Friday, January 6, 2012

மாறாத கர்த்தரின் அழைப்பு


நான் உன்னை அனுப்புகிற எல்லாரிடத்திலும் நீ போய், நான் உனக்குக் கட்டளையிடுகிறவைகளையெல்லாம் நீ பேசுவாயாக. - (எரேமியா 1:7).
.
அமெரிக்காவின் நியூஜெர்சியில் 1270ஆம் ஆண்டு பாய்மரக்கப்பல் ஒன்று கடற்பாறையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் அநேகர் மாண்டனர். உயிர் தப்பிய ஒரு சிலரில் மரே என்ற குருவானவர் ஒருவரும் ஆவார். இதில் அவரது மனைவி, பிள்ளைகள் எல்லாரும் மரித்து விட்டார்கள். ஒரு புதிய தீவில் கரை சேர்ந்த அவரால் அந்த துயர சம்பவத்தை தாங்க முடியவில்லை. தான் அனாதை ஆவதற்கு ஆண்டவர்தான் காரணம் என்று ஆண்டவரை மறுதலித்து. அப்புதியத்தீவில் வாழ்நாளை கழிக்கவும், மனம் போல் வாழவும் தீர்மானித்தார்.
.
கலக்கம் நிறைந்தவராய் தெருவில் சென்றபோது ஒரு மனிதன் எதிர்ப்பட்டான். அவன் அவரை நோக்கி, ' உமக்காக காத்து கொண்டிருக்கிறேன்' என்றான். 'என்னை உமக்கு தெரியுமா' என்று கேட்டார் மரே. 'ஐயா, இயேசுவை பற்றி நான் சிறிது அறிந்து வைத்துள்ளேன். என் மனைவி வேத வசனங்களை வாசித்து எனக்கு சொல்லுவாள். எனது வீட்டில்தான் சபையாக கூடி ஆண்டவரை ஆராதிக்கிறோம். ஆனால் வேதத்தை பற்றி போதிக்கவோ, பிரசங்கிக்வோ எங்களில் யாரும் கிடையாது. ஆகையால் எங்களோடு நிலையாக தங்கி இருந்து ஊழியம் செய்யும் போதகரை தாரும் என நீண்ட நாட்களாக ஜெபித்து வந்தோம். நேற்றிரவு எங்கள் சபையில் ஒருவருடைய தரிசனத்தில், 'கப்பற் சேதத்தில் தப்பி பிழைக்கும் குருவானவர் ஒருவரை உங்களுக்கு ஊழியராக அனுப்பியுள்ளேன்' என இயேசுகிறிஸ்து வெளிப்டுத்தினார். அதே போன்று நீங்கள் வந்துள்ளீர்கள்' என்றான். இதை கேட்ட மரே அவர்கள் கர்தருடைய வழிநடத்துதலை அறிந்து அங்கேயே தங்கி பணி செய்தார். தனக்கு வந்த பாடுகள், பிரச்சனைகளின் காரணத்தை இந்த தேவமனிதரால் அந்த பாடுகளின் நேரத்தில் அறிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் அவற்றின் மத்தியிலும் தேவன் அவரை அழைத்த அழைப்பில் உறுதியாயிருந்தார். ஏனெனில் 'தேவனுடைய கிருபைவரங்களும், அவர்களை அழைத்த அழைப்பும் மாறாதவைகளே' - (ரோமர் 11:29). மனிதன்தான் கர்த்தர் தன்னை அழைத்ததை மறந்து அல்லது பாடுகள் போராட்டங்கள் வரும்போது அவரது அழைப்பை அசட்டை பண்ணி விடுகிறான். ஆனால் தேவன் நம்மை ஒருவிசை அழைத்தால் அந்த அழைப்பு என்றும் மாறாததே! அல்லேலூயா!
.
யோனாவின் சரித்திரத்தை பார்க்கும்போது, கர்த்தர் யோனாவை நினிவேக்கு போய் அங்கு பிரசங்கிக்கும்படி கூறுகிறார். யோனா நினிவேயில் வாழ்கிற மக்கள் மிகவும் மோசமானவர்கள், மனம்திரும்ப மாட்டார்கள், தன்னை கொன்று விடுவார்கள் என்று பயந்து, தர்ஷீசுக்கு போக தொடங்குகிறார். ஆனால் தேவனுடைய திட்டம் யோனாவை கொண்டுதான் நினிவேயை இரட்சிக்க வேண்டும் என்பதாயிருந்தது. ஆகவே யோனா தர்ஷீசுக்கு போக எத்தனித்தாலும், கடலில் புயலை வரவழைத்து, கடலில் தூக்கி எறியப்பட்டு, ஒரு மீனினால் விழுங்கப்பட்டு, அசாதாரணமான காரியங்களை செய்து, கர்த்தர் யோனாவை நினிவேக்கு கொண்டு வந்து, சுவிசேஷத்தை சொல்ல வைக்கிறார். ஆம், அவர் உங்களை கொண்டு செய்ய நினைத்திருக்கிற காரியத்தை உங்களை கொண்டுதான் செய்ய வைப்பார். அதில் மாற்றம் எதுவுமே இருக்காது. நாம் மாற்ற நினைத்தாலும், சர்வவல்லமையுள்ள தேவனின் திட்டத்தில் நாம் இருந்தால், அவருடைய சித்தம் மாத்திரமே நிறைவேறும்.
.
தேவ ராஜ்யத்தின் பணிக்கென ஏதாவதொரு விதத்தில் ஊழியம் செய்யும்படி தேவன் உங்களிடம் பலமுறை பேசியிருக்கலாம், ஆனால் நீங்கள் பல காரணங்களால் தேவ சித்தத்தை தவிர்த்து, தப்பவேண்டும் என்று நினைத்திருக்கலாம். ஆனால் தேவன் உங்களை தவிர்க்க போவதில்லை. உங்களை கொண்டு என்ன செய்ய வேண்டும் என்று அவர் நினைத்திருக்கிறாரோ அந்த காரியத்தை அவர் உங்களை கொண்டுதான் செய்யப்போகிறார்.
.
தேவாதி தேவனுடைய மாபெரும் கட்டளைக்கும் சித்தத்திற்கும் நம்மை அர்ப்பணித்து இந்த புதிய வருடத்தில் தேவன் நம்மை செய்ய சொல்லியிருக்கும் காரியத்தை செய்ய நம்மை ஒப்புக்கொடுப்போம். ஒருவேளை தள்ளி போட்டு கொண்டே இருந்தோமானால், யோனாவை போல மீனின் வயிற்றில் இருந்தபோது அவருக்கு ஞானோதயம் வந்தது போல் நம் வாழ்விலும் நம்மை அவருடைய சித்தத்திற்கு கீழ்ப்படிய வைக்க தேவன் சில காரியங்களை அனுமதிக்கலாம். அவருடைய சித்தத்திற்கு கீழ்ப்படிவோம். அவருடைய ஆசீர்வாதங்களை பெற்று கொள்வோம். ஆமென் அல்லேலூயா!
.
உயிர் வாழும் நாட்களெல்லாம்
ஓடி ஓடி உழைத்திடுவேன்
அழைத்தீரே உம் சேவைக்கே
அதை நான் மறப்பேனோ
..
எஜமானனே என் இயேசு ராஜனே
எண்ணமெல்லாம் என் ஏக்கமெல்லாம்
உம் சித்தம் செய்வதுதானே

0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment