ளீஸ்…என‌க்காக‌ இதெல்லாம் செய்ய‌க்கூடாதா என்ன‌..?
நான் எத்த‌னை முறை உன்னைக் காப்பாற்றியிருக்கிறேன்,நீ பொய் சொல்லி, திருடி மாட்டிக் கொள்ள‌ வேண்டிய‌ இட‌த்தில்,உண்மையாய் வாழுகிற‌ வேறொருவரை மாட்டிவிட்டு உன்னைத் தப்புவித்திருக்கிறேன் அல்லவா?அதையெல்லாம் நினைத்துப் பார்த்து என‌க்கு நீ க‌ட்டாய‌‌ம் இந்த‌ உத‌வியைச் செய்!என் ச‌ந்தோஷ‌த்தை பரிபூர‌ண‌மாக்கு.ந‌ர‌க‌த்தினை உன் போன்றோரால் நிர‌ப்புகிற‌ என் ப‌ணி ந‌லிவின்றி தொட‌ர‌ உன் த‌ய‌வை நாடுகிறேன்.
தேங்க்யூ பை,பை,சீ,யூ..!
இப்ப‌டிக்கு,
ச‌ங்கார‌ப் ப‌ணியில்,
சாத்தான்

ஜெபத்தைக் கேட்கிறவரே

நம்முடைய கர்த்தர் நமது எல்லா ஜெபங்களுக்கும் பதில் அளிக்கிறார். ஒரு சில சமயங்களில் அவர் "ஆம்", "இல்லை" அல்லது "காத்திரு" என்று சொல்கிறார்.


நாம் நம்முடைய பாவங்களை மறைத்து வைத்திருந்தால் அது நம்முடைய ஜெபத்தின் பதிலுக்கு ஒரு தடையாக அமையும். சங்கீதம் 66:18ல் "என் இருதயத்தில் அக்கிரமசிந்தை கொண்டிருந்தேனானால், ஆண்டவர் எனக்குச் செவிகொடார்" என்று வாசிக்கிறோம். இன்னும் சில சமயங்களில் நம்முடைய ஜெபமானது சுயநலமாகவும், தேவனை மகிமைபடுத்தாமல் இருந்தாலும் அப்படியாகும். சில சமயங்களில் தேவன் நம்முடைய வேண்டுதலுக்கு பதில் தந்தால் நாம் மிகவும் துக்கமுடையவர்களாக காணப்படுவோம் என்று அவர் அறிந்திருப்பின் பதில் தராமல் இருப்பார்.
வேதாகமத்தில் ஒன்று தெளிவாகக் காண்கிறோம். தேவன் எப்பொழுதெல்லாம் ஜெபத்திற்கு பதில் கொடுத்தாரோ அப்போதெல்லாம் "சந்தோஷத்தின் நிறைவைக்" காண்கிறோம்.

"கேளுங்கள் உங்களுக்கு கொடுக்கப்படும்" என்று மட்டும் சொல்லாமல் "கேளுங்கள், அப்பொழுது உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி பெற்றுக்கொள்வீர்கள்" என்று தெளிவாக வாசிக்கிறோம். வேதாகமெங்கிலும் தானியேல், தாவீது, பவுல் என்று ஜெபித்தவர்கள் எல்லாரையும் இதற்கு உதாரணமாக வைக்கலாம்.

இஸ்ரவேல் ஜனங்கள் வனாந்தரத்தில் "எங்களுக்கு புசிக்கும்படி இறைச்சியை தாரும்" என்று மோசேயிடம்
முறுமுறுப்புடன் மன்னாவை விட்டு இறைச்சியை இச்சித்து கேட்டனர். தேவன் அதற்கு பதில் கொடுத்தாலும் அங்கே ஒரு பெரிய அழிவினை கொண்டுவந்தது.

இப்படியாக ஒரு உண்மைச் சம்பவம் உண்டு. ஒரு தந்தைக்கு மூன்று பெண்பிள்ளைகள் இருந்தனர். அவர் தனக்கு ஒரு மகன் வேண்டும் என்று கேட்டார். கர்த்தரோ தெளிவாக அவரிடம், "இல்லை, உனக்கு மகனைக்கொடுப்பது என்னுடைய சித்தமல்ல, உன்னுடைய மகள்களே உனக்கு ஒரு மகனைக் காட்டிலும் பெரிதாக இருப்பார்கள்" என்றார். இருப்பினும் தந்தை ரொம்பவே உபவாசித்து, வருத்தி மிகவும் ஜெபித்து கேட்டார். இறுதியாக தேவன் அவருக்கு ஒரு மகனைக் கொடுத்தார். ஆனால் அந்த மகன் குடிகாரனும் கெட்டகுமாரனுமாக மாறிபோனான். தந்தைக்கோ வயதாகியது, இருதயம் உடைந்து வேதனையுடன் ஏன் தேவனை தொல்லை செய்து ஒரு மகனை கேட்டோம் என்று வருத்தத்துடன் இருந்தார். தன் மகன் நரகத்துக்கு போவான் என்பதை அவரால் நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை. ஆனால் தேவன் சொன்னபடியே அவருடைய வயதான காலத்தில் அவருடைய மகள்கள் அவரை ஒரு மகன் செய்வதைவிட மேலாகவே கவனித்தனர்.

இதை வாசிக்கும் தேவனுடைய பிள்ளையே, நமது ஜெபங்கள் ஒருவேளை நம்முடைய பார்வைக்கு நன்றாக தோன்றலாம், அவைகளுக்கு பதில் இல்லாமல் இருக்கலாம். தேவன் ஒருவேளை உங்களை ஏழையாக வைத்திருக்கலாம் அதேசமயம் தேவபயமின்றி வாழும் ஒருவன் ஐசுவரியவானாக இருக்கலாம். உங்களுக்கு வரவேண்டிய பதவி உயர்வுகள் தடைபட்டு, மற்றவர்கள் மேலே செல்வது உங்களுக்கு வருத்தமாக இருக்கலாம். இவைகள் எல்லாவற்றிலும் நாம் தேவனை கேள்வி கேட்பதையும், முறுமுறுப்பதையும் விட்டுவிட்டு, பதில் கிடைக்காத ஜெபங்களுக்காக தேவனுக்கு நன்றியுடன் ஸ்தோத்திரம் செலுத்துவோமாக.

ஏனெனில் இறுதியில் உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கவேண்டும் என்பது தேவனுடைய நோக்கமாயிருக்கிறது.

Saturday, October 22, 2011

பைபிளின் ஆறாம் நாளும் அறிவியலும் (பாகம்2) மனிதன் உருவாக்கம்

 
அன்பானவர்களே இன்று நாம் மிக முக்கியமான காரியத்தை தியானிக்கப்போகிறோம். ஆம் அது மனிதனைப் படைத்ததுதான்.

பைபிளில் ஆதியாகமம்1:27-ல் இது குறித்து நாம் வாசிக்கிறோம். மனிதன் தேவசாயலாகவும், தேவனுடைய ரூபத்தின்படியாகவும், மண்ணால் உருவாக்கப்பட்டான் என்று நாம் காண்கிறோம்.

முதலாவது தேவசாயல் என்ன என்பதைக் குறித்து ஆராய்வோம் தேவனுடைய சாயல் திரித்துவம் ஆகும். தேவன் எப்படி பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்று திரியேகராய் இருக்கிறாரோ அப்படியே மனிதனும் உண்டாக்கப்பட்டான். அதாவது ஒரு மனிதன் மாம்சத்தின் படி குமாரனாகவும், ஒவ்வொரு மனிதனுக்கும் இயல்பாக இருக்கும் ஒருவித மின்னோட்டம், ஆவியாகவும், ஆதியாகமம் 2:7ல் சொல்லப்பட்ட படி பிதாவின் அதாவது எங்கும் நிறைந்தவரின் சுவாசம் ஊதப்பட்டவுடன் மனிதன் ஜீவ ஆத்துமாவானான். இதுவே தேவ சாயல் ஆகும்.

தேவரூபம் என்பது மனிதனின் கடவுளின் ரூபத்திற்கொத்த மனிதவடிவம் ஆகும்.

மனிதன் எதற்காக உருவாக்கப்பட்டான்?

இந்த கேள்விக்கான விடை இன்று பெரும்பாலாவர்களுக்குத் தெரிவதில்லை, மனிதன் இந்த பூமியை ஆண்டுகொள்வதற்கு மாத்திரமல்ல(ஆதி 1:28). அவன் உருவாக்கப்பட்ட நோக்கம் நாம் இந்த படைப்பின் இரகசியங்கள் தொடரில் முன்னமே கண்ட சாத்தானானவனை வெட்கப்படுத்தவே மனிதன் இந்த பூமியில் உண்டாக்கப்பட்டான் (தீத்து2:8)

இது எப்படியெனில் உலகத்தில் வந்து விழுந்த சாத்தானால் டைனோசர்கள் போன்ற விலங்குகள் அழிந்த வரலாற்றை முன்னமே நாம் கண்டோம். அதன் பின்பு பூமி மீண்டும் சீறமைக்கப்பட்ட வரலாற்றையும், கண்டுவருகிறோம். அதன் தொடர்ச்சிதான் மனிதனின் சிரிஷ்டிப்பும் ஆகும்.

ஆனால் பூமியில் வந்து விழுந்த அந்த சாத்தான் எங்கேயும் போய்விடவில்லை அவன் பூமி முழுவதும் சுற்றிவருகிறான் என்று வேதம் சொல்லுகிறது( யோபு1:7).

அப்படிப்பட்ட சாத்தான் தேவ சாயலாக உண்டாக்கப்பட்ட மனிதனை அனேக தவறுகளுக்கு நம்மை ஆட்படுத்துகிறான்,

பரினாமக் கொள்கை சொல்லும் மனிதனின் உருவாக்கம்

அப்படிப்பட்ட தவறுகளில் ஒன்றுதான் மனிதன் குரங்கிலிருந்து மனிதன் உண்டானான் என்ற கொள்கையும் ஆகும். இதற்கு முந்தின பத்தியைப் படியுங்கள். உங்களுக்கு சாத்தானின் தந்திரங்கள் உங்களுக்கு முழுமையாகப் புரிந்துவிடும்.

அதாவது தேவசாயலான மனிதனை, நீ குரங்கிலிருந்து பிறந்தவன் என்று சொல்லி நம்மை நம்பவைத்து ஏமாற்றியதின் மூலம் தேவசாயலைக் குரங்கின் சாயல் என்று சொல்லிவிட்டான். (இதைப் படிக்கும் பரிணாமக் கொள்கையை ஆதரிப்போர் குரங்குகள் மனிதனாக மாறியிருந்தால், இன்று இருக்கும் குரங்குகள் எதாக இருந்து இன்று குரங்குகளாக மாறின என்று விளக்குவார்களாக).

அப்படியானால் இந்த சாத்தான் யார்? அவன் மனித வாழ்வில் எப்படி இடைபடுகிறான்? அவனை வெல்ல என்ன வழி? இந்த உலகத்தின் முடிவு என்ன? இது போன்ற கேள்விகளுக்கு அடுத்துவரும் பதிவுகளில் விரிவாக ஆராய்வோம் காத்திருங்கள்...............
 
Thanks : Bible Uncle

பைபிளின் ஆறாம் நாளும் அறிவியலும் (பாகம்-1)

அன்பானவர்களே இன்று நாம் பைபிளில் மிருகங்கள் மற்றும் ஊரும் பிரானிகள், முக்கியமாக மனிதன் உருவாக்கப்பட்ட வரலாற்றை அறிவியல் நோக்கோடு ஆராயவிருக்கிறோம். இதை பைபிளில் ஆதியாகமம் 1;24-31 வரையுள்ள வசன்ங்களில் வாசிக்கலாம். 
 
இதுவரை நாம் பார்த்த காரியங்களின் படி முதலாவது தாவரங்கள், நீர்வாழ் உயிரினங்கள், பறவைகள் அதற்குப் பின்புதான் தரை வாழ் உயிரினங்கள் உண்டாகின. நமது ஆண்டவர் தரைவாழ் உயிரின்ங்களை மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கிறார், அவை ஊர்வன, நாட்டு மிருகங்கள், காட்டு மிருகங்கள், ஆகியவைகள் ஆகும்.
பரினாமக் கொள்கைக்காரர்கள் விலங்குகள் எல்லாம் காட்டில் தான் இருந்தன என்றும், மனிதன் நாகரீக வளர்ச்சியடைந்த பின்பு தன் உதவிக்காக சில மிருகங்களை தன் அருகில் தன் வேலைக்காக வைத்துக் கொண்டான் இதன்படியே நாட்டு மிருகங்கள் தோன்றின. என்று சொல்லுவார்கள்.
 
ஆனால் பைபிள் ஒரு சம்பவத்தை யோபுவின் புத்தகத்தில் விவரிக்கிறது (யோபு 39;10) காண்டாமிருகம் நல்ல வலிமையான விலங்குதான், மனிதா நீ அதை எருதுக்கு பதிலாக ஏரில் பூட்டி நிலத்தை உழுவாயா? என்று சவால் விடுகிறார். மேலும், நரி, கரடி, கழுதைப்புலி, செந்நாய்க் கூட்டம், போன்ற விலங்குகள் என்னதான் முயற்சி செய்தாலும் அவைகள் மனிதனுடன் பழகவோ நட்பு பாராட்டவோ மறுக்கின்றன என்று சொல்லுகிறார்கள். இதற்கு பைபிள் அழகாக பதில் சொல்லுகிறது. ஆம் அவைகள் காட்டில் வாழ்வதற்காகவே கடவுள் உண்டாக்கினார் என்று ஆனால் ஆடு, மாடு, கழுதை, ஒட்டகம், பூனை நாய் முதலியவைகள், நாட்டு மிருகங்கள் இவைகள் மனிதனுக்கு உதவிசெய்யவும், வீட்டில் வளர்க்கவும் உண்டாக்கப்பட்டன. ஆனாலும் கடவுள் மனிதனுக்கு அனைத்து மிருகங்களின் மீதும் அடக்கியாளும் அதிகாரத்தைக் கொடுத்தார்.(ஆதி 1;26)
இதைத்தான் நாம் இன்று காண்கிறோம், யானை, புலி சிறுத்தை சிங்கம் போன்ற விலங்குகள் எல்லாம் இன்று மனிதனால் அடக்கியாளப்படுகின்றன. 
 
முதுகெலும்பில்லதவை, முதுகெலும்பு உள்ளவை,
பரினாமக் கொள்கைக்காரர்கள் கணக்குப்படி மெல்லுடலிகள் (முதுகெலும்பில்லாதவைகள்) வாழ்ந்த காலமான காம்பிரியன் பாறை (100 கொடி ஆண்டுகள்) காலத்து படிமங்களைலும், டினோசர்(Dionosaur), பிராண்டாசாரஸ் முதலிய அழிந்து போன மிருகங்கள் வசித்த மிருகங்கள் வசித்த கிரிடாஷியஸ் யுக (20 கோடி ஆண்டுகள்) காலப் பாறைபடிமங்களில் ட்ரயாசிக் யுகத்தில் (40 கோடி ஆண்டுகள்) வாழ்ந்த சில ஊரும் பிரானிகளும் வாழ்ந்த அந்தக் காலத்திலேயே இக்கால மனிதனுக்கு ஒப்பான படிமங்கள் கிடைத்துள்ளன அப்படியானால் 40 கோடி ஆண்டுகளுக்கு முன்னதாகவே மனிதன் இருந்ததாகக் ஒரு பேச்சுக்கு வைத்துக்கொண்டாலும், அன்றைய டைனோசர்கள் இன்று பறவைகளாக மாறிவிட்டன என்றால் மனிதன் ஏன் மாறாமல் இருக்கிறான்? என்ற கேள்வி எழுகிறது அல்லவா? (இது பற்றிய மேலதிக விவரம் அறிய படைப்பின் இரகசியங்கள் தொடரின் ஆரம்ப கட்டுரைகளைப் படிக்கவும்).
 
இனி மனிதன் உருவான வரலாற்றைப் பார்ப்போம் இதன் இரண்டாம் பாகத்தில் விரிவாகப் பார்ப்போம்... காத்திருங்கள்..............


 Thanks : Bible Uncle
http://bibleuncle.blogspot.com